திருக்குறள்

தொடுதலும் இனிமை ...

கணவன், மனைவியோ, காதலர்களோ அவர்களது உறவு வலுவாக இருப்பதற்கு காதலுடன் கூடிய தொடுதல் முக்கியமானது. ஆனால் நிறையப் பேர் இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடியிடமும் இந்த ரொமான்டிக் தொடுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக்குள்ளும், கணவன், மனைவிக்குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை அதிகரிக்கும்.அதிலும் கைகளைப் பிடித்துக் கொள்வது இருக்கிறதே, அதை விட சிறந்த அன்பை வெளிப்படுத்தும் விஷயம் இருக்க முடியாது என்கிறார்கள். காதலனோ, காதலியோ அல்லது கணவனோ, மனைவியோ, ஒருவர் கையை இன்னொருவர் பாசத்துடன் பற்றிக் கொள்ளும்போது, மனதில் பாதுகாப்பான உணர்வு ஏற்படுமாம். உனக்கு நான், எனக்கு நீ என்பதை வார்த்தைகளே இல்லாமல் வெளிப்படுத்தும் உணர்வுதான் இந்த கைப்பிடித்தல்
இதை இங்குதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்ய முடியும் என்பது இதில் உள்ள விசேஷம்.பார்க்கிலோ, பீ்ச்சிலோ, வயதான தம்பதியினர் அன்னியோன்யமாக, கைகளை பரிவுடன் பற்றிக் கொண்டு நடப்பதைப் பார்க்கும் பல இளம் ஜோடிகள், நாமும் ஒருநாள் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கலாம். ஆனால் அந்த நினைப்பு வயதானவர்களுக்குத்தான் வர வேண்டும் என்பதில்லை. இளம் வயதிலேயே அந்த பாச உணர்வை நாம் கைக் கொள்ளலாம்.ஆனால் இன்றைய மெஷின் உலகில் கைகளைப் பரிவுடன் பற்றிக் கொள்வது என்பதே நிறைய பேருக்கு மறந்து போய் விட்டது. கைகளை ஆதரவுடன் பற்றிக் கொள்ளும்போது ஏற்படும் உணர்வுகளை அனுபவித்தால்தான் தெரியும். கிட்டத்தட்ட 'கட்டிப்புடி' வைத்தியம் போலத்தான் இதுவும்.நாம் உறுதியாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் அன்பாக, அனுசரணையாக, காதலுடன் இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லும் மொழிதான் இந்த கைப்பிடித்தல்.எப்போதெல்லாம் மனக் கிலேசம், மனச் சோர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உங்களுக்குப் பிரியமானவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சில விநாடிகள் இருங்கள். எல்லாமே உங்களிடம் வந்து விட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்வீர்கள்.
-தட்ஸ்தமிழ்

தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்

இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்‌திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன். கடந்த மூன்றரை மாதமாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் ஒருமித்த குரலில் விடுத்த வேண்டுகோளிற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை அயலுறவு செயலர் சிங்சங்கர் மேனன் பயணம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழித்தலை தடுக்க போர் நிறுத்தம் செய்திடு என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழர்களாகிய நீங்கள், தீர்மானம் போடலாம், போராட்டம் நடத்தலாம், மனித சங்கிலி நடத்தலாம், உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளலாம். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு, உங்களின் இனத்தை அழித்துவரும் அதிபர் ராஜபக்ச அரசுடன், “முன் எப்போதையும் விட இப்போது ஆழ்ந்த, இதமான, பலமான உறவு உள்ளது” என்று சிங்சங்கர் மேனன் தன்னிடம் கூறினார் என்று சிறிலங்க அயலுறவு அமைச்சர் ரோகித போகல்லகாமா கூறியிருப்பது, “தமிழர்களைத் தாண்டிய ஒரு நல்லுறவை நாங்கள் சிறிலங்க அரசுடன் கொண்டுள்ளோம்” என்பதையே தமிழனின் செவிப்பறை கிழிய பறைசாற்றியுள்ளது. அதுமட்டுமா? “தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ வழிவகுக்கும் ஒரு அரசியல் தீர்வை, பேச்சு வார்த்தையின் மூலம் காண வேகமாக செயலாற்ற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பாக சிறிலங்க அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக” கொழும்புவில் இருந்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
விமானம் மூலம் குண்டுகளை வீசியும், கனரக பிரங்கி, பல்குழல் பீரங்கி, எறிகணைகள் சுட்டும் ஒவ்வொரு நாளும் தமிழர்களைக் கொன்று வதைத்துவரும் சிறிலங்க அரசின் அயலுறவு அமைச்சரிடமும், அதிபரிடமும், ‘தமிழர்கள் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ அமைதி வழியில் தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளதாக அறிக்கை விடுவது தமிழர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, வெறுப்பேற்றும் நடவடிக்கையாகும். இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வை வலியுறுத்திய ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும், முதலில் தமிழர்கள் மீது நடத்திவரும் போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஒன்றுமே பேசாமல், தமிழர்கள் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ ‘விரைந்தவழிகாணுமாறு சி‌வ்சங்கர் மேனன் கூறிவிட்டு வருகிறார் என்றால், அதன் பொருள், ‘விரைந்து அழித்துவிட்டு பிரச்சனையை முடியுங்கள்’ என்பதுதானே தவிர, தீர்வு காணுங்கள் என்று பொருளல்ல.
எனவே தனது வெளிப்படையான, மறைமுகமான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் நலனோ அல்லது அவர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதோ தங்களின் நோக்கமோ, கவலையோ அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதன் தலைமைப் பொறுப்பிலுள்ள காங்கிரஸ் கட்சியும் தெளிவாக தெரிவித்துவிட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை தமிழ்நாடும், உலகளாவிய தமிழினமும் ஒருமித்த குரலில் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும், இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைக்கு ஒப்புக்கொண்டு சேனநாயகா, பண்டாரநாயகா, சிறிமாவோ ஆகியோர் ஒப்பந்தம் செய்து, பிறகு அதனை கிழித்துத் தூக்கி எறிந்தததைப் போல மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் தமிழனின் உரிமைகளைப் பறித்து நெஞ்சில் குத்தினர். தமிழ்நாடு, புதுவையிலிருந்து 40 மக்களவை உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, இன்று அவர்களின் வாழ்வைக் காக்க குரல் கொடுத்த தமிழினத்தின் கோரிக்கையை மறுத்து முதுகில் குத்தியுள்ளது. இதற்கு மேலும் ஈழத் தமிழரை காக்கவோ அல்லது அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணவோ ஐ.மு.கூ. அரசை நம்பிப் பயனில்லை.
எப்படி ஈழத் தமிழனின் நலனைப் புறக்கணித்து, தமிழ்நாட்டு மீனவனின் வாழ்வுரிமையை தாண்டி, தமிழின எதிரியான இன வெறி சிறிலங்க அரசுடன் மத்திய அரசு உறவு கொண்டுள்ளதோ அதற்கு பதிலடியாக தமிழினம் மத்திய அரசைத் தாண்டி, நியாயமான தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டங்களுக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையையும், உலக நாடுகளையும் நேரடியாக நாட வேண்டும். தமிழனின் சுதந்திரமும், வாழ்வுரிமையும் பேரத்திற்கோ அல்லது தன்னை ஒரு வல்லரசாக காட்டிக்கொள்ள முற்படும் ஒரு அரசின் நலனிற்காகவோ பலியிடுவதற்கு இல்லை என்பதை தமிழினம் ஒன்றுபட்டு எழுந்து வீறுகொண்டு செயல்பட்டு நிரூபித்திட வேண்டும்.

எதிர்பார்ப்பை நிறைவேற்றி ஏற்றம் தருவாரா ஒபாமா?

அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், மிகுந்த பரபரப்பும், ஆரவாரமும் சூழ அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பராக் ஹூசேன் ஒபாமா பதவியேற்றுள்ளார்.
அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே குறிப்பாக இந்தியாவிலும் தலைப்புச் செய்திகளில் ஒபாமாவின் பதவியேற்பும், அவர் ஆற்றிய உரையும் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க புதிய அதிபர் என்பதை விடவும், ஆப்பிரிக்க அமெரிக்கரான கறுப்பர் இனத்தைச் சேர்ந்த முதலாவது அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜான் மெக்கெய்னை படுதோல்வியடையச் செய்து வெற்றிபெற்றார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா.இதையடுத்து கடந்த 8 ஆண்டுகால குடியரசுக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து, இரு முறை அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் பதவி விலகியுள்ளார்.ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் தான் ஈராக் போர், செப்டம்பர் 11 டபிள்யூ.டி.சி எனப்படும் நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல், அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுப்பு போன்ற நிகழவுகள் ஏற்பட்டுள்ளன.இவற்றுக்கெல்லாம் மேலாக இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு (Recession) அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.பொருளாதார தேக்க நிலை தொடரும் கால கட்டத்தில் ஒபாமாவின் பதவியேற்பு நடைபெற்று முடிந்துள்ளது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.புதிய அதிபராகப் பதவியேற்ற பின் உரை நிகழ்த்திய பராக் ஒபாமா, பொருளாதார சரிவை மேம்படுத்தத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.நம்மூர் அரசியல்வாதிகள் போல் முந்தைய ஆட்சியாளர்கள் மீது குற்றம்சாட்டாமல், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்து விட்ட பொருளாதார தேக்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டது அவரின் பெருந்தன்மையான மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது.தவிர, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், யூதர்கள் என பல்வேறு இனத்தவர்களும், பன்மொழி பேசுபவர்களையும் உள்ளடக்கியது அமெரிக்கா என்றும், அனைவரின் நல்வாழ்வுக்கும் முந்தைய அதிபர்களைப் பின்பற்றி தாம் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார் ஒபாமா. “அதற்கு ஆண்டவரே நீர் எமக்கு உதவுவீராக!'' என்று கூறி, பைபிள் மீது இடது கையை வைத்து வலது கையை உயர்த்தி பதவியேற்றதை உலகமே தொலைக்காட்சிகளில் பார்த்தது.இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் சாதனையாளர்களாகவே இருந்துள்ளனர்.அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ் (சீனியர்), பில் கிளிண்டன் உட்பட பலரும் இடது கை பழக்கம் உள்ளவர்களே. அவர்களைப் போல பராக் ஒபாமாவும் இடது கையால் கையெழுத்திட்டே அதிபர் பதவியை ஏற்றுள்ளார்.நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனபார்ட், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்சாண்டர், தத்துவ மேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட வரலாறு படைத்த பலரும் இடக்கை பழக்கம் கொண்டவர்களே.அந்த வகையில் பராக் ஒபாமாவும் புதிய வரலாற்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே அமெரிக்கர்கள் மட்டுமல்லாது இந்திய மக்கள் உட்பட உலக நாடுகளில் வாழும் பெரும்பாலானோரின் விருப்பமுமாகும்.வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர மன்னன் கோன் உயரும் எனும் சங்க கால பாடலைப் போன்று, அமெரிக்காவில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரம் நிமிர்ந்து மேம்பட்டால் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார தேக்க நிலை மாறி வளம் ஏற்படும். அதற்கேற்ப உலக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, பொருளாதார ஏற்றத்தை அளிப்பாரா பராக் ஹூசேன் ஒபாம

ஏ.ஆர். ரஹ்மான் - மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்

.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது பற்றி கருத்து தெ‌ரிவித்த இயக்குனர் ஒருவர், அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்ச‌ரியமும் இல்லை, கிடைக்காவிட்டால்தான் ஆச்ச‌ரியப்பட்டிருப்பேன் என்றார்.1992ல் வெளியான ரஹ்மானின் முதல் படம் ரோஜாவிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு செவிமடுத்துவரும் ரசிகர்களுக்கும் இந்த விருது எவ்வித ஆச்ச‌ரியத்தையும் அளிக்கவில்லை. அவரது திறமைக்கு, இசை பங்களிப்புக்கு கோல்டன் குளோப் விருது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற மனப்பதிவே அனைவ‌ரிடமும் மேலோங்கியிருந்தது.ரஹ்மானின் இசையார்வம் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. அவரது தந்தை ஆர்.கே. சேகர் பிரபல இசையமைப்பாளர். மலையாளப் படங்கள் பலவற்றில் பணிபு‌ரிந்திருக்கிறார். ரஹ்மானுக்கு அவரது தந்தையே முதல் குருவாகவும் இருந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது தன்ரா‌‌ஜ் மாஸ்ட‌ரிடம் முறைப்படி இசை பயின்றார் ரஹ்மான்.ரஹ்மானின் முதல் திரைப்பிரவேசம், மணிரத்னத்தின் ரோஜா. விளம்பரப் படங்களுக்கு அவர் இசையமைத்திருந்ததை கேட்டே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரோஜாவுக்கு இசையமைக்கும் முன் (1991ல்) தனது வீட்டின் பின்புறம் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார் ரஹ்மான். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டிருந்த அந்த ஸ்டுடியோ இன்று இந்திய அளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்டுடியோவாக திகழ்கிறது.இசையமைப்பாளர் ஒருவருக்கு இசையறிவுடன் நவீன தொழில் நுட்பம் குறித்த பு‌ரிதலும் இருக்க வேண்டும் என்பது ரஹ்மானின் நிலைப்பாடு. தொழில்நுட்ப விஷயத்தில் காலத்தோடு ஒழுகினால் மட்டுமே சர்வதேச இசையுலகில் நிலைத்து நிற்க இயலும். இதனை ச‌ரியாக பு‌ரிந்து கொண்டவர் ரஹ்மான். அவர் தொடங்க இருக்கும் இசைப்பள்ளியில் இசையையுடன், நவீன தொழில்நுட்பம் குறித்தும் கற்பிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். திரையிசையில் மரபான நடைமுறையை ரஹ்மான் நிராக‌ரித்த போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இசையில் அளவுக்கதிகமாக தொழில்நுட்பத்தை கலக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அவர் இசையமைப்பாளர் அல்ல, வெறும் கம்போஸர் மட்டுமே என இசைத்துறையில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். இன்று அந்த குற்றச்சாட்டுகள் நிறமிழந்து விட்டன. மேலும், அவரது உலகளாவிய புகழுக்கு அவரது தொழில்நுட்ப அறிவும் ஒரு காரணமாக இருப்பதை அவரை விமர்சித்தவர்களே ஒப்புக் கொள்வர்.ரஹ்மானால் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இசையமைக்க முடியும், தமிழ் கிராமிய இசை அவருக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இது ஒரு குறையாக முன்வைக்கப்பட்டபோது அவர் இசையமைத்த படங்கள் கிழக்கு சீமையிலே மற்றும் கருத்தம்மா. இந்தப் படங்களின் இசையும், பாடல்களும் ரஹ்மானுக்கு கிராமிய இசையில் அறிமுகமில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்தன. என்றாலும், தமிழ் கிராமிய இசை முழுமையாக அவருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே உண்மை.இந்திப் பாடல்களுக்கு செவிமடுத்து வந்த தமிழர்களை தமிழ் திரையிசையின் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு வந்த வட இந்தியர்களை தமிழ் திரையிசையின்பால் ஈர்த்தவர் ரஹ்மான். நேரடி இந்திப் படங்களுக்கு அவர் இசையமைக்கும் முன்பே ரோஜா, ஜென்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் வாயிலாக அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் இசையமைப்பாளராகியிருந்தார்.
ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளில் தயாரான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது முதல் இந்திப்படம் ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை பாலிவுட்காரர்கள் அனுபவப்பட்டது இந்தப் படத்தில்தான்.
இன்று பாலிவுட்டில் நல்ல திரைப்படம் ஒன்று தயாரானால் இசை ஏ.ஆர். ரஹ்மான் என்பது எழுதப்படாத விதி. ஃபயர், லகான், ரங் தே பசந்தி, ஸ்லம் டாக் மில்லியனர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ரஹ்மானின் இசைப் பயணத்தில் 2002ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டில்தான் அவரது பாம்பே ட்‌ரிம்ஸ் பி‌ரிட்டனில் அரங்கேறியது. ஆண்ட்ரூ லாயிட் வெப்ப‌ரின் பாம்பே ட்‌ரிம்ஸ் நாடகம் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது.1997ல் வெளியான ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பம் குறிப்பிடத்தகுந்த முயற்சி. இதையடுத்து அவர் வெளியிட்ட ஜன கன மண ஆல்பமும் ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றது. திரையிசையில் பாடல்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுப்பவர் ரஹ்மான். 2005 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்தி‌ரிகை வெளியிட்ட ‘டாப் டென் மூவிஸ் சவுண்ட் ட்ராக்ஸ் ஆஃப் ஆல் டைம்’ பட்டியலில் ரஹ்மானின் ரோஜாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றியவர் என்ற பெருமை ரஹ்மானுக்கு உண்டு. ரோஜா (1992), மின்சாரக் கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003) என நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள், இருபத்தியிரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இப்போது கோல்டன் குளோப் விருது என ரஹ்மானின் விருது பட்டியல் மிக நீண்டது.இந்த கௌரவம் அத்தனை எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. 1966 ஆம் ஆண்டு ஜனவ‌ரி ஆறாம் நாள் சென்னையில் பிறந்த திலீப் குமார், ஏ.ஆர்.ரஹ்மானாக புகழின் உச்சியை வந்தடைந்ததற்குப் பின்னால் கடின உழைப்பு, விமர்சனத்துக்கு துவளாத மனம், பெருமைகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மனப்பக்குவம் என இளைய தலைமுறை கற்றுக் கொள்ளும் பல விஷயங்கள் இருக்கின்றன. ரஹ்மானின் ஒன்பதாவது வயதில் அவரது தந்தை மரணமடைகிறார். இளையராஜாவிடம் கீ போர்ட் ப்ளேயராக அவர் சேரும்போது வயது பதினொன்று. இருபத்தியிரண்டாவது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவி திலீப் குமார் என்ற தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் (Aடடயா சுயமமாய சுயாஅயn) என மாற்றிக் கொள்கிறார். இருபத்தி ஆறாவது வயதில் முதல் திரைப்பிரவேசம்.இன்று ரஹ்மான் என்பது அகிலம் முழுவதும் தெ‌ரிந்த பெயர். ஹாலிவுட் சினிமா அவரை விரும்பி அழைக்கிறது. இன்சைட் மேன், லார்ட் ஆஃப் த ‌ரி‌ங்‌ஸ், தி ஆக்சிடெண்டல் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் ரஹ்மானின் இசை கோவைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற டைம் பத்தி‌ரிகை அவருக்கு தந்திருக்கும் பட்டம், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்.ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்கு‌ரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடிய பயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள் மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.
நன்றி-வெப்துனியா

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம். அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.
உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை..
என்பது வெளிப்படை. வார்த்தைகள், ஏன், எண்ணங்கள் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம்.

உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவத, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.

கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.

நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.

ஐயப்ப பக்தர்களுக்கு இடமளிக்கும் மசூதி


திருச்சூர் அருகே உள்ள ஒரு மசூதியில் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கு முஸ்லிம்கள் வசதி செய்து கொடுத்து வருவது மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
மதம்உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒற்றுமை, அன்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை மட்டுமே போதித்த போதிலும், அந்த மதங்களை பின்பற்றும் சில மனிதர்கள் மட்டும் அப்பாதையில் இருந்து விலகி நடக்கின்றனர்.
இதனாலேயே மதத்தின் பெயரால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த சூழ்நிலையில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் மதவேறுபாடுகளைக் களைந்து ஒருவருக்கொருவர் அரவணைத்துக் கொள்ளும் பாங்கையும் பல இடங்களில் காண முடிகிறது.
சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் சபரிமலையில் உள்ள வாவர் மசூதிக்குச் சென்று வழிபடுவதும், அந்த மசூதியில் பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்பட்டு வருவதும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இதேபோல், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, திருச்சூர் அருகே உள்ள சூண்டல் பகுதியில் வாழும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மசூதியில் தங்க இடம் கொடுத்து, பணிவிடைகள் செய்து வருவது மத நல்லிணக்கத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம்.
திருச்சூர் அருகே குண்ணங்குளம் ரோட்டில் அமைந்து உள்ளது இந்த சூண்டல் பகுதி. இங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜூம்மா மசூதி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக எந்நேரமும் திறந்திருக்கிறது.பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடையாக, வாகனங்களில் வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த மசூதியில் இளைப்பாறி விட்டுச் செல்கின்றனர்.
இவர்களுக்கு குடிநீர் வசதி, குழுவாக வருவோர்களுக்கு சமையல் செய்வதற்கு இடவசதி போன்றவற்றை இந்த மசூதியின் நிர்வாகம் செய்து கொடுக்கிறது.

திருமங்கலம் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறுக
ண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் கட்டி-
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் - உன்னால்
பழி தீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!

- கலைஞர் கருணாநிதி.

காதலின் கடைசிக்குறிப்பு !!!


இறக்கை கோதிக்கொண்டிருக்கும்

ஓர் வெண்புறாவின் மென்மையென

தடவிப்போகிறாய்- உரசிப்போகும்

குளி்ர்காற்றென உணர்கிறேன் நான்


கூடிக்களித்திருக்கும்

ஓர் குடும்பவிழாவில்- நீ

ரகசியக்குறிப்புகளை வீசிப்போகிறாய்

நான் அவஸ்தையாய் சமாளிக்கிறேன்..


பெரும்மழையின் வேகத்துளிகளாய்

எனக்குள் புகுகிறாய்


சிறு குழந்தையின் புன்சிரிப்பை

ஓவியமாக்க முயற்சிக்கிறாள் தாய்


உலகின் கடைசி காதல் குறிப்பை

எழுதிக்கொண்டிருக்கிறான்-ஓர்

விரல்களிழந்த காதலன்

தீவிரவாதிகளால் சுடப்பட்ட

காதலியின் இரத்தத்தை மையமாக்கி.....


அமைதியாய் விடிகிறது காலை

இன்னுமொரு காதலை பூத்து...

கருத்துப்பிழை சுமந்து வெளிவரும்

அக்காதலின் கடைசிக்குறிப்பு


-ரிஷி சேது

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌ப்போது ‌விடிய‌ல் : ‌‌கி.‌வீரம‌ணி

ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போரில் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள் எ‌ன்று தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ள திராவிடர் கழக‌‌த் தலைவர் கி.வீரமணி, இல‌ங்கை‌த் த‌மிழர்களு‌க்கு எ‌ப்போது ‌விடுதலை, ‌விடிய‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று வேதனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப்பு‌லிகளை ஒ‌ழி‌க்‌கிறோ‌ம் எ‌ன்ற போ‌ர்வை‌யி‌ல் த‌மி‌ழ் இன‌த்தையே கூ‌ண்டோடு ஒ‌ழி‌த்து‌விட இல‌ங்கை அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.
யாரும் வசிக்காமல், மக்களும் அவர்களைப் பாதுகாக்கப் போராடும் புலிகளும் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி வாழ்வுரிமைக்குப் போராடும் நிலையில், இலங்கையில் கிளிநொச்சியைப் பிடித்து விட்டதால் போர் முடிந்து விட்டது என்று அவர்களே கூட ஒப்புக்கொள்ள முடியாத நிலையில்தான் சிங்கள அதிபரும், அதன் தளபதியும் உள்ளனர்.
அங்கே நடைபெறும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போரில் இப்படிப் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள்.புலி பதுங்கினால் மேலும் தீவிரமாக பாயும் என்பது தமிழ்ப் பழமொழி. எப்படியாயினும் இடையில் எமது ஈழத்தமிழர்கள் இப்படிக்கு குண்டுமழையால் கொல்லப்பட்டு மடிகின்றனரே, எவ்வளவு காலம் இந்த ரத்த ஆறு ஓட வேண்டுமோ? இன உணர்வுமட்டுமா, மனிதநேயம் கூட செத்து விட்டதா என்று கேட்கத் தோன்றுகிறது.
இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் உலக நாடுக‌ள் ஊமையா‌ய் இரு‌க்‌கிறது. இல‌ங்கை‌த் த‌மிழர்களு‌க்கு எ‌ப்போது ‌விடுதலை, ‌விடிய‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று ‌கி.‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழருக்கு கா‌ங்‌கிர‌ஸ் இழைக்கும் துரோகம்!!!

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை ‘அதிகபட்சமானது’, ‘தேவையற்றது’ என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது

இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொருத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துதான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது. இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையை தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது” என்று கூற‌ப்பட்டுள்ளது
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.
காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள ‘பயங்கரவாதி’களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது. அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது
நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது? சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்?
கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே. இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கி‌ன்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு ‘போரை நிறுத்துங்கள்’ என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அதன்பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி (இடையில் அக்.06ஆம் தேதி ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது, அதனை மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் விளக்கி முதலமைச்சர் கருணாநிதி பேசினார்) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவராக உள்ள சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்க அரசுடன் பேசுவோம் என்றுதான் கூறினாரே தவிர, சிறிலங்க அரசிடம் பேசி தாக்குதலை நிறுத்துமாறு கூறுவோம் என்ற எந்த உறுதிமொழியையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்படவில்லை.
அதன்பிறகு, டெல்லி வந்த சிறிலங்க அதிபரின் ஆலோசகரான ஃபசில் ராஜபக்சவிடமும் மத்திய அரசு பேசியதற்குப் பின்னரும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. மாறாக, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் கதிகலங்கி நிறுத்தியிருந்த விமானப்படைத் தாக்குதலை சிறிலங்கா மீண்டும் துவக்கியது. அப்படியென்றால் அர்த்தமென்ன? தாக்குதலை நிறுத்து என்று சிறிலங்காவிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதுதானே?
இதனை எந்த விதத்திலும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுக்கவில்லை. “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்று தமிழக முதல்வரிடம் (செய்தியாளர்களிடமும்தான்) மிக டெக்னிகலாக பேசிவிட்டு மத்திய அரசிற்கு ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பறந்தார்.
தமிழக முதல்வரும், பிரணாப் குழப்பியதை பெரிதாக எடுத்துக்கொண்டு, தன் பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஆனால், அங்கு ஈழத்திலோ தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


தமிழக முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து தமிழர்கள் மீதான போர் நிறுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியபோது கூட, நமது தலைவர்கள் பேசியதையெல்லாம் ஒரு சிலையைப் போல அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம் நமது பிரதமர். தமிழக முதல்வர் குறுக்கிட்டு, அயலுறவு அமைச்சரை சிறிலங்காவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்டு பதில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை பிரணாப் சிறிலங்கா செல்வது உறுதி செய்யப்படவில்லை.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்க சென்று அதிபர் ராஜபக்சாவை சந்தித்துப் பேசினால் அடுத்த நிமிடம் சிறிலங்க இராணுவம் தாக்குதலை நிறுத்துவிடாது என்பது இங்கேயும் தெரியும், அங்கேயும் தெரியும். ஏனென்றால் தமிழர் பிரச்சனையில் நமது மத்திய அரசிற்கும், சிறிலங்க அரசிற்கும் ஒரு ‘நல்ல புரிந்துணர்வு’ உள்ளது விவரம் தெரிந்த தமிழர்களுக்குப் புரியாததல்ல.அதனால்தான், இன்று வரை சிறிலங்க அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை, தமிழர்களுக்கு எதிராக அது நடத்திவரும் இராணுவ ரிதியிலான இன ஒடுக்கலை எதிர்க்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை.
காசாவில் உள்ள ‘இலக்குகளை’ குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அங்கேயுள்ள அப்பாவி மக்களை கொல்கிறது என்பதை உணர்ந்து அறிக்கை அளிக்கும் அயலுறவு அமைச்சகத்திற்கு, அதேபோல விடுதலைப் புலிகளின் ‘இலக்குகளை’க் குறிவைத்து அந்நாட்டு விமானப்படை நடத்தும் தாக்குதலில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா என்ன? தெரியும். பிறகு ஏன் கண்டிக்கவில்லை? காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ‘பார்வை’. அதுதான் நமது அயலுறவு அமைச்சகத்தை வழிநடத்துகிறது.
எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அதனையெல்லாம் எதிர்த்துக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக அரசாகத்தான் இந்தியா இருந்துவருகிறது. அப்படிபட்ட கொள்கையை ஒட்டியே நமது அயலுறவு அமைச்சகத்தின் செயற்பாடும் இருந்து வருகிறது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும், அது காங்கிரஸ் கட்சியின் தற்குறித்தனமான பார்வையால் வழிநடத்தப்படுகிறது.
அதனால்தான், “இந்த ஒரு ஆண்டில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்தத் தாக்குதல்களில் சில சமயங்களில் 500 கி.கி. எடையுள்ள குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன” என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா பேசியதற்குப் பின்னரும், மத்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை. அது தமிழர்களை விட சிங்களவர்களையும், சிங்கள அரசையுமே நட்பாகக் கருதுகிறது. அந்தத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று எத்தனை முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டாகவே தெரிகிறது.
2004ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவை மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது. அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்தும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே வந்த அவரைச் சந்தித்துப்பேசி சிக்கலின்றி ஆட்சியமைக்க வழிகேட்டவர், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகமல்லவா? தமிழக மக்களுக்கு இதெல்லாம் புரியாதா?

அங்கே பாலஸ்தீனர்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இங்கு ஈழத் தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றொழிக்கிறது சிங்கள அரசு. அதற்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. உதவுகிறது. இதனை தமிழர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள்.
அரசியல் சித்து வேலைகள் மக்களுக்குப் புரியாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். 2004ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு ஏற்பட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவளித்தார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.
- நன்றி வெப்துனியா

பூக்களின் அழகை வண்டுகளே அறியும்!

பூக்களின் மகரந்தத்தை வண்டுகள் சேகரிக்கும் என்பதை நாம் விஞ்ஞானப் பாடத்திலும், பட்டறிவிலும் தெரிந்து வைத்திருக்கிறோம். சங்க இலக்கியத்தில் மலர்களுக்கும் வண்டுகளுக்கும் உள்ள உறவுகளை வைத்து எண்ணற்ற பாடல்களை எழுதித் தள்ளியுள்ளனர் சங்கப் புலவர் பெருமக்கள்.
இதில் புகழ் பெற்றது "கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி..." என்ற குறுந்தொகை பாடல். திருவிளையாடல் தருமி பகுதியின் மூலமாக நவீன தமிழ் நெஞ்சங்களில் ஊடுருவி புகழ் பெற்ற பாடல் இது. தலைவியின்பால் ஊடல் கொண்ட தலைவன் கூந்தலின் மணம் பற்றி பெருமை மிகுதியாக கூறுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது
தலைவன் வண்டை நோக்கி கேட்கிறான் எவ்வளவு மலர்களில் நீ அமர்ந்திருப்பாய் இந்த மலர்களில் ஏதாவது ஒன்றிற்கு என் தலைவியின் கூந்தலில் உள்ள மணம் உண்டா என்பதை நீ என் நிலத்தை சேர்ந்த வண்டு என்று நினையாமல், பாரபட்சமில்லாமல் நடு நிலையுடன் கூறுவாய் என்று கேட்பதாக இந்த அற்புதமான சங்கப்பாடல் அமைந்துள்ளது.
அந்த கேள்விக்கு பதில் அளிப்பதுபோல் அமைந்துள்ளது சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்பு ஒன்று. அதாவது பூக்களுக்கு மட்டுமே உள்ள தனித்த அழகு வண்டுகளுக்கு மட்டுமே தெரியுமாம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது பற்றி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். நாம் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறோமோ அதற்கேற்ப வித்தியாசமான வண்ணங்களை காட்டுவது மலர்கள்.
மலர்களின் இதழ்கள் வானவில்லின் அத்தனை நிறங்களையும் காண்பித்து பூந்தாது (தேன்) சேகரிக்கும் பூச்சியினங்களை கவர்ந்திழுக்கிறது என்று இந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தங்களிலே உள்ளார்ந்து உள்ள இந்த நிறமாலையை பூச்சிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் தினுசு தினுசாக பூக்கள் பல வண்ணங்கள் காட்டி கவர்ந்திழுக்குமாம்
இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி பெவர்லீ க்ளோவர் இது குறித்து கூறுகையில் தங்களது ஆய்வின் முதற்கட்ட முடிவின் படி மலர்களின் இந்த நிறமாலைக் கவர்ச்சி பரந்து விரிந்தது என்கிறார்.
தோட்டக்கலை முதல் வேளாண்மை வரை மலர்களும் அதன் பூந்தாது உறிஞ்சும் பூச்சியினங்களும் ஒன்றுக்கொன்று பல்வெறு வண்ணங்களை ஒளிர்வித்து அடையாளம் காட்டிக் கொள்கின்றன, இது நமது அன்றாட வாழ்வில் நாம் கவனிக்க முடியாத, நம் பார்வைக்கப்பாற்பட்ட இயற்கை நிகழ்வு" என்கிறார் இந்த விஞ்ஞானி.
இந்த நிறமாலையை செம்பருத்திப் பூவிலும், மணிமலர் வகைகளிலும் இந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதனை தேனீக்களும் வண்டுகளும் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.
பெரும்பாலும் எல்லா மலர்களிலும் காணப்படும் இந்த நிறமாலை வண்ண பேதங்களை மனிதர்கள் காண முடியாது என்று கூறும் இந்த விஞ்ஞானிகள் வண்டுகள், தேனீக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களுக்கே இது தெரியும் என்றும் இதனால்தான் வண்டுகளும், தேனீக்களும் கூட தேர்ந்தெடுத்த மலர்களையே விரும்புகின்றன. கொங்கு தேர்... வாழ்க்கையுடைய வண்டு என்பது உண்மைதானே. நல்ல பூந்தாதுகளை தேடி ஆராய்ந்து உண்ணும் வண்டு என்று சங்க காலத்தில் தனது உள்ளுணர்வின் மூலம் புலவர்கள் போகிற போக்கில் கூறிய ஒன்று இப்போது விஞ்ஞான ரீதியாக உண்மையாகியுள்ளது
எனவே மலர்களை அதன் மென்மைக்காக பெண்களுடன் ஒப்பிடும் மரபுடன் கவர்ந்திழுக்கும் பெண்களுக்கு மலர்களை ஒப்பிடும் மரபையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- நன்றி
வெப்துனியா

ஒரு சிறைச்சாலை கல்விச் சாலையாகிறது ...

நெல்லை: பாளையங்கோட்டை சிறைச்சாலையில் 15 கைதிகள் பட்டதாரிகளாகி, விரைவில் பட்டம் பெறவிருக்கிறார்கள்.மனிதன் தவறு செய்வது இயற்கை. அவன் திருந்தி வாழ்வதற்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் ஒரு கல்விக்கூடம் தான் சிறைகூடம். தவறு செய்யும் ஒருவன் சிறை வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டால் அவன் மறுபடியும் சமுதாயத்தில் தவறு செய்ய நினைக்க மாட்டான்.ஒரு நொடிப் பொழுது சிந்திக்காமல் நாம் செய்யும் தவறுக்கு பரிகாரம்தான் சிறைதண்டனை. இதனால் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டும் என்பதை சிறைவாசம் கற்றுக்கொடுக்கிறது.வெளி உலகில் வாழ்வதை போன்று சிறையிலும் வாழலாம். ஆனால் அங்கு கட்டுப்பாடுகள் உண்டு. கட்டுப்பாடுகள் இல்லாததால் தான் நாம் தவறுகள் செய்கிறோம். அந்த கட்டுப்பாடுகள் தான் சிறையில் மனித வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குகிறது.இப்படி எத்தனையோ மனிதர்களுக்கு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் சிறைச்சாலைகளில் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முக்கியத்துவம் வாய்ந்தது.

பாளை. மத்திய சிறை
இந்திய வரலாற்றில் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு என்று தனி இடம் உண்டு. பழமை மிக்க ஜெயில்களில் பாளையங்கோட்டை ஜெயிலும் ஒன்று. இந்த ஜெயில் 1880- ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட பல வீரர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 1929-ம் ஆண்டு பாளை. ஜெயில் மாவட்ட ஜெயிலாக மாற்றம் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாக அரசு மாற்றம் செய்தது.பின்னர் 1-4-1968 ம் ஆண்டு மத்திய சிறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 74.95 ஏக்கர் பரப்பளவில் ஜெயில் அமைந்துள்ளது. இந்த சிறையில் அரசியல் தலைவர்களும், தியாகிகளும் இருந்ததால் மேலும் சிறப்பு அடைந்தது.

