திருக்குறள்

மைக்கேல் ஜாக்சன்...


""மீண்டும் ஒரு முறை உலகத்தை வலம் வரப்போகிறேன்''’’-தன் விருப்பத்தை மைக்கேல் ஜாக்சன் சமீபத்தில்தான் வெளியிட்டிருந்தார். ஆனால், இயற்கையின் விருப்பம் வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. அந்த "அழகான ராட்சஷன்' இப்போது உயிரோடு இல்லை. மேற்கத்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாப் இசையில் கறுப்பினத்தவரான ஓர் ஆப்ரோ- அமெரிக்கன் ஜொலிப்பதென்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், வெள்ளை அமெரிக்கர்கள் தன் பின்னால் திரளும்படி மயக்கும் இசையாலும் நடனத்தாலும் கலாச்சார புரட்சியை ஏற்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன். அவரது பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியில் விழும் முடியுடன் கூடிய பெண்மை கலந்த முகமும், கால்களில் இயந்திரமோ மந்திரமோ இருக்கிறது என யோசிக்கவைக்கும் நடன அசைவுகளுமே இசை ரசிகர் களின் மனக்கண்ணில் தோன்றும். பெரும் புகழும் பெயரைக் கெடுக்கும் சர்ச்சைகளும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.


அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள கேரி என்ற இடம்தான் கிடாரிஸ்ட்டாக இருந்த ஆப்ரோ-அமெரிக்கரான ஜோசப்பின் வசிப்பிடம். கேத்தரினை கல்யாணம் செய்துகொண்டபின், இந்த மியூசிக்கெல்லாம் சோறுபோடாது. ஒழுங்கா வேலையைப் பார் என்ற மனைவியின் அதட்டலுக்கு கட்டுப்பட்டு கிட்டாரை பரணில் போட்டுவிட்டவர் ஜோசப்.தனக்கு வாய்க்காமல் போன இசைப்பயணம் தனது 9 குழந்தைகளுக்கும் வாய்க்க வேண்டும் என விரும்பினார். ஒன்பது பேரில் ஏழாவது குழந்தைதான் மைக்கேல் ஜாக்சன். 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ல் பிறந்தவர்.


சின்ன வயதில் அப்பாவிடம் சரியாக உதை வாங்குவது ஜாக்சனின் வழக்கம். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை அடிப்பதும், காலைப்பிடித்து தலைகீழாகத் தூக்கிச் சுழற்றுவதும் அப்பாவின் பழக்கம். இதனால் பெற்றோர் மீது பெரியளவில் பாசம் காட்டாத ஜாக்சன், இசையில் மட்டும் கவனம் செலுத்தினான். 5 வயதில் ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் ஜாக்சன் பாட, ஒரு தேர்ந்த பாப் பாடகர் போல இந்தப் பொடியன் இத்தனைத் துல்லியமாகப் பாடுகிறானே என எல்லோருக்கும் ஆச்சரியம். ஜாக்சன் சகோதரர்கள் இணைந்து நடத்திய இசை-நடன நிகழ்ச்சிகள் அப்பகுதியில் பிரபலமாயின. சகோதரிகளும் இதில் கலந்து கொள்வார்கள்


10 வயதில் தனி ஆளாக மேடையில் கலக்கும் அளவுக்கு ஜாக்சனின் திறமைகள் பாப் உலகை மிரள வைக்க, 1979-ல் "ஆஃப் த வால்' என்ற தன் முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார் மைக்கேல் ஜாக்சன். அதிலிருந்தே புகழும் சர்ச்சைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நடன நிகழ்ச்சியின்போது, அவர் கீழே விழுந்ததால் மூக்கில் அடிபட்டது. அதை சரிசெய்ய பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஜாக்சனுக்கு, தன் முகத்தை சீரமைத்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மீது ஆர்வம் ஏற்பட்டது. 4 பிளாஸ்டிக் சர்ஜரிகளையும் வேறு பல ஆபரேஷன் களையும் செய்துகொண்ட மைக்கேல் ஜாக்சனின் முகமும் நிறமும் மாற்றம் பெற்றது. ஒபாமாவைப் போன்ற ஆப்ரோ-அமெரிக்கரான ஜாக்சன், ஜார்ஜ்புஷ் போன்ற வெள்ளைக்காரர்கள் போல தன் நிறத்தை மாற்றிக்கொண்டார்.


எனக்குத் தோலில் ஒரு வித நோய் இருக்கிறது. அதனால்தான் இந்த நிற மாற்றம் என ஜாக்சன் சத்தியமடித்துச் சொன்னாலும் ரசிகர்கள் நம்பவில்லை. கறுப்பு நிறத்தில் இருப்பதை ஜாக்சன் விரும்பாததால், ஆக்ஸிஜன் சேம்பர் ஒன்றை உருவாக்கி அதற்குள் உட்கார்ந்து கொண்டு நிறத்தை மாற்றுகிறார் என்றும் பலவிதமான நவீன சிகிச்சைகளை செய்து கொள்கிறார் என்றும் ரசிகர்களிடம் பேச்சு எழுந்தது. நிறத்தை மாற்றிக்கொள்ள நினைப்பது ஒரு வித மனநிலை என்றனர் ஜாக்சனின் டாக்டர்கள்.


