திருக்குறள்

சொல்லின் செல்வர்!


''தம்பி! நீ யாரைப் பார்க்க விரும்புகிறாய்?''

''வங்கத்துப் புரட்சி வீரர் ஷியாம் சுந்தர் சக்கரவர்த்தியை.''

'இதற்கு முன்னர் அந்த மனிதரைப் பார்த்திருக்கிறாயா?''

''இல்லை. ஆனால் இறைவனின் சந்நிதானத்தில் பக்தன் நிற்பதுபோல், இப்போது அவர் முன்னிலையில்தான் நின்றுகொண்டிருக்கிறேன்.''

''தம்பி, உன் உள்ள உறுதியைப் பாராட்டுகிறேன். எங்கள் ரகசியப் புரட்சி இயக்கத்தில் சேருவதென்றால் சாவோடு விளையாடுவதாகும். பலிபீடத்தில் தலை சாய்க்கத் தயாராக இருப்பவர்கள்தாம் எங்கள் பாசறைக்கு வருவார்கள்.''

''அதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன். துப்பாக்கி தூக்க வேண்டுமா? வெடிகுண்டு வீச வேண்டுமா? கட்டளையிடுங்கள்!''

''உன் பெயரென்ன?

''சையத் மொகய்தீன். என் தந்தை பெயர் மௌலானா கைய்ருதீன். என் தாத்தாவின் பெயர் மௌலானா முன்வருதீன்.''

''ஓ, நீ பெரிய வீட்டுப்பிள்ளை. உங்கள் குடும்பம் அக்பர் காலத்திலி ருந்தே புகழ்பெற்றதப்பா! உன் தந்தை ஞானக்கடல். உன் தாத்தா அரபு இலக்கியத்தில் அகிலமறிந்த மேதை! தம்பி, தயவுசெய்து போய்விடு. நீ என்னைச் சந்தித்த செய்தி தெரிந் தாலே போலீஸ் ஒற்றர்கள் உன்னைப் பின்தொடர்வார்கள். வேண்டுமானால் நீ விடுதலை இயக்கத்தின் ஆதர வாளனாக இரு.''

''மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யத்தில் என் மூதாதையர் உயர்ந்த பீடத்தை அலங்கரித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இன்று எனக்கு மட்டும் தேச பக்தி இருக்காதா, இருக்கக்கூடாதா என்ன? இஸ்லாமி யர்களின் புனித ஸ்தலமான மெக்கா வில்தான் நான் பிறந்தேன். ஆனால் இது என் ஜென்ம பூமி. என்னை நீங்கள் ஓய்ந்திருக்கச் சொல்வது, 'புயலே ஓய்ந்திரு; ஆர்ப்பரிக்கும் கடலே தலை சாய்ந்திரு' என்று கூறு வது போல் இருக்கிறது.''

''சிங்க இளைஞனே! இப்படி உன் சிந்தையில் தேசபக்தி ஊற்றெடுக்கக் காரணம் என்ன?''

''காரணமா? அதைத்தான் வைஸ்ராய் கர்ஜான் தோரணமாகக் கட்டி வைத்திருக்கிறானே! பெற்ற தாயை வெட்டிப் பிளப்பதுபோல் வங்க மாநி லத்தைப் பிளக்கிறானே! இந்துக்க ளுக்கு ஒரு மாநிலமாம், இஸ்லாமியர்களுக்கு ஒரு மாநிலமாம்! இருவ ரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சோதரர்களே! இரண்டு கண்களுக்கும் இடையே பரங்கியர் பள்ளம் பறிப் பதை எப்படி அனுமதிக்கமுடியும்?''

இத்தகைய நீண்ட உரையாடலுக் குப் பின்னர், அந்த இளைஞன் சையத் மொகய்தீன் அன்றைய வங்க விடுதலை இயக்கத்தின் தீப்பொறி ஷியாம் சுந்தர் சக்கரவர்த்தியைப் பின் தொடர்ந்து சென்றான்.

அவர்தான் அபுல்கலாம் ஆஸாத். 'அபுல் கலாம்' என்றால் 'சொல்லின் செல்வர்' என்று பொருள். 'ஆஸாத்' என்பது விடுதலையைக் குறிக்கும்.

(14.8.66)
நன்றி > விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற