திருக்குறள்

ரஜினி... கமல்... யார் மனிதன்.

ரஜினி... கமல்... யார் மனிதன்.

9 டிசம்பர், 2010

வழக்கம் போல் மற்றுமொரு சர்ச்சையில் கமலஹாசன். இம்மாதிரியான சர்ச்சைகள், தனக்கான விளம்பரம் என்று நினைக்கிறாரோ.. என்னவோ. அது பற்றிய விபரம்...

"மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. "... என்கிற ரீதியில் உள்ளது அந்த செய்தி.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் தள்ளுபடியாக கூடிய வாய்ப்பே உள்ளது. கமலுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளதாக கமல் ஜால்ராக்கள் சொல்வார்கள். கமல் இல்லாததையா சொல்லி விட்டார். இந்து மதத்தில் இல்லாத ஆபாசங்களா என்று சில அறிவுஜிவிகள் கேட்பார்கள். காமம் தாண்டிய சிந்தனை கமலுக்கு இல்லை என்பது புரிகிறது.சரி இதற்கு என்ன தீர்வு. யாராக இருந்தாலும் ஒன்றை பேசுவதற்கு முன், எழுதுவதற்கு முன் - நாம் பேசுகிற பேச்சால், எழுதுகிற பேச்சால் ஏதேனும் அனர்த்தங்கள் நிகழ வாய்ப்புள்ளதா என்று யோசிக்க வேண்டும். யாரேனும் மனம் புண்பட்டு விடுமோ என்று அறிவுடன் யோசிக்க வேண்டும்.

தொடர்ந்து ​கமல் சர்ச்சைக்குரிய விஷயங்களில் அடிபடுவதால் அந்த யோசிக்கும் திறன் அவருக்கு இல்லை என்பது புலனாகிறது. அப்படிப்பட்ட நபரின் கருத்துகளை எடுத்து கொண்டு ஓயாமல் நீதிமன்றத்துக்கு செல்ல முடியுமா. நீதிமன்றங்களுக்கு வேறு வேலை இல்லையா. நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை தீர்க்கவே பல வருஷங்கள் ஆகும் எனும் போது, வழக்கு, நீதிமன்றம் எதற்கு. அவர் உங்களை விமர்சித்தால், நீங்கள் அவரை விமரிசிப்பது தானே ஆரோக்கியமான முறை.

அதானே இந்திய அரசியல் நமக்கு கற்று கொடுத்தது. ஒருவர் மீது ஊழல் குற்றம் சாட்டினால், பதிலுக்கு "நீயென்ன யோக்கியனா. நீ ஊழல் பண்ணலயா" என்று கேட்பது தானே முறை. அவருக்குள்ள கருத்து சுதந்திரம் உங்களுக்கும் உள்ளது தானே. அவர் அறிவுபூர்வமாக விமர்சித்தால், நீங்கள் அறிவுப்பூர்வமாக விமரிசியுங்கள். அறிவுகெட்டத்தனமாக விமர்சித்தால், நீங்களும் அறிவு கெட்டத்தனமாக விமரிசியுங்கள். கமலை போன்ற நிர்வாணிகள் வாழுகிற ஊரில் ஆடை கட்டியவன் முட்டாள் தானே.

ஆணும் பெண்ணும் சமம் எனும் போது, "நா சுவத்துல ஒண்ணுக்கு அடிப்பேன். உன்னால அடிக்க முடியுமா... வியர்த்தா நா சட்டைய கழட்டுவேன். உன்னால் கழட்ட முடியுமா" என்று அதிரடியாக அறிவுப்பூர்வமாக பேசுவார். விமர்சிக்கவே முடியாத அளவுக்கு, அவர் அப்பழுக்கற்றவரா. உத்தம புருஷரா... மகானா... எதுவும் கிடையாது. சராசரி மனிதன். கௌதமியுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாகரீக நாயகன். இப்படி ஊருக்கு ஒருவர் இருந்தால் தானே நாகரீகங்கள் குறித்த அறிவை நாம் பெற முடியும்.

இரண்டு திருமணம் செய்த பிற்பாடு, "திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை" என்ற தத்துவத்தை உதிர்த்தவர். "உன் குழந்தையும், என் குழந்தையும்,
நம் குழந்தையும்" விளையாடுகின்றன என்பார்கள் மேல்நாடுகளில். கமல் புண்ணியத்தில் பாரத தேசத்தில் நாம் அதை காணும் பேறு பெறலாம். 

திரையுலகில், அவரது போட்டியாளராக கருதப்படுகிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு தந்தையாக இருந்து தம் பெண் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை அமைத்து, ஒரு இந்திய தந்தைக்குரிய கடமை என்ன என்பதை காட்டி இருக்கிறார். ரஜினியின் வளர்ச்சிக்கு என்ன காரணம். யாரையும் புண் படுத்தி பேசாத பாங்கு, அவரை வெற்றியாளனாகவே வைத்துள்ளது - இந்த வயதிலும். எம்.ஜி.ஆர் இருந்தவரை கலைஞரால் வெல்ல முடிந்ததா.



ரஜினி... கமல்... யார் மனிதன். ரஜினி மனிதன் மட்டுமல்ல -மாணிக்கம்.தவறு இல்லாத மனிதர்களும் இல்லை... தவறு இல்லாத மதங்களும் இல்லை... அதனால் இந்த கருத்து போர் முடியப்போவதில்லை. 
Source - Osai

ஒரு கிராமம். ஒரு மனிதர். ஓர் அதிசயம்!



ஒரு கிராமம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

வயல். பம்ப்செட். கால்நடைகள். பண்ணையார். ஆலமரம். நாட்டாமை. பஞ்சாயத்து. சொம்பு. அய்யனார் கோயில். பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால் இந்த கிராமம் அப்படியல்ல.

இங்கு வசிக்கும் அனைவருமே வசதியான பங்களாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொகுசு கார் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் டாலர் (நம் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலே) வங்கி கையிருப்பாக இருக்கிறது.

மருத்துவம், கல்வி, வீடு.. ஏன் சமைக்கும் எண்ணெய் கூட இந்த கிராமத்தாருக்கு கிராமக்குழுவால் இலவசமாகதான் வழங்கப்படுகிறது.

வாயைப் பிளக்காதீர்கள். இந்த ஊர் நம் நாட்டில் அல்ல. சீனாவில் இருக்கிறது. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இந்த ஹூவாக்ஸி. 'உலகின் நெ.1 கிராமம்' என்று கூறி, உலகெங்கும் இருந்து இந்த ஊருக்கு பயணிகள் குவிகிறார்கள். சமூக ஆராய்ச்சியாளர்கள், இந்த கிராமத்தின் திடீர் வளர்ச்சியின் பின்னணி குறித்து ஆராய்ந்து கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். 1994ல் இருந்து சீனாவின் இரும்புத்திரை விலகிய பிறகு, உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பயணிகள் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் இந்த ஊருக்கு வந்து வேடிக்கை பார்த்து சென்றிருக்கிறார்கள்.

ஒரே இரவில் நடந்தது இல்லை இந்த அதிசயம். கிராமத்தில் வசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தெரியும், அந்தக் காலத்தில் ஹூவாக்ஸி எப்ப்டி இருந்தது என்று.

சில வருடங்களுக்கு முன்பு 1500 பேர் மட்டுமே வாழ்ந்த மிகச்சிறிய குக்கிராமம் இந்த ஹூவாக்ஸி. மொத்த சுற்றளவே ஒரு சதுரகிலோ மீட்டர்தான். சீனாவின் பாரம்பரிய கிராம வாழ்க்கை. அளவில் சிறிய வீடுகள். விவசாயம்தான் பிரதானத் தொழில். சம்பாதிக்கும் சொற்பப்பணம் வயிற்றுக்கும், வாய்க்கும் சரியாகப் போகும் சராசரி கிராம வாழ்க்கை.

ஒரு மனிதர் இவை எல்லாவற்றையும் மாற்றிட நினைத்தார். எல்லாமே மாற வேண்டும். கனவு காணும் மாற்றங்கள் அனைத்தும் அமைந்திட வேண்டும். மக்கள் சுகமாய் வாழ வேண்டும். மண்ணில் சொர்க்கத்தை படைத்திட வேண்டும்.

அந்த மனிதர் ஹூ ரென்பாவ். அந்த கிராம கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர். கிட்டத்தட்ட நம்மூர் பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உலகமயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பல நாடுகளும், பொருளாதார வல்லுனர்களும் அச்சத்தோடு ஆராய்ந்துக் கொண்டிருந்த வேளையில் இவர், அதனால் விளையக்கூடிய நன்மைகளை மட்டும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். கம்யூனிஸத்தின் பொருளாதார அடிப்படைகள் வாயிலாக சந்தைப் பொருளாதாரத்தை அணுகினார்.

ஒரு தீவிர கம்யூனிஸ்ட்டும், விவசாயியுமான ஹூ இம்மாதிரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பாக சிந்தித்தார் என்பதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்படித்தான் அவர் தனது கிராமத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்தார். முழுக்க விவசாயக் கிராமமாக இருந்த ஹூவாக்ஸியை நவீன விவசாயம் மற்றும் தொழில் பலம் மிக்க கிராமமாக மாற்றம் செய்வித்தார்.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மழைக்கால திடீர் காளான்களாய் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியது. கிராமவாசிகள் விடுமுறையின்றி வாரத்தின் 7 நாட்களுக்கும் கடுமையான உழைப்பினைத்தர முன்வந்தனர். ஒருங்கிணைந்த பொருளாதாரம் மற்றும் பொதுவான வளர்ச்சி என்பதுதான் ஹூவின் திட்டம். இதுதான் உண்மையான 'சோஸலிஸம்' என்று அவர் சொன்னார்.

கடுமையாக உழைத்தவர்களுக்கு குறுகிய காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது. கிராமத்தின் முகம் மாறியது. ஒரே மாதிரியான வீடுகள், வாகனங்கள் எல்லோருக்கும் கிராமக்குழு வழங்கியது. இதற்காக தொழிலாளர்கள் காசு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்த லாபத்தை ஒட்டுமொத்தமாக பிரித்துக் கொண்டார்கள். இதில் ஏதாவது ஊழல், கீழல்? கொன்று போட்டுவிடுவார்கள்.

ஹூவாக்ஸி வாசிகள் கல்வியிலும் கில்லாடிகள். ஜியாங்சூ மாகாணத்திலேயே சிறந்த கல்விச்சாலைகள் இங்குதான் இருக்கின்றன.

இன்று ஹூவாக்ஸி கிராமத்தின் வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகளை சார்ந்திருக்கிறது. இக்கிராமத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. இந்தியாவிலிருந்தும், பிரேஸிலில் இருந்தும்தான் பெரும்பாலான மூலப்பொருட்களை வாங்குகிறார்கள். இங்கு தயாராகும் பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சுற்றுலா அடுத்தடுத்த நிலையில் இருக்கும் தொழில்கள்.

ஹூ ரென்பா, பழங்கால சீன பாரம்பரிய மதிப்பீடுகளின் மீது பெரும் மதிப்பு கொண்டவர். செல்வம் பெருகும் தேசங்களிலும், நகரங்களிலும் இரவுநேர கேளிக்கை வெறியாட்டம் ஆடும். ஹூவாக்ஸியில் அது அறவே கிடையாது. விடிகாலையில் எழுவார்கள். கடுமையாக பணிபுரிவார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். "வசதியாக வாழ நினைப்பது அடிப்படையான ஆசைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை அல்ல. கூட்டுக் குடும்பம், நேர்மை, தைரியம், கடுமையான உழைப்பு – இவைதான் ஒரு சராசரி சீனனின் கலாச்சாரம். கலாச்சாரப் பின்னணியோடு கூடிய தரமான வாழ்க்கைதான் எங்களது கனவு" என்று ஒருமுறை சொன்னார் ஹூ ரென்பா.

ஹூ ரென்பா உருவாக்கியிருக்கு ஹூவாக்ஸி ஒரு சொர்க்கம்தான் என்கிறபோதிலும், உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் சராசரி கிராமத்தானுக்கு இருக்கும் குறைந்தபட்சம் சுதந்திரம் இங்கிருக்கிறவர்களுக்கு இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

இங்கே சட்டம், ஒழுங்கு மிகக்கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு செமத்தியான தண்டனை. ஓய்வே இன்றி உழைத்துக் கொண்டிருப்பதுதான் ஹூவாக்ஸியில் பிறந்தவனின் விதி. கருத்துச் சுதந்திரமெல்லாம் நஹி. கிராமத்தைப் பற்றி ஒரு குடிமகன் கூட வெளியாட்கள் யாரிடமும் பேசிவிட முடியாது. கிராமக்குழுத் தலைவர்தான் பேசுவதற்குரிய அதிகாரம் பெற்றவர். இண்டர்நெட் கிண்டர்நெட் என்றால் உதைதான் கிடைக்கும். மதுவிடுதியோ, டீக்கடையோ கிடையவே கிடையாது. வெளியூரில் வேலை பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினால் ஊரில் உள்ள வீடு, வாகனம் போன்ற சொத்துகளை கிராமக்குழு எடுத்துக் கொள்ளும். இது மாதிரி நிறைய. மொத்தத்தில் ஹூவாக்ஸி கிராமத்தை ஒரு கறாரான இராணுவ முகாமோடு ஒப்பிடலாம்.

அதே நேரத்தில் இவர்களது அட்டகாசமான நிர்வாகத்திறனையும் மறுத்துவிட முடியாது. தினமும் காலையில் வேலையை தொடங்குவதற்கு முன்பாக (தணிக்கை படுத்தப்பட்ட) செய்திகளை  ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாசிக்க/கேட்க வேண்டும். பின்னர் கிராமத்தலைவரின் அறிவுறுத்தல்கள் ஒரு பத்து நிமிடம். வாரம் ஒருமுறை மொத்த கிராமமும் ஒரு இடத்தில் சந்திக்கும். விவாதிக்கும்.

மொத்த சம்பளமும் யாருக்கும் வழங்கப்படாது. 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே சம்பளத் தேதியில் வழங்குகிறார்கள். அதிலும் கூட பணமாக 20 சதவிகிதம்தான் கைக்கு வரும். மீதி அந்தந்த தொழிலாளியின் பெயரில் ஏதாவது தொழிலில் முதலீடாக சேர்த்துக்கொள்ளப்படும். மீதி 50 சதவிகித சம்பளம் கிராம வளர்ச்சி சிறப்பு நிதியில் சேர்த்துக்கொள்ளப் படும். அடிப்படை சம்பளத்தில் இருந்து மூன்று மடங்குத் தொகை வருடம் ஒருமுறை போனஸாக வழங்கப்படும். முதலீட்டில் இருந்து வரும் லாபம், போனஸ் இத்யாதிகளையும் பெற இதுமாதிரி ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. கிராமத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு இந்த எல்லாமே அம்பேல். இங்கிருக்கும் வரை மட்டுமே அனுபவிக்கலாம்.

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர் வளர்ச்சிக்கு உறக்கமின்றி பணியாற்றிய ஹூ ரென்பா சில வருடங்களுக்கு முன்பாக தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன்களில் ஒருவரான ஹூ க்ஸீன் கிராமத்தலைவராக, அப்பா வழியில் இப்போது பணிபுரிகிறார் (அங்கேயும் வாரிசு அரசியல்). இப்போது ஹூவாக்ஸி 35 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய ஊராகிவிட்டது. மக்கள் தொகை 35,000.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் சிக்கலானதாகவும், கறாராகவும் இருந்தாலும், கிராமத்தவர்கள் ஒவ்வொருவரும் 82 வயதான ஹூ ரென்பா மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஹூவாக்ஸி வாசிகள் யாரும் மழையிலும், பனியிலும் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக ஊரின் நடைபாதை எங்கும் மேற்கூரை அமைத்தவர் ஆயிற்றே அவர். மக்கள் மீது வைக்கப்பட்ட அந்த நிஜமான அக்கறையை அவ்வளவு எளிதாக யாராவது புறக்கணித்துவிட முடியுமா என்ன?

(நன்றி : புதிய தலைமுறை)

''பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்!''



அடல்ஸ் ஒன்லி படங்களை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது. அது போலதான் இந்தச் செய்தியும்! பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் அதிகமாக முதலீடு செய்திருப்பவர்கள், வயதானவர்கள், இதயத்தில் பிரச்னை இருப்பவர்கள்  இந்தக் கட்டுரையை படிக்காமல் இருப்பது நலம். அல்லது குறைந்தபட்சம் கொஞ்சம் முன் தயாரிப்புகளோடு படிக்கவும்!
2012-ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என்று சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி தீயாகப் பரவியது. அதைப் பற்றி ஒரு படம்கூட எடுத்தார்கள். ஆனால் அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல இன்னொரு குண்டை அமெரிக்கா மீது தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெரால்டு செலன்ட்(Gerald Celente) என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநர். அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன்பாக அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்...
அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரி ஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான் தங்கும்; தானியம் தங்காது’ என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டு சொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும். அவர் ஏதாவது சொல்லாமல் இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்! அந்த அளவுக்கு மனுஷனுக்கு கருநாக்கு! அந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!

கருநாக்கு ஜெரால்ட் ஆரூடம் சொன்ன சில விஷயங்களை முதலில் பார்க்கலாம்... 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகும் என்றார். அதைப்போலவே உடைந்ததும் சுக்கு நூறல்ல, ஆயிரம் ஆனதும் அனைவரும் அறிந்ததே! அடுத்து 1987-ம் வருடம் பங்குச்சந்தை சரியும் என்று சாபமிட்டார், அதுவும் அப்படியே ஆனது! ஆசியாவில் நடந்த கரன்சி யுத்தம், சப் பிரைம் மார்ட்கேஜ் பிரச்னை என அனைத்தையும் முன்கூட்டியே சொன்ன முனிவர் (வெள்ளைக்கார!) அவர்.
இவ்வளவு பில்ட் அஃப் கொடுக்கிறீர்களே, அப்படி என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா? இதுதான் விஷயம். ''2012-ம் ஆண்டு டிசம்பருக்குள் அமெரிக்கா இன்னொரு பொருளாதார நெருக்கடியில் மாட்டும். அது 1929-ம் ஆண்டு கிரேட் டிப்ரஷனை விட பயங்கரமானதாக இருக்கும். இப்போது வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா 2012-ல் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும்! அப்போது நடக்கும் சண்டை பெரும்பாலும் உணவுக்காகத்தான் இருக்கும். வேலை இருக்காது, யாரும் வரிகட்டமாட்டார்கள். நிறைய பேர்களுக்கு வேலையில்லாமல் போகப்போவதால் கலவரம் வெடிக்கும். 2012-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்கு யாரும் கிஃப்ட் வாங்கப்போவதில்லை! அப்போது சரியான உணவு கிடைத்தால் அதுவே கிஃப்ட்தான்! டாலர் தன்னுடைய மதிப்பை 90 சதவிகிதம் வரை இழக்கும்'' என்று திகிலூட்டி இருக்கிறார் ஜெரால்டு.
மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.
இதனால் ரியல் எஸ்டேட் பாதாளத்தில் விழும். ஏற்கெனவே நிறைய பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது நாடு முழுவதும் டென்ட் நகரங்கள்தான் முளைக்கும். குற்றச்செயல்கள் தறிகெட்டு அதிகரிக்கும்'' என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஜெரால்டு.
இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல், சி.ன்.பி.சி., யு.எஸ்.ஏ. டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதி இருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்’ என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இது. அமெரிக்க மார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும். இந்நிலையில் ஜெரால்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால், நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. கடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனி அமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். நம்மால் முடிந்தது அதுதான்!
-வா.கார்த்திகேயன்

மது, மாது, திவால்!



ஜரோப்பாவின் பெருமைக்குரிய தேசம் என்றால் அது கிரீஸ்தான்.

சாக்ரட்டீஸ், அரிஸ்டாட் டில் போன்ற பல மேதைகளை உருவாக்கி, உலகத்துக்கே அறிவுச் சேவை செய்த நாடு. பழம் பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் கிரீஸின் நாகரிகத்தை உலகுக்கே பறை சாற்றும்.
பொருளாதார வளர்ச்சி யிலும், அரசியல் ஆளுமை யிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்ற கிரீஸ் இன்று ஏறக்குறைய திவால் நிலையில் உள்ளது. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 சதவிகிதமாக இருக்கும் ஜி.டி.பி., மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன் என தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த நாடு. என்னவானது கிரீஸுக்கு? ஏன் இந்த நிலைமை?
முதல் காரணம், கிரீஸ் மக்கள் எப்போதுமே மகிழ்ச்சியைத் தேடும் சந்தோஷப் பிரியர்கள். நாமெல்லாம் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை சர்வசாதாரணமாக உழைக்க, கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் உழைத்தாலே அதிகம். உலக அளவில் மிகக் குறைவாக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கிரீஸ்தான் முன்னணியில் இருக்கிறது.   
தவிர, நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடித்து விட்டு கவிதை பாடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வயிறு முட்ட மது அருந்தியபடியே மோகத்தில் உழல்வதே அவர்கள் வாழ்க்கை.
கிரீஸ் நாட்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடி. இதில் பத்து லட்சம் பேர் அரசு ஊழியர்கள். இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுத்தே ஓய்ந்து போனது கிரீஸ் அரசாங்கம். நம்மூரில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 என்றால் கிரீஸில் 62. தவிர, அரசு ஊழியர்களுக்கு கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ், பென்ஷன் என இருக்கும் வசதிகள் எதையும் குறைக்க அந்த நாட்டு மக்கள் ஒப்புக் கொள்வதில்லை.
மக்கள் தொகையில் 80% பேர் வரி கட்டத் தகுதி படைத்தவர்கள்; ஆனால், ஒழுங்காக வரி கட்டுகிறவர்களோ 35 சதவிகிதத்துக்கும் குறைவே! இங்குள்ள தொழிலதிபர்கள் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தே வரியைக் கட்டாமல் தப்பிவிடுகிறார்களாம்.
இத்தனை தவறுகளுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். கடந்த முப்பது ஆண்டுகளாக கிரீஸ் நாட்டு அரசியல்வாதிகளும் ஏகத்துக்கு பொய் சொல்லி, ஐரோப்பாவை ஏமாற்றி இருக்கிறார்கள். கிரீஸ், ஐரோப்பிய யூனியனுடன் சேரும் போது அது கொடுத்த கணக்கு எல்லாமே பொய்க் கணக்குத்தான் என்று இப்போது குட்டு வெளிப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001-ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று சொல்லி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள். இது நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 125% அதிகம்!
கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணம் இல்லாததால் இப்போது முழி பிதுங்கி நிற்கிறது. இதுநாள் வரை கடனுதவி செய்த நாடுகள்கூட இப்போது மேற்கொண்டு கடன் கொடுக்கத் தயங்குகின்றன. தவிர, கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.
இப்போது சீனா கொடுத்த உதவியின் காரணமாக கிரீஸின் திவால் அறிவிப்பு கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. சீன உதவி எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்றால் கிரீஸ் திவாலாவது உறுதி. அப்படி ஒன்று நடந்தால், அது அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைவிட பெரும் பாதிப்பை உலகுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
-  சத்தி.கார்த்தி.
source-vikatan

நம்பரை வைத்து குவியும் பணம்!


வெறும் நம்பரை வைத்து பணம் பண்ண முடியுமா? ஏன் முடியாது, நியூமராலஜியில்கூட சம்பாதிக்கலாமே என்கிறீர்களா? அதெல்லாம் பழைய கதை..! லேட்டஸ்டாக இந்த நம்பர்களை வைத்து சூப்பராக சிலர் பணத்தை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஏதோ லாட்டரி, சூதாட்டம் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்... பீடிகைகளை நிறுத்திவிட்டு விஷயத்துக்கு வருவோம்...
ராசி நம்பர்களுக்கு இணையாக நல்ல டிமாண்ட் உள்ளது என்றால் அது ஃபேன்சி நம்பர்களுக்குதான். பொதுவாக வாகனங்கள் வாங்கும்போது தங்களுக்குப் பிடித்தமான ஃபேன்சி நம்பர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆர்.டி.ஓ. ஆபீஸில் கூடுதல் பணம் கட்டி அந்த நம்பரை வாங்குவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
காருக்கு நம்பர் வாங்குவதற்கு இணையாக இப்போது தங்களுடைய செல்போன்களுக்கும் ஃபேன்சி நம்பர் வாங்குவது அதிகரித்துவிட்டது. தனிநபர்களை விட சேவைத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதாவது கால் டாக்ஸி, ரீடெய்ல் ஸ்டோர்கள், கஸ்டமர் கேர் சென்டர்கள் போன்றவற்றுக்கு ஃபேன்சி நம்பர்கள் மிக மிக அவசியமாகிவிட்டது. காரணம் வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை எளிதாக நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்பதால்தான். அதேபோல் தனிநபர்களும் தாங்கள் தனித்து தெரியவேண்டும் என்பதற்காக ஃபேன்சி நம்பர்களை விரும்பி வாங்குகிறார்கள்.
அப்படித் தனித்து தெரிய வேண்டும் என்று நினைக்கும் ஆட்களைக் குறிவைத்து பணம் பார்த்துவிடும் போக்குதான் இப்போது பரவலாகி வருகிறது.
செல்போன் இணைப்பு வாங்கும்போது ஃபேன்சி நம்பர் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டால் அதற்கு தனியாக கட்டணம் வாங்கிக்கொண்டு நாம் விரும்பும் நம்பரைத் தருகிறார்கள் செல்போன் சேவை நிறுவனத்தினர். இந்த ஃபேன்சி நம்பருக்கு ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து இருபத்தைந்தாயிரம் வரை வாங்குகிறார்கள். சில நிறுவனங்கள் இந்த எண்களை ஏலம் விடுகிறது. செல்போன் நிறுவனங்கள் இந்த நம்பர்களை அதன் வரிசைக்கேற்ப சில்வர், கோல்டு, பிளாட்டினம் என பிரித்து வைத்துள்ளன.

ஒருவர் கோல்டன் நம்பர் வைத்திருந்தால் அவருக்கு அது ஒரு பெருமை! அதற்காக அவர் தாராளமாக கூடுதல் பணம் கட்டத் தயாராக இருக்கிறார். இப்படி ஃபேன்சி நம்பர்கள் வைத்துக்கொள்வதில் இன்று போட்டா போட்டியே நடப்பதால் அந்த எண்களுக்கு டிமாண்ட் கூடிவிட்டது. இந்த டிமாண்டை வைத்துதான் சிலர் பணம் அள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் மார்க்கெட்டில் புதிதாக என்ன சீரியஸில் எண்கள் வருகிறது என்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அதில் ஃபேன்சி நம்பர்கள் இருக்கும்பட்சத்தில் உடனே அந்த நம்பரை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அதன் பிறகு அந்த எண்ணை அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள்!
சுருக்கமாகச் சொன்னால் சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்பதுபோலத்தான் இதுவும். ஆனால் அது சட்டப்படி குற்றம். சினிமா தியேட்டர்காரர்களும் போலீசில் இதுகுறித்து புகார் செய்துவிடுவார்கள். காவல்துறையும் நடவடிக்கை எடுத்துவிடுகிறது. ஆனால் செல்போன் நம்பர் விவகாரத்தில் கம்பெனிகள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் கூடுதல் கட்டணம் கட்டி நம்பரை வாங்கி வைத்திருக்கும் நபர் அதைவிட அதிக விலைக்கு அதை இன்னொரு நபருக்கு தாராளமாக விற்கிறார். செல்போன் நிறுவனமும் அந்த நம்பரை பிளாக்கில் வாங்கியவருக்கு மாற்றிக்கொடுத்துவிடுகிறது. ஒரு சிம் கார்டை வாங்குவதற்கு என்னென்ன அத்தாட்சிகளைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்தால் போதுமானது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நம்பரை மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் பெரிதாக எதுவும் இதுவரை இல்லை.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இப்படி ஃபேன்சி எண்களை ஒருவர் தொடர்ந்து வாங்கி வருகிறார் என்றால் சம்பந்தபட்ட நிறுவனத்திட மிருந்தே புதிய ஃபேன்சி எண்கள் என்னென்ன வந்திருக்கின்றன என்று அவர்களே எஸ்.எம்.எஸ். அனுப்பி விடுகிறார்கள். வாடிக்கையாளருக்கு என்று நினைத்து அவர்கள் அனுப்பும் அந்த தகவல் பழம் மாதிரி இந்த பிளாக் பார்ட்டிகளுக்கு கிடைத்துவிடுகிறது!
இப்படி ஃபேன்சி நம்பரை வாங்கி விற்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம்...
''இதுவரை இதை சட்டப்படி தவறு என்று யாரும் சொல்லவில்லை. அதனாலதான் இதில் இறங்கினேன். முதன்முதலில் நானே ஆசைப்பட்டு ஒரு நம்பரை வாங்கினேன். சூப்பரான நம்பர் அது. என்னுடைய நம்பரைச் சொன்னதுமே எல்லோருமே ஒரு பொறாமையுடன்தான் பார்த்தார்கள். ஒருநாள் என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவருடன் ஒரு பிஸினஸ்மேனும் இருந்தார். அவர் என்னுடைய நம்பரைப் பார்த்துவிட்டு அதை தனக்குத் தருமாறு கேட்டு கூடவே ஒரு பெருந்தொகையும் தருவதாகச் சொன்னார். நல்ல தொகை என்பதால் நானும் அவருக்கு அந்த நம்பரை மாற்றிக் கொடுத்துவிட்டேன். அதிலிருந்து இப்படி வாங்கி விற்பது தொற்றிக்கொண்டுவிட்டது. இப்போதெல்லாம் நான் வீட்டில் பாக்கெட் மணி கேட்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் சிலசமயங்களில் நான் பணம் கொடுத்து உதவுகிறேன்!'' என்றார்.
ஃபேன்சி நம்பர் மீது அப்படி என்ன மோகம் என்று இத்தகைய நம்பர் ஒன்றை வாங்கியவரிடம் கேட்டோம்...
''நீங்களே பார்த்தால் தெரியும் ஃபேன்சி நம்பர் வைத்திருப்பவர்கள் சாதாரண நபர்களாக இருக்க மாட்டார்கள். அது ஸ்டேட்டஸ் சிம்பல்! அந்த நம்பரே சொல்லிவிடும் நாம் யாரென்று. அதனால் பல விஷயங்கள் எளிதாக நடக்கிறது. இன்றைக்கு நாம் யாரையாவது தொடர்பு கொண்டால் அவர்கள் போனில் நம் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே போனை எடுக்கிறார்கள். இல்லாவிட்டால் தொந்தரவாகக் கருதி எடுப்பதில்லை. ஆனால் நாம் ஃபேன்சி நம்பரிலிருந்து பேசும்போது பெரும்பாலும் எடுத்துவிடுவார்கள். இன்னொரு வசதி நீங்கள் கஸ்டமர்கேருக்கோ அல்லது சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களுக்கோ தொடர்பு கொள்ளும்போது நமது நம்பரைப் பார்த்துவிட்டு உடனே நமது பிரச்னையை சரிசெய்துவிடுகிறார்கள்... இப்படி நிறைய லாபங்கள் இருக்கிறது. அதனால்தான் விலை அதிகமாக இருந்தாலும் ஃபேன்சி நம்பரை வாங்கி வைத்துக்கொள்கிறேன்'' என்று அவர் சொல்லச் சொல்ல நமக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்படி ஃபேன்சி எண்களை வாங்கி அதிக விலைக்கு விற்பது குறித்து மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியிடம் பேசியபோது, ''ஒருவர் பெயரில் இருக்கும் சிம் கார்டை மற்றொருவரின் பெயருக்கு மாற்றித் தருகிறோம், இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதில் எவ்வளவு பணம் கைமாறுகிறது என்று எங்களுக்குத் தெரியாது. அதனால் அதைப் பற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது'' என்றார்.
எண்களை வைத்து இவ்வளவு பணம் கைமாறுகிறதே இது சட்டப்படி சரியா என்று வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்.
''சட்டப்படி தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும் இது தவறுதான். இது போன்று நடப்பதினால் செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு நஷ்டம், வாடிக்கையாளர்களுக்கும் நஷ்டம். நண்பர், உறவினருக்கு இப்படி ஏதோ ஒன்றை மாற்றிக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதையே ஒரு பிஸினஸாக செய்வது முறையல்ல. இருப்பினும் இதற்குரிய சட்ட முறைகள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும்.
இணையதளங்கள் பிரபலமாக ஆரம்பித்தபோது இதே போல 'சைபர் பார்கிங்கில்’ குற்றங்கள்  நடந்தது. அதாவது முக்கியமான நிறுவனங்களின் பெயரில் இணையதளத்தை தொடங்கி விடுவார்கள். சம்பந்தபட்ட நிறுவனங்கள் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் முடியாமல் போய்விடும். வேறுவழியின்றி அவர்களுக்குப் பணம்கொடுத்து அந்த இணையதளத்தை வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்தார்கள். அதே போலதான் இந்த பிஸினஸும் நடப்பதால் இப்போதே தேவையான நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பது நல்லது!'' என்றார்.
செல்போன் என்றாலே விவகாரம்தான் போலிருக்கிறது. நாடே பேசும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்ன நடந்தது? சில பெயர் தெரியாத கம்பெனிகள் உரிமையை வாங்கிக்கொண்டு பின்னர் பிரபலமான நிறுவனங்களுக்கு அந்த உரிமையை அதிக விலைக்கு கொடுத்து காசு பார்த்துவிட்டது. அந்தத் தொகை அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டியது என்பதுதானே குற்றச்சாட்டு. அதே கதைதானே இந்த ஃபேன்சி நம்பரிலும் நடக்கிறது!
Source-vikatan

ஐ.ஐ.எம். பாடத் திட்டத்தில் 'எந்திரன்'!

இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த ரஜினிகாந்தின் 'எந்திரன்' திரைப்படம், நிர்வாகப் படிப்பு மாணவர்களின் பாடத் திட்டத்தில் இடம்பெறவுள்ளது.

அகமதாபாத்தின் 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்'டின் பயிலும் முதுகலைப் படிப்பு மாணவர்களே ரோபோட் (எந்திரன்) படத்தைப் படிக்கப் போகிறவர்கள்!

முதுகலை மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக "Contemporary film industry: A business perspective" என்ற பாடம் அகமதாபாத் ஐ.ஐ.எம்.-மில் உள்ளது.

இதில், சமகால இந்திய திரைப்படங்களின் வர்த்தகம் தொடர்பாக விஷயங்கள் இருக்கும்.

2010 ஆம் ஆண்டில் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த எந்திரன் திரைப்படம், இந்தப் பாடப்பிரிவில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

அதேபோல், இந்தப் பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு படம், ரஜினிகாந்தின் 'முத்து'.

'முத்து' படம், 'முத்து ஒடிரு மகாராஜா' மற்றும் 'முத்து: தி டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் ஜப்பான் மொழியில் தலைப்பிடப்பட்டு, அந்நாட்டில் வசூலை வாரிக் குவித்ததே, தற்போது இந்தப் பாடத்தில் இடம்பெற்றிருப்பதற்கான காரணம்.

எந்திரன் - தி டீச்சர்!
Source - vikatan

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்...

1987 டிசம்பர் 2...

ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.
டிசம்பர் 5...

அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6...
சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..

எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20...

ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு  சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு  கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச்  சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22...
சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.  

டிசம்பர் 23...

மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...

அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து    கொள்ளவில்லை.                                                                                                                                                                                              
Source - vikatn

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு

qatar
அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் 
பட்டியலை (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது.

ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு  மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன்  இயற்கை எரிவைவ்ஐ உற்பத்தி செய்கிறது.

கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு  90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது.  79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு  52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு  52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு  48,714 டாலர்கள்)பெற்றுள்ளது.

ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது.

அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு  38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை.

36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது  இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  3,176 டாலர்கள்),  113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு  5,026 டாலர்கள்)

முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:

1    கத்தார்   90,149 டாலர்கள்

2    லக்செம்பெர்க்    79,411  டாலர்கள்

3    நார்வே    52,964    டாலர்கள்
4    சிங்கப்பூர்   52,840    டாலர்கள்
5    ப்ரூனே    48,714    டாலர்கள்
6    அமெரிககா    47,702    டாலர்கள்
7    ஹாங்காங்    44,840    டாலர்கள்
8    சுவிட்சர்லாந்து    43,903   டாலர்கள்
9    ஹாலந்து    40,601    டாலர்கள்
10    ஆஸ்த்ரேலியா    39,841    டாலர்கள்

தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா !

தமிழ் இனி மெல்லச் சாகும்!  விழித்திடு தமிழா !

மிழ் இனி மெல்லச் சாகும் - என்றான் பாரதி . இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை என்றே தோன்றினாலும், ஒரு மொழி அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது தமிழுக்கும் உள்ளது. 

நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த கட்டுரை - நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை. எங்கே சார்? ஸ்ரீலங்கா வில அக்கிரமம் நடந்தப்போவே நாங்கள் எல்லாம் சும்மாதான் வேடிக்கை பார்த்தோம்.. இன்னும் நூறு வருஷம் கழிச்சு நடக்கபோற விஷயத்துக்கு ... கொஞ்சம் ஓவரா இல்லை ! .... ..  என்று கேட்பவர்களுக்கு.....???? 

Tamil tops the series of languages digged-in? - Tamil Literature Ilakkiyam Papers
சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில்"மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது.

அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களைமேற்கொண்டவர். 

ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். 

அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது. அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993 இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை.

உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான்.  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. 
இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. 
ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி.

ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விஷயங்கள்  சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது. எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது.

அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது.

பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....

"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."


http://www.livingextra.com/2010/12/blog-post_08.htm

காங்கிரஸ் வளருகிறதா????

    


1967ல் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கியது முதல் தொடர்ந்து தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன திராவிடக் கட்சிகள். அண்ணாவில் தொடங்கி கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் வரை 43 ஆண்டுகளாக திராவிடத்தின் பெயரால் இயங்கும் கட்சிகளின் தலைவர்களே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார்கள்.இந்திய மாநிலங்களில் தமிழகத்தின் அரசியல் களம் மட்டும் எப்போதுமே மாறுபட்டிருக்கும்.

    மாநிலக்கட்சிகள் தான் இங்கே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.  தேசியக்கட்சிகள் மாநிலக்கட்சிகளைச் சார்ந்தே அரசியல் செய்ய வேண்டிய நிலைதான் இன்று வரை தொடர்கிறது. ஆனால் 2011 ல் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் இதே நிலை நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.  

எந்த திராவிடக்கட்சி நம்மை சேர்த்துக்கொள்ளும், யார் நமக்கு அதிக இடங்கள் தருவார்கள் என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் காத்திருக்கும் காங்கிரஸ் கட்சி. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர பிரதான கட்சிகள் அனைத்தும் காதல் வசனம் பேசிக்கொண்டிருக்கின்றன.  கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்கிறது தி.மு.க.! நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயாராக இருப்பதாக சம்மனே இல்லாமல் ஆஜராகி பேட்டி கொடுக்கிறார் ஜெ... காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒரு அணி அமைந்தால் அதில் சேர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று வெளிப்படையாக பேட்டி கொடுக்கிறது தே.மு.தி.க.... பா.ம.க.வும் இந்த நிலையில்தான் இருக்கிறது என்கிறார்கள் அந்தக்கட்சியின் முக்கியத் தலைவர்கள். இப்படி பிரதான கட்சிகள் அனைத்தும் போட்டிப் போட்டுக் கொண்டு காங்கிரசின் உறவுக்காக காத்திருக்கிறார்கள்.
எப்போதும் மத்தியில் ஆட்சி அமைப்பதை மட்டும் கருத்தில் கொள்ளும் காங்கிரஸ் கட்சியும் கூட இந்த முறை மாநில ஆட்சி பற்றியும் பேசுகிறது. காங்கிரசை காக்க வந்திருக்கும் அவதார புருஷராக அந்தக் கட்சித் தலைவர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி எப்படியும் தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கெடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார். தமிழக கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுக்க சென்னை வந்திருந்த ராகுல் தனிப்பட்ட முறையில் அனைத்து பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.
   அப்போதே, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவதே என் நோக்கம்.  அதற்கான முயற்சியை முதலில் உ.பி.யில் மேற்கொண்டேன்.  உடனடி பலன் இல்லாவிட்டாலும் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது.  அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே என் முக்கிய குறிக்கோள் என்றார்.  எம்.பி. தேர்தலுக்கு முன்பு அவர் இதைச் சொன்னபோது காங்கிரஸ் கட்சியின் நிலை கவலைக்கிடமாக இருந்தது.  

  திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியா என்று பெரும்பாலானவர்கள் முகத்தில் சிரிப்பு தெரிந்தது.  ஆனால் தமிழகத்தின் கட்சிகள் காங்கிரசுக்கு விரிக்கும் ரத்தினக் கம்பள வரவேற்பை பார்க்கும் போது ராகுலின் விருப்பம் விரைவிலேயே நிறைவேறிவிடுமோ என்று தோன்றுகிறது.   தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்காவிட்டாலும் ஆட்சியில் பங்கு பெறும் அளவிற்கு நிலைமை மாறி வருகிறது என உற்சாகமாக பேசி வருகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். 
உண்மையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? 1989க்கு பிறகு காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதே இல்லை.   அதனால் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்ன என்பதை உறுதியாக சொல்லமுடியாது.சமீபத்தில் எடுக்கப்பட்ட பல சர்வேக்களின் கணக்குப் படி 8 லிருந்து 10 சதவீத வாக்கு வங்கியைக் கொண்டதாக இருக்கிறது காங்கிரஸ்.   தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட போதும் கடந்த 2009 எம்.பி. தேர்தலில் பாதிக்கு பாதி இடங்களை மட்டுமே காங்கிரசால் கைப்பற்ற முடிந்தது.
    சொந்தக் கட்சியின் வி.ஐ.பி. வேட்பாளர்களாக இருந்த மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டவர்களையே வெற்றி பெற வைக்க முடியாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஓராண்டில் அப்படி என்ன செல்வாக்கு கூடிவிட்டது? மத்திய அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளாலும், விலை வாசி உயர்வு உள்ளிட்ட அம்சங்களாலும் அதிருப்திதான் கூடியிருக்கிறதே தவிர வாக்கு சதவீதம் கூடவில்லை.

  தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் காதல் வசனங்களால் காங்கிரஸ் தலைவர்களின் தன்னம்பிக்கை மட்டுமே கூடியிருக்கிறது.  

தொண்டர் பலத்தையும், மக்கள் செல்வாக்கையும் மட்டுமே நம்பி தேர்தல் களம் கண்ட காலங்களில் மாநிலக்கட்சிகளுக்கு இருந்த தன்னம்பிக்கை இப்போது இல்லை.  அதிகாரமும், பணபலமும்தான் வெற்றியை உறுதி செய்யும் என்றும் அதற்கு மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காங்கிரசின் துணை அவசியம் என்பதாலேயே போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றன மாநிலக்கட்சிகள். திராவிடக்கட்சிகளின் இந்த நம்பிக்கை இழப்புதான் காங்கிரசுக்கு பெரிய பலமாக இருக்கிறது.   அதிகாரத்தை மையமாக கொண்டதாக, பண பலத்தை மையமாக கொண்டதாக மாறியிருக்கும் இன்றைய அரசியல் நிலைதான் இதற்கெல்லாம் காரணம். தமிழகத்தின் செல்வாக்கான தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் தன்னம்பிக்கை குறைவையும் சரியாக கணக்கிட்டிருக்கிறது காங்கிரஸ் தலைமை. அந்தக் கணக்கீடுதான் ஈழத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட வழிவகுத்தது.

திராவிடக்கட்சிகள் தன்னம்பிக்கையோடு இருந்திருந்தால் போர் நிறுத்தம் செய்ய ராஜபட்சேயை வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.  

திராவிடக்கட்சிகள் தன்னம்பிக்கை குறையாமல் இருந்திருந்தால் காவிரி நீர் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் பாராமுகம் காட்டிக்கொண்டிருக்காது காங்கிரசின் மத்திய ஆட்சி.   எந்தக் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அண்ணா தலைமையிலான திராவிடக்கட்சி பாடுபட்டதோ... அதே காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்துவிடுவதில் முனைப்பாக இருக்கின்றன இன்றைய திராவிடக்கட்சிகள். 

மகிழ்ச்சி வேண்டும்....

ஏழை, பணக்காரன் என எல்லோரும் விரும்பும் விஷயம் பணம். ஆனால் பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுக்காது. பீரோ நிறைய பணம் இருந்தும், எப்போது இன்கம்டாக்ஸ் ரெய்டு வருமோ என பயந்து கொண்டிருந்தால் அங்கு சந்தோஷம் இருக்காது. அதேபோல், கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் ஆரோக்கியமாக இல்லையென்றால் அத்தனை பணமும் வீண். பொருளாதார ரீதியாக மக்கள் முன்னேறினால் போதாது, அவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என பல நாடுகள் விரும்புகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அளவிட ஜிடிபி உதவுகிறது. அதேபோல், தேசிய ஒட்டுமொத்த சந்தோஷத்தை அளவிட ஜிஎன்எச் என்ற அளவீட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். பூட்டானின் அரசராக இருந்த ஜிக்மே சிங்கே வாங்சுக் தான் முதலில் இதை உருவாக்கியவர். 1972ல் தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்றதும், மக்களின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் எனக் கூறினார். அதன்பிறகே அந¢த வார்த்தை பிரபலமானது. மக்களின் மன நலம், உடல் நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், அரசு நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் சந்தோஷத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அளவீட்டின்படி, உலகிலேயே மகிழ்ச்சியாக இருப்பவர்கள் டென்மார்க் நாட்டவர்தான். 8.3 மதிப்பெண்ணுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 5.5 மதிப்பெண். நமக்கு முன்னால், அமெரிக்கா (7.4), இங்கிலாந்து (7.1), சீனா (6.3) நாடுகள் இருக்கின்றன.
எல்லா வசதிகளும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என சொல்ல முடியாது. கல்வி, சுகாதார வசதி இல்லாதவர்கள் கூட மற்ற காரணங்களுக்காக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கொல்கத்தாவை சேர்ந்த சமூக அறிவியல் நிபுணர் சுகதா மர்ஜித் கூறியிருக்கிறார். உங்கள் வருமானத்தையும் என் வருமானத்தையும் கூட்டினால் மொத்த வருமானம் கிடைக்கும். வகுத்தால் சராசரி கிடைக்கும். சந்தோஷத்தை எப்படி கூட்டி, வகுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர் சிலர்.
இத்தனை கோடி ஏழைகள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5.5 மதிப்பெண் கிடைத்திருப்பதற்கும் காரணம் சொல்கிறார்கள். தங்களை விட கஷ்டப்படும் ஏழைகளைப் பார்த்து தங்கள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என சந்தோஷமாகி விடுகிறார்களாம்.
Source - Dinakaran