இந்த சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் நடனத்திலும் எவரும் தொடமுடியாத சிகரங்களில் அவர் ஏறிக்கொண்டேயிருந்தார். 1982-ல் வெளியான மைக்கேல் ஜாக்சனின் "திரில்லர் ஆல்பம்' அவரை உலக சூப்பர் ஸ்டாராக்கியது. வெளியிட வெளியிட விற்றுக் கொண்டே இருந்தன ஆல்ப பிரதிகள். பாப் பாடல் தர வரிசைப் பட்டியலில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக "திரில்லர்' ஆல்பமே முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சி யிருந்தது. இசையுலகின் பெருமைக்குரிய விருதான "கிராமி அவார்டு'களை வாங்கிக் குவித்தது. ஓர் ஆல்பத்தின் விற்பனைத் தொகையில் 37 சதவீதத்தை ராயல்டியாகப் பெற்ற பெருமையும் ஜாக்சனுக்கே கிடைத்தது. "திரில்லர்' ஆல்பத்தின் மெகா வெற்றியால் ஜாக்சனின் நேரடி நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். எந்த நாட்டுக்கு அவர் சென்றாலும் அவரை ரசிகர்களின் அன்புப்பிடியிலிருந்து பாதுகாப்பது அந்த நாட்டு போலீசாருக்கு பெரும் சவாலானது.


1983-ல் ஒரு நேரடி நிகழ்ச்சி. டி.வியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை 47 மில்லியன் மக்கள் பார்த்துக் கொண்டி ருந்தனர். நடனத்தில் இதுவரை இல்லாத ஒரு மிரட்சியை அன்றுதான் ஏற்படுத்தினார் ஜாக்சன். "மூன்வாக்' எனப்படும் நடன அசைவுதான் அது. பாதங்கள் வழுக்கிக் கொண்டு செல்வதுபோன்ற அசைவு அது. ஜாக்சன் அன்று முதன்முதலாக அந்த நடன அசைவை செய்துகாட்ட அத்தனை மில்லியன் ரசிகர்களும் மெய்சிலிர்த்தனர்.


25 ஆண்டுகள் கழித்தும் "மூன்வாக்' நடன அசைவு நம்மூர் பிரபுதேவா வரை பல நடனக் கலைஞர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. நடனக்கலை வல்லுநர்களோ, மிகக் குறைந்த நேர இடைவெளியில் கால்களை விளை யாடவைக்கும் இந்த நடன அசைவு "ஜாக்ச னின் கலைநுணுக்க அறிவுக்கும் திறமைக்குமான சான்று' என்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் "ரோபோ' நடன அசைவும் இதேபோல புகழ் பெற்றது.


புகழ் வந்தால் உடனே சர்ச்சைகளும் தொடர்வது ஜாக்சனுக்கு வாடிக்கையாகி விட்டது. முதல் மனைவி லிசா மேரியுடன் குடித்தனம் நடத்திவிட்டு விவாகரத்து பெற்ற அவர், 1997ல் டெபோரா என்ற நர்ஸை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்ததும் அவரையும் விவாகரத்து செய்த ஜாக்சனுக்கு அதன்பிறகு, மூன்றாவதாக ஒரு குழந்தை பிறந்தது. யார் இதற்கு அம்மா? என்று பத்திரிகை யாளர்கள் கேட்டார்கள். அப்பா நான்தான். அம்மாவை சொல்ல முடியாது. இது செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த குழந்தை என்றார் ஜாக்சன். "குழந்தைகள் மீது மைக்கேல் ஜாக்சனுக்கு கொள்ளைப்பிரியம்' என தலைப்புச் செய்திகள் வெளிவந்தன.


பாடுவது, ஆடுவது என்ப துடன் பாட்டெழுதவும் செய்த ஜாக்சன், ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் உள்ள கறுப்பின ஏழைக்குழந்தைகளின் நலனுக்காக ஒரு அறக்கட்டளை யையும் ஆரம்பித்து, தனக்கு கொட்டிய பில்லியன்களிலிருந்து தாராளமாகச் செலவு செய்தார். சிறுவர்கள் மீது ஜாக்சனுக்கு பிரியம் என்றன ஊடகங்கள். அது வேறு மாதிரியான பிரியம் என்பது சில நாட்களில் அம்பலமானது. சிறுவர்களை பாலுறவுக்குப் பயன்படுத்தினார் என்ற பகீர் குற்றச்சாட்டு ஜாக்சன் மீது விழுந்தது. பணத் தைக் கொட்டி, கோர்ட்டுக்கு வெளியேதான் இந்தப் பிரச் சினையை தீர்த்தார் ஜாக்சன். சிறுவர்களுடனான பழக்கத் திற்கு அவர் அடிமையானவர் என அவரது தங்கையே கருத்து தெரிவிக்க, ஜாக்சனை சர்ச்சை வளையங்கள் நெருக்கின. ஆப்ரோ-அமெரிக்கனின் புகழை சரிக்க நேர்ந்த சதி இது என நிற வெறி எதிர்ப்பாளர்கள் எழுதினர்.


பாலியல் குற்றச்சாட்டு, காலமாற்றம் இவற்றால் பாப் உலகிலிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கினார் மைக்கேல் ஜாக்சன். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள பாடி ஆடியவர், தனிமையில் தன் நாட்களைக் கழித்தார். அதுவே ஜாக்சனுக்கு விருப்பமானதாகவும் இருந்தது. அவருக்குத் தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.


இந்த 2009-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளிலும் மீண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப் போகிறேன் என அறிவித்தார் ஜாக்சன். உடனடியாக டிக்கெட்டுகள் புக் ஆயின ஆனால், ஜாக்சனின் கால்களுக்கு காலம் இடம் தரவில்லை. ஜூன் 26-ந் தேதி அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சனின் உயிர் பிரிந்தது.


உலகெங்கும் இன்றள வும் அதிக அளவில் விற்கும் இசை ஆல்பங்கள் அவ ருடையதுதான். 13 "கிராமி' விருதுகள், பல மில்லியன் ஆல்ப பிரதிகள் விற்பனை, பில்லியனில் வருமானம், நாடு- மொழி-இனம் கடந்த கோடிக் கணக்கான ரசிகர்கள் என கறுப் பினத்தில் பிறந்து கலையுலகில் இதுவரை யாரும் பெறாத புக ழையும் பணத்தையும் சம்பா தித்தவர் மைக்கேல் ஜாக்சன். உலகெங்கும் வாழும் கலைஞர் கள் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கற்றுக் கொள்ளக்கூடாததும்தான்.


தொகுப்பு : லெனின்

நன்றி - நக்கீரன்


பிறருக்கு வைத்தியம் சொல்வதில் நம்மவர்கள் கில்லாடிகள்...

பிறருக்கு வைத்தியம் சொல்வதில் நம்மவர்கள் கில்லாடிகள்! 'இதை பூசிக் கொள் தலைவலி வராது... வயிற்று வலிக்கு இதைத் தின்றால் போதுமே...' என்று ஆளாளுக்கு மருத்துவம் சொல்வார்கள்!

ஒருமுறை பீர்பாலும் அக்பரும் அரண்மனை நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது, ''நமது நாட்டில் பெருவாரியான மக்கள் என்ன வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்... விவசாயமா? நெசவா? வணிகமா?'' என்று கேட்டார் அக்பர்.

பளிச்சென்று பதில் சொன்னார் பீர்பால்:

''மருத்துவம்!''

அக்பர் திகைத்துப் போனார். ''என்ன உளறுகிறீர்?'' என்று பீர்பாலைக் கோபித்துக் கொண்டார்.

உடனே, ''மன்னியுங்கள்... எனக்கு சிறிது நாட்கள் அவகாசம் கொடுங்கள். தக்க தருணத்தில் எனது கருத்து உண்மை என்று நிரூபிக்கிறேன்!'' என்றார் பீர்பால்.
நாட்கள் கழிந்தன. இந்த விஷயத்தை மறந்தே போனார் அக்பர்

ஒரு நாள்... முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க அமைச்சரவையைக் கூட்டினார் அக்பர். அனைவரும் வந்து சேர, பீர்பாலை மட்டும் காணோம்.
அவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டது.

ஆனால், தலைவலி- ஜுரம் காரணமாக அவைக்கு வர இயலவில்லை என்று சொல்லியனுப்பினார் பீர்பால்.

''என்ன பெரிய தலைவலி! தைலம் தடவிக் கொண்டால் பறந்து விடாதா? சாக்குபோக்கு சொல்லாமல் பீர்பாலை உடனே அவைக்கு வரச் சொல்!'' என்று கண்டிப்புடன் ஆணை பிறப்பித்தார் அக்பர்.

சற்று நேரத்தில்... கனத்த கம்பளியால், தலையையும் உடலையும் சேர்த்துப் போர்த்தியபடி அரண்மனைக்குள் நுழைந்தார் பீர்பால்.

கவலையுடன் நலம் விசாரித்த காவல்காரன், ஜுரம் நீங்குவதற்குக் கைவைத்தியம் சொன்னான்.

மற்றொரு ஊழியர், 'சுக்கு சாப்பிட்டால் சரியாகப் போகும்' என்று அறிவுறுத்தினார்.

அரண்மனை சமையல்காரரோ, ''கண்டந்திப்பிலி ரசம் குடித்தால் சரியாகும்!'' என்று அறிவுறுத்தினார்.

அனைவரையும் பொறுமையாக சமாளித்தபடி மெள்ள அரசவை மண்டபத்துக்குள் நுழைந்தார் பீர்பால். அரசரை வணங்கக்கூட முடியாதபடி அவரின் உடல் நடுங்கியது!

அக்பர் பதறிப் போனார்.

''இந்த அளவுக்குக் காய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு யுனானி வைத்தியத்தில் ஒரு மருந்து உண்டு'' என்றவர் சேவகன் ஒருவனை அழைத்து, குறிப்பிட்ட அந்த மருந்தைக் கொண்டுவரும்படி பணித்தார்.

சட்டென்று, போர்வையை விலக்கிய பீர்பால், கன கம்பீரமாக தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு, ''நூற்றி இருபத்தியன்று'' என்றார் சத்தமாக!

அக்பர் குழம்பினார். ''அது என்ன... நூற்றி இருபத்தியன்று?'' எனக் கேட்டார்.

புன்னகைத்த பீர்பால், ''இதுவரை, எனக்கு மருத்துவம் சொன்னவர்களின் எண்ணிக்கை!'' என்றார்.

''எனில்... காய்ச்சல் என்றது நாடகமா?''_ அக்பர்.

''ஆம் பிரபு! நான் வீட்டை விட்டுப் புறப் பட்டது முதல்... உழவர், வணிகர், நாவிதர், துணி துவைப்பவர், சமையல்காரர், நமது வாயிற் காவலர்கள்... என்று ஆளாளுக்கு ஒரு மருந்தை சிபாரிசு செய்தார்கள். அவர்கள்தான் தங்கள் தொழிலுடன் மருத்துவம் சொல்கிறார்கள் என்றால்,

நீங்களும் அப்படித்தான்! இப்போது சொல்லுங்கள்... நம் நாட்டில், பெரும்பாலானோரின் தொழில் மருத்துவம்தானே?!'' என்றார் பீர்பால்.

சட்டென்று பொறி தட்டியது அக்பருக்கு! பீர்பாலின் நாடகம் எதற்காக என்பதை உணர்ந்து கொண்டவர், வாய்விட்டுச் சிரித்தாராம்!

இது வேடிக்கையல்ல. இன்றும் நடைமுறையில் இருக்கும் வாடிக்கை!

வயிற்றுவலி என்று எவராவது வைத்தியம் பார்க்கப் புறப்பட்டால், ''இதுக்கு எதுக்கு டாக்டரைப் பார்க்கணும்? ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்கும் இதே தொந்தரவுதான். அப்ப இந்த மருந்தைதான் கொடுத்தாரு. நீங்களும் இதையே சாப்பிடுங்க... எதுக்கு வெட்டிச் செலவு?'' என்று மருத்துவர்களாகவே மாறிவிடும் மகா ஜனங்கள் நிறைந்த நாடு இது.

இப்படி, ஆளாளுக்குத் தரும் மருத்துவத்தை எல்லாம் ஏற்றால் நம் உடல் நிலை என்னாவது? இது, ஆபத்துக்கு அச்சாரம் வைக்கும் வேலை! உடம்புக்கு முடியாவிட்டால், பொதுநல மருத்துவரை ஆலோசித்து மருந்து- மாத்திரைகள் ஏற்க வேண்டும். தேவைப்பட்டால், அவரது ஆலோசனைப்படி சிறப்பு மருத்துவரை நாடுவதும் அவசியம்.

'இதுவாகத்தான் இருக்கும்; சரியாகப் போகும்' என்று நாமாக முடிவு செய்வதும் மருந்து உட்கொள்வதும் நம் உயிருக்கே உலை வைக்கும் செயல்!

- சுகி சிவம் உரையிலிருந்து

ஜெனரல் மோட்டார்ஸ்... சரிந்த சாம்ராஜ்யம்!

''ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு எது உகந்ததாக இருக்கிறதோ, அதுதான் அமெரிக்காவுக்கே உகந்ததாக இருக்கும்!''
இப்படித்தான் அந்த நிறுவனத்தைப் பற்றிப் பெருமையோடு சொல்லிவந்தார்கள் அமெரிக்கர்கள். 'ஜி.எம்.' எனும் அந்த இரண்டு எழுத்து மந்திரம்தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் பெருமைமிகு அடையாளமாக இதுவரை இருந்து வந்தது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இன்றைக்குத் திவால் ஆகியிருக்கிறது. திவாலாகும் கம்பெனிகளைப் பாதுகாப்பதற்காக என்றே அமெரிக்க அரசாங்கம் வடிவமைத்துள்ள 11-வது சாப்டரின் கீழ் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய திவால் நோட்டீஸைத் தாக்கல் செய்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் என்றாலும், இந்த வீழ்ச்சி பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் வீழ்ந்தது எப்படி? யார் இதற்குக் காரணம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்திருப்பதால் அது மீண்டும் புத்துயிர் பெறுமா? உலகப் பொருளாதாரம் பற்றி கவலைப்படுகிற அத்தனை பேரின் மனதிலும் நிழலாடும் கேள்விகள் இவை. இவற்றுக்கான பதில் என்னவென்று பார்ப்போம்.
அது ஒரு பொற்காலம்!

1908, செப்டம்பர், 27-ம் தேதி உதயமானது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் என்னுமிடத்தில் சிறிய அளவில் தனது தொழிற்சாலையைத் தொடங்கியது. பெட்ரோல் மூலம் காரை ஓட்டமுடியும் என்கிற உண்மை அப்போதுதான் நிரூபணமாகி இருந்ததால், பணம் படைத்தவர்கள் அத்தனை பேரும் பயன்படுத்துகிற மாதிரி அதிக எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்யவேண்டும் என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டன. எடுத்த எடுப்பிலேயே கார் தயாரிப்பில் தன் முத்திரையைப் பதித்தது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு கார் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தது.
கெடிலாக், செவர்லே, ஜி.எம்.சி., ப்யூக், போன்டியாக், சாட்டர்ன், எம் ஜெனரல், ஜி.எம்.தாவூ என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் பிராண்ட்கள் அமெரிக்க மக்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன. மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்நிறுவனத்தின் கார்களை வாங்கினார்கள். 1931-ல் தொடங்கி 2007 வரை உலகிலேயே மிக அதிகமான கார்களை விற்பனை செய்து, நம்பர் ஒன் கம்பெனி என்கிற பெருமையை 77 ஆண்டுகள் வரை வைத்திருந்த ஒரே நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் மட்டும்தான். 2001-ல் அமெரிக்கா முழுவதும் விற்பனையான இந்நிறுவன கார்களின் எண்ணிக்கை சுமார் 49,04,015.


கார்கள் மட்டுமல்ல... ஜி.எம். நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகளும் உலகம் முழுக்க உண்டு. இந்தியா, சீனா உள்பட 34 நாடுகளில் இந்த நிறுவனம் கார் உற்பத்தி செய்கிறது. 140 நாடுகளில் கார் விற்பனை செய்துவருகிறது. உலகம் முழுக்க சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.



கடந்த ஆண்டுதான் தன்னுடைய நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது ஜி.எம். ''நூறு ஆண்டுகள் என்ன, இன்னும் நூறு ஆண்டுகள்கூட இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வோம்'' என்று பெருமை பொங்க நூற்றாண்டு விழாவில் பேசினார் முதன்மை நிர்வாக அதிகாரி ரிக் வாக்னர்.


அடிப்படையைத் தகர்த்த அசட்டை!

1970 வரை கார் தயாரிப்பில் போட்டி ஏதுமில்லாமல் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்தது ஜி.எம். நிறுவனம். ஆனால், அளவுக்கதிகமான கார்களை உற்பத்தி செய்துவந்த நிலையில் அதன் தரத்தில் கவனம் செலுத்த மறந்துவிட்டது. மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் கார்கள் தரமாக இருக்க, ஜி.எம்-மின் கார் அந்த அளவுக்கு இல்லை. குறிப்பாக, 70-களின் ஆரம்பத்தில் ஜப்பான் நாட்டு கார் கம்பெனிகள் ஜி.எம்-க்கு மிகப் பெரிய போட்டியைக் கொடுத்தன. இந்தப் போட்டியை எல்லாம் ஜி.எம். ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உலகத்தின் எந்த நிறுவனத்தால் நமக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது என்று நினைத்ததன் விளைவுதான் இந்த அசட்டை!
டீலர்களைக் கவனிக்கத் தவறினால்...?

எந்தப் பொருளைத் தயார் செய்து விற்பனை செய்வதாக இருந்தாலும் அந்தப் பொருளை விற்கும் டீலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை காது கொடுத்துக் கேட்கவேண்டியது முக்கியம். ஜி.எம். நிறுவனத்தைப் பொறுத்தவரை டீலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு போதும் காது கொடுத்துக் கேட்டதே இல்லையாம். அப்படிக் கவனிக்கத் தவறியதன் விளைவுதான் மஞ்சள் கடுதாசி!
திணற வைத்த உற்பத்தி!

ஒருகட்டத்தில் அளவுக்கதிகமான கார் உற்பத்தியே, அந்நிறுவனத்தின் எதிரியாக ஆகிப்போனது. அடுத்தடுத்து கார்களை உற்பத்தி செய்து வெளியே தள்ளவேண்டும் என்பதே அதன் ஒரே நோக்கமாகிப் போனதே ஒழிய, அந்த காரை மக்கள் விரும்புகிறார்களா, இல்லையா என்பதை கவனிக்கத் தவறிவிட்டது. உதாரணமாக, ஜப்பான் நாட்டு கார்களை இளைஞர்கள் வாங்கிக் கொண்டிருக்க, ஜி.எம். நிறுவனத்தின் காரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களே வாங்கினார்கள். அதேசமயம் பெருமளவு உற்பத்தி லாபத்தைக் கணிசமாகக் குறைத்தது. உற்பத்தி செய்ததை விற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் தள்ளுபடியும் அதிகமாக இருந்ததால் நிறுவனத்தின் லாபம் கண்ணுக்குத் தெரியாமல் குறைந்துகொண்டே வந்தது.


வேட்டு வைத்த எரிபொருள் விலை!

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்தபோது ஜி.எம். நிறுவனத்தின் கார்கள் அமோகமாக விற்பனையானது. ஆனால், கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தபோது, பெட்ரோலை அதிகம் குடிக்காத கார்கள் வேண்டுமென்று அமெரிக்க மக்கள் நினைக்க ஆரம்பித்தனர். ஆனால், ஜி.எம். நிறுவனத்துக்கு அந்த நினைப்பே இல்லை. ஜப்பான் நாட்டு கார் கம்பெனியான 'டொயோட்டா' இதை முக்கியமான விஷயமாகப் பார்த்தது. குறைந்த அளவு பெட்ரோலில் நீண்டதூரம் செல்லக்கூடிய கார்களைத் தயாரித்து விற்பதில் அதிக அக்கறை காட்டியது.
ஒவ்வொரு பிராண்டிலும் ஒரு தவறு!

ஜி.எம். நிறுவனத்தின் கார்கள் புகழ் பெற்றவை என்றாலும், அது தயார் செய்த ஒவ்வொரு பிராண்டிலும் ஒரு மெகா தவறு இருந்தது. செவர்லே கோர்வயர் என்கிற பிராண்டில் ரியர் சஸ்பென்ஷன் திருப்திகரமாக இல்லை. செவர்லே வேகா என்கிற சிறிய அளவிலான கார் இன்ஜின் சரியாக வடிவமைக்கப்படாததால் நீண்டதூரம் செல்லத் திணறியது. இப்படி ஒவ்வொரு காரிலும் ஒரு பிரச்னை இருந்ததை ஜி.எம். நிறுவனத்தால் கடைசிவரை சரிசெய்ய முடியவே இல்லை.
காணாமல் போகச் செய்த காந்தி கணக்கு!

'கடந்த சில ஆண்டுகளாக ஜி.எம். நிறுவனத்தின் கணக்குவழக்குகள் எழுதப்பட்டு வந்தவிதம் முழுக்க முழுக்கத் தவறு' என்கிறார்கள் முக்கியப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள். கம்பெனியின் கணக்குகளை எப்படி எழுதவேண்டும் என்பது கணக்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப் புரியவில்லை. எப்படியோ வருமானம் வருகிறது, கணக்கைச் சரியாக எழுதவில்லை என்றால் யார் கேட்கப் போகிறார்கள் என்கிற மாதிரிதான் அவர்கள் நடவடிக்கை இருந்திருக்கிறது.

மலைக்க வைக்கும் மருத்துவச் செலவு!


ஜி.எம். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவு மிகப்பெரிய சுமையாக மாறிப்போனது. தவிர, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பென்ஷனாக வழங்கப்பட வேண்டிய பணத்தின் அளவும் கம்பெனியின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தது. ஜி.எம். நிறுவனத்தின் லாபமெல்லாம் இந்த இரண்டுக்குமே செலவாகிப் போக, மருத்துவச் செலவைக் குறைக்க, ஜி.எம். நிர்வாகம் எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், ஐக்கிய ஆட்டோமொபைல்ஸ் ஊழியர்கள் சங்கம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் எப்படிச் செலவைக் குறைப்பது என்று தெரியாமல் தவித்தது.
இப்படி பல பிரச்னைகள் ஒன்று சேர்ந்து கால்களைச் சுற்றிக்கொள்ள, எப்படியாவது தப்பிப் பிழைத்துவிட வேண்டுமென்று படாதபாடுபட்டது ஜி.எம். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஒபாமாவுக்கும் ஜி.எம். நிறுவனத்தை அப்படியே விட்டுவிட விருப்பமில்லை. கொஞ்சம் பணம் செலவானாலும் பரவாயில்லை, அதை மீண்டும் உயிர்பிழைக்க வைக்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். கிட்டத்தட்ட 30 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைக் கொடுத்து மீண்டும் உயிர் கொடுக்கத் திட்டமிட்டார். அவர் சொன்னபடி, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி 15.4 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்க நிதித்துறை கொடுக்கவும் செய்தது. இதன்மூலம் ஜி.எம். நிறுவனம் திவால் ஆவதை இன்னும் ஒரு மூன்று மாத காலத்துக்குத் தள்ளிப் போடமுடியும். இடைப்பட்ட காலத்தில் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தது அமெரிக்க செனட்.

ஆனால், அளவுக்கதிகமான கடன் கழுத்தை நெரிக்க, மூச்சுவிட முடியாமல் திணறியது ஜி.எம். அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 82.29 பில்லியன் டாலர். ஆனால், மொத்தக் கடன் 172.81 பில்லியன் டாலர். சொத்து ஒரு ரூபாய்... கடன் இரண்டு ரூபாய் என்றால் என்னதான் செய்யமுடியும்
அமெரிக்காவின் இன்னொரு மிகப் பெரிய கார் நிறுவனமான 'கிரிஸ்லர்'(chrysler) நிறுவனமும் ஏற்கெனவே மஞ்சள் கடுதாசியைக் கொடுத்துவிட்டது. ஏறக்குறைய திவாலாகிவிடும் என்று சொல்லப்பட்ட ஃபோர்ட் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியால் எப்படியோ தப்பித்துவிட்டது. ஆனால், ஜி.எம். மட்டும் இந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டது

இப்போது திவால் நோட்டீஸ் கொடுத்தாலும் அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்பதால் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மறுஅவதாரம் எடுத்து புயல் போலச் சீறிவரும் என்கிறார்கள். உண்மையில் ஜி.எம். நிறுவனம் பழைய பெருமையை அடையுமா, இல்லையா என்பது தெரியாது. ஆனால், அதன் வெற்றி 20-ம் நூற்றாண்டு முழுக்கப் பேசப்பட்டது போல, அதன் தோல்வியும் 21-ம் நூற்றாண்டு முழுக்கப் பேசப்படும் விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- நன்றி
விகடன் குழுமம்

இலங்கையும் தமிழீழமும்!

- எஸ். செல்வராஜ்

இலங்கை இந்திய நாட்டின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு. இலங்கையின் வரலாறு மகாவம்சத்தின்படி கி.மு.6-ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன், தனது ஆட்களுடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியின் கீழ் இலங்கை இருந்ததை அதே மகாவம்சம் நூல் தெரிவிக் கிறது. பின்னர் இந்தியாவை போலவே ஆங்கி லேயரின் ஆட்சியில் 133 வருடங்கள் கழித்த இலங்கை, 1948-ல் சுதந்திரம் பெற்றது. ஆட்சி அதிகாரம் சிங்களர் கைக்கு மாறியது.

ஆங்கிலேயர் காலத்தில் சுமூக நிலையில் இருந்து வந்த தமிழ் சிங்கள இனங்களுக்கிடை யேயான தொடர்புகள், சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. இனமுரண்பாடுகளின் வெளிபாடுகள் அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. தனி சிங்களச் சட்டம்- 1956, பௌத்தம் அரசு சமயமாக்கப்படல், இலங்கை குடியுரிமைச் சட்டம்-1948 (இதன் மூலம் இலட்சக்கணக்கான மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டது),கல்வி தரப்படுத்துதல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் (தமிழர்களின் மரபு வழித் தாயகப் பகுதிகளில்) போன்ற சட்டத்திட்டங்களை கொண்டு வந்தது இலங்கை அரசு. அதோடு அரசே திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை ஏற் படுத்தியது. 1958-இல் ஆரம்பித்து தமிழர்களுக் கெதிரான இன கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1958, 1977, 1983 (கறுப்பு ஜூலை), பிந்துனுவேவா படுகொலைகள் போன்றவை திட்டமிட்டு நடத்தப்பட்டன. இவற்றில் இலட்சக் கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் பலியாகினர். சட்டத்துக்குப் புறம் பாக தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். சிங்களமயமாக்கம் மூலம் இலங்கை தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம் கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். உலகமே இந்த படுகொலைகளை கண்டனம் செய்தன

இந்த தமிழின அழிப்பை எதிர்த்து தமிழ்மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் முக்கியமாக ஈழதந்தை எனப்படும் செல்வநாய கம் தலைமையிலான தமிழரசு கட்சி அறவழி போராட்டங்களை மேற்கொண்டது. அவரை தொடர்ந்து அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களிலேயே ஈடுபட்டது. சிங்கள ராணுவத்தைக் கொண்டு தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை ஏவிவிட்டது. அதற்கேற்ப சிங்கள ராணு வத்தினரும் தமிழர்களுக்கெதிராக வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போதுதான் சிங்கள அரசின் வன்முறைக்குப் பதிலடி கொடுக் கும் வகையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல போராளி குழுக்கள் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் உறுதியுடன் நின்று, அதன் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் தலைமையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ மக்களின் தன்னாட்சிக்காக போராடி வருகின்றது. ஈழத்தமிழர்கள் கேட்கும் தன்னாட்சி அதிகாரம் எந்த அளவுக்கு சரியானது என்பதை புரிந்துகொள்ள தன்னாட்சியை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தன்னாட்சி உரிமை என்பது "மக்கள் திரள் ஒன்று அதன் அரசு விசு வாசத்தை அல்லது ஆட்சி முறையைத் தீர்மா னிக்கும் சுதந்திரம்' எனப்படுகிறது. இத்தன்னாட் சியை கோருபவர்கள் முதலில் ஒரு தேசிய இனமாக இருக்க வேண்டும். ஒரு தேசிய இனத் தினால்தான் தன்னாட்சி உரிமைக்காக போராட முடியும். இதனை வி.இ. லெனின் தனது "தேசிய இனங்களின் பிரச்சினை குறித்து' என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்:

"ஒரு மொழி, ஓர் ஆள்புலம், மூலவளம், உளப்பாங்கு, பண்பாடு, திண்மை கொண்டு மலர்ந்த வரலாற்று படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டாட்சி அடிப்படை யில் கூடி வாழும் உரிமையும் அதற்குண்டு. அத் துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்குண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக்கொன்று சரிநிகரானவை. தேசிய இனங்களுக்குப் பரந்த அளவில் தன் னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆள்புல எல்லைகளை வரையறுக்க வேண்டும்' என்கிறார் வி.இ.லெனின். இந்த கோட்பாடுகளை கொண்டு பார்க்கும்போது தமிழ் இனம் ஒரு தேசிய இனத்திற்கான அனைத்து தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ளது. இதனை உலக அறி ஞர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஐ.நா. பொது அவை 1960-ல் "மக்கள் திரள் கள் அனைத்துக்கும் தன்னாட்சி உரிமையுண்டு' என்பதை ஏற்றுக்கொண்டது. அதேபோல உலக மனித உரிமைப் பிரகடனம் 1948-இல் வெளியிடப்பட்டது. அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து மற்றும் பிற கருத்துகள் தாயகம் அல்லது தாய்ச் சமூகம், உடமை, பிறப்பு மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு' என பிரகடனப்படுத்தியது.

உலக அளவில் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் பற்றிய கருத்துகள் மேலோங்கிய தனால்தான் இங்கிலாந்திலிருந்து அயர் லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நார்வேயும் விடுதலைப் பெற்றன. அதன்பின் யுகோசி லோவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குரோசியா, போஸ்னியா கெசகோவினா, மெந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் தனி நாடுகள் ஆகின. அதேபோல 1971-ல் வங்காள தேசமும், 1993-ல் எரித்திரியாவும், 2002-ல் கிழக்கு தைமூரும், 2008-ல் கொசொவோவும் தனிநாடுகளாக மலர்ந்தன

ஆக, தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனம். அதற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு என்பதன் அடிப்படையில்தான் 1976-ம் ஆண்டு இலங்கையின் முக்கிய தமிழ்கட்சிகள் உள்ள டக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் "வட்டுக் கோட்டை தீர்மானம்' என்ற புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை. 1. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். 2. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். 3. அதற்காக முழு மூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப் பணிப்புகளோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை அமைக்க வேண்டுமென கோரியது. 1977 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட் டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழரின் கனவு சுயநிர் ணய உரிமையே என்பதை பறைசாற்றியது. மக்கள் தீர்ப்பை உள்வாங்காத இலங்கை அரசு தமிழரின் உரிமை போராட்டத்தை நசுக்கியது. இதனை எதிர்த்து தமிழரின் தன்னாட்சி அதிகாரத்திற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விடுதலைபுலிகள் இயக்கம் நடத்திவருகிறது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகும். ஈழ மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்ட இந்திய அரசு 1987-க்கு முன்புவரை விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தது. இந்திரா காந்தி மறைவுக்கு பின்னர் இந்திய - இலங்கை யின் வெளியுறவு கொள்கையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டன.

1998-ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை அரசு களுக்குமிடையே வர்த்தகம் மற்றும் ராணுவ நெருக்கம் உருவானது. 2002-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இந்த பொருளாதார நெருக்கத்திற்கு இணையாக ராணுவப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் வாஜ்பாய் - ரணில் விக்கிரமசிங்கே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் இலங்கையில் ராஜபக்சே கூட்டணி 2005-இல் பதவியேற்றபோது "" சிறீலங்காவின் தேசப்பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பேற்று கொண்டிருக்கிறது. சிறீலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்'' என இலங்கைக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய அரசு, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையும், தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை உறுதி செய்து கொள்ளும் உரிமையும் தனக்கு உண்டு என கூறி வருகின்றது. இந்த பின்னணியில்தான் நான்கா வது ஈழப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்தித்தனர்.

நடந்து "முடிந்த' இந்த போரில் இலங்கை ராணுவத்தால் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் நடைபிணமாகினர். உயிர்காக்கும் மருந்துகள் கூட தடுத்து நிறுத்தப் பட்டன. சர்வதேச அளவில் தடை செய்யப் பட்ட பாஸ்பரஸ் மற்றும் இரசாயன குண்டு களை சொந்த நாட்டு மக்கள் மீது ஈவு இரக்கமின்றி வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. சபை உட்பட மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை கேட்டும் தமிழின மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. வரலாறு கண்டிராத போர் குற்றங்களை செய்துள்ள சிங்கள ராணுவம் தெற்காசிய நாடுகளில் சீனா உட்பட, இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ தாக்குதல் தீர்வா காது என ஒருபுறம் பேசிக்கொண்டே இன்னொரு புறம் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. எது எவ்வாறாயினும் சர்வதேச தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ள விடுதலைபுலிகளும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தற் சமயம் பின்னடைவை சந்தித்திருப்பினும், தமிழீழத்தின் தன்னாட்சி கோரும் உரிமை சாகாவரம் பெற்றவை என நிரூபிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன! என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.

அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.
இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும். அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!

அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே










இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.

அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!
நல்லா யோசிங்க.. கெண்டகி வறுவல் உண்ணும்முன்..
நன்றி
- தமிழ்மணம்





இனம் தின்னும் ராஜபக்சே: கவிஞர் வைரமுத்து

சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது
கண்டுகண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கி வைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல்
என்று தேடிஅடையாளம் தெரியாத
ஒரு பிணத்துக்குஅழுது தொலைக்கும்
பிள்ளைகளின்அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராஜபக்சே மீதல்ல..
ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல
எம்மைக் குறையாண்மை செய்துவைத்த
இறையாண்மைமீதுதான்!

குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியாதா?

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும்
அருகம்புல்
ஆனால்கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கேசிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்தொலைந்து
போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்என்றேனும் கூடுகட்டும்!

- கவிஞர் வைரமுத்து

பிள்ளையார் சுழி




பிள்ளையார் சுழி :

சுப காரியங்களைப் பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால்,கடிதம் எழுதுவதற்கு முன்னால், தற்சமயம் தேர்வு எழுதுவதற்கு முன்னாலும் கூட பிள்ளயார் சுழி போட்டபின் ( 'உ' ம் அதன் கீழ் '=' இரண்டு அடிக்கோடுகளும் ) தான் ஆரம்பிக்கிறோம் இது கிட்டத்தட்ட சட்டமாகவே ஆகும் சூழலில் தான் தற்போது உள்ளது

நிலவரம் :

பிள்ளையார் : கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிள்ளையார் வழிபாடு தமிழ் நாட்டுக்குள் ( குறிப்பாக வாதாபியில் இருந்து )வந்தததாக தமிழக வரலாறு பற்றிய குறிப்புகளில் பதிவாகி உள்ளதுகி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பிள்ளையார் பற்றிய சான்றுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களிலும் ,பதிவுகளிலும்,ஆராய்சிகளிலும் காணப்படவில்லை

பிள்ளையார் சுழி :
கி.பி இரண்டாம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளின் ஓரத்தில் பிள்ளையார் சுழியை ஒத்த எழுத்துக்கள் ( '0' ம் அதனைத் தொடர்ந்தோ அல்லது அடியிலோ '-' )காணப்படுகின்றன .இது அந்தக் காலத்தில் எழுதப் பயன்படும்ஒலையின் தரத்தை எழுதுவதற்கு தகுதியான ஈரப்பதத்தில் இருக்கிறதா என பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, எழுத்தாணியின் கூர்மையை சோதிப்பதற்காக, படைப்புகளை பதிய ஆரம்பிப்பதற்கு முன்னால் சோதனைக்காக இடப்பட்ட குறிகள் எனவும், நாளடைவில் '0' வும் '-' வும் சேர்ந்து 'உ' வாவக மாறியிருக்கலாம் எனவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது

உணரப்படும் உண்மை :

தமிழகத்தில் பிள்ளையாரின் காலத்திற்கு ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே புழக்கத்தில் வந்துவிட்ட குறியீட்டுக்கு எப்படி பிள்ளயார் சுழி என்ற பெயர் வந்தது? .எனில், அந்தப் பெயர் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்திருக்க வேண்டும், அப்படியெனில்,அதற்கு முன்னால் அதன் பெயர் என்னவாக இருந்தது ?

உணர வேண்டிய உண்மை :

இன்று பளபளப்பான காகிதமும்,பளிங்குபோல வழுக்கிச் சென்று எழுதும் பந்து முனை எழுதுகோல்களும் (பால் பாய்ண்ட் பேனா )தான் உபயோகத்தில் உள்ளன. இதன் தரம் சோதித்து அறிய வேண்டிய தேவை எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை

உணர்த்தும் நீதி :

செம்மறியாட்டு மந்தையில் முன் செல்லும் ஆடு குதித்துத் தாண்டிச் செல்லும் இடத்தை,அங்கே எந்தவித தேவையும் இடர்பாடும் இல்லாவிட்டாலும் மற்றவைகளும் குதிதுத் தாண்டியேச் செல்கின்றன............

- Durai