1,631 கைதிகள்
தற்போது இந்த ஜெயிலில் 1631 கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 913 கைதிகள் ஆயுள் தண்டனை கைதிகள். சிறை வளாகத்துக்குள் ஒரு நூலகம் இருக்கிறது. அதில் ஆயிரத்து 500 புத்தகங்கள் இருக்கின்றன. சுழற்சி முறையில் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து 500 நூல்கள் கொண்டு வரப்படுகின்றன.கைதிகளுக்கு திடீரென்று ஏற்படும் உடல்நலக்குறைவை பரிசோதனை செய்ய ஜெயில் வளாகத்தில் ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது. இதில் 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ், ஒரு பார்மசிஸ்ட், மற்றும் 2 உதவியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.கைதிகள் தினந்தோறும் காலை 6 மணிக்கு செல்லில் இருந்து திறந்துவிடப்படுவார்கள். மாலை 6.30 மணிக்கு மீண்டும் அடைக்கப்படுவார்கள்.
பிளாக்குகள்

பாளை. ஜெயிலில் 8 பிளாக்குகள் (பிரிவுகள்) இருக்கின்றன. ஒவ்வொரு பிளாக்குக்கும் 32 சிறைகள் உள்ளன. இது தவிர இணைப்பாக இரண்டு பிளாக்குகள் உள்ளன. அனைத்து சிறைகளுக்கும் மின்விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.ஏ கிளாஸ் கைதிகளுக்கு வாரத்தில் 3 நாள் மதியம் சிக்கன் உணவாக கொடுக்கப்படுகிறது.மற்ற கைதிகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவில் 115 கிராம் சிக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. சிக்கன் சாப்பிடாத கைதிகளுக்கு வாழைப்பழம், கேசரி, உருளைகிழங்கு ஆகியவை உணவாக கொடுக்கப்படுகின்றது. நீரிழிவு நோய் கைதிகளுக்கு கட்டுப்பாடான உணவு வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பும் பட்டமளிப்பும்
இங்குள்ள கைதிகள் படிப்பதற்கு சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆயுள் தண்டனை பெற்ற 15 கைதிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் "எம்.ஏ." பட்டப்படிப்பு முடித்துவிட்டு, எம்.பில். பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.எம்.ஏ. பட்டம் முடித்த கைதிகளுக்கு வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஜெயில் வளாகத்தில் பட்டம் வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.டி.சபாபதிமோகன் கலந்துகொண்டு, கைதிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.விழாவில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, பல்கலைக்கழக பதிவாளர் செல்லத்துரை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கண்ணன், தொலை தூர கல்வி இயக்குனர் பால்ராஜ் ஜோசப் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை ஜெயில் சூப்பிரண்டு இரா.அறிவுடைநம்பி செய்து வருகிறார்.
முதுகலை பட்டம் பெறும் கைதிகள் விவரம்:
1. சுப்பிரமணியன் (வயது 67), தந்தை பெயர் ராமசாமி, 2. சிதம்பரம் (44), தந்தை பெயர் முத்துசாமி, 3. பெருமாள்(45), தந்தை பெயர் கந்தையா, 4. சிவா என்ற சிவக்குமார்(34), தந்தை பெயர் மாடசாமி, 5. அணில்குமார்(30), தந்தை பெயர் மாடசாமி, 6. ஜார்ஜ்கென்னடி(45), தந்தை பெயர் குருசுமுத்து, 7. ஜான்குமார்(31), தந்தை தாமஸ், 8. மில்லத் இஸ்மாயில்(37), தந்தை பெயர் சிந்தாமதார்,9.மோசஸ் அருளானந்தம்(44), தந்தை பெயர் ஜேசுதாசன், 10. கே.ராமசாமி(42), தந்தை பெயர் கலங்கரையான், 11. சரவணன்(35), தந்தை பெயர் குமரந்தையாபிள்ளை, 12.சீனிவாசன்(29), தந்தை பெயர் சுப்பையா, 13.செல்வம்(36), தந்தைபெயர் ராஜ், 14. தாணுலிங்கம்(43), தந்தைபெயர் ராமகிருஷ்ணன், 15. வால்மீகி(43), தந்தை பெயர் தில்லை பொன்னம்பலம்.இதில் மில்லத் இஸ்மாயில், பெருமாள் ஆகியோர் பரோலில் இருக்கிறார்கள். செல்வம் என்பவர் கோவை ஜெயிலிலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். மற்றவர்கள் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.அரசு தத்தெடுத்தது...
எம்.ஏ. பட்டம் முடித்த மில்லத் இஸ்மாயில் கூறியதாவது:
குடும்பத்தில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக 2.1.1991 ம் ஆண்டு தவறு நடந்தது. இதனால் நான் குற்றவாளியானேன். 14.12.93 ல் நெல்லை முதன்மை கோர்ட்டு எனக்கு ஆயுள் தண்டனை விதித்தது.அந்த தீர்ப்பை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்தேன். 14.10.96 ம் ஆண்டு ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்தேன். அதன்பிறகு நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவராக 1998 முதல் 2001 வரை பொறுப்பு வகித்தேன். 27.8.2001 அன்று எனக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.இதையடுத்து அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன். ஜெயிலுக்கு நான் சென்றபோது கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் ஒரு உணர்வு இருந்தது. தனிமை என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.ஜெயிலில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எம்.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்தேன். ஜெயில் வளாகத்துக்குள் வகுப்புகள் நடத்தப்பட்டன. இங்கேயே தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.தற்போது எம்.பில். படித்துக்கொண்டு இருக்கிறேன். இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். செய்த தவறை உணர்ந்துவிட்டேன். எங்களை போன்றவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு புதிய அத்தியாயம் தொடங்குவதாகவே கருதுகிறோம்.நான் படித்து முடித்து வெளியே வந்தால் கூட எனக்கு வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். எனவே அரசு எங்களை போன்றவர்களை தத்தெடுத்து வேலை கொடுக்க வேண்டும், என்றார்.
பட்டதாரி கைதி பெருமாள் கூறியதாவது:
1986-ம் ஆண்டு எனது உறவினரைக் கொலை செய்தேன். இந்த வழக்கு நெல்லை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. 1990ம் ஆண்டு எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.முதல் முதலில் ஜெயிலுக்கு வந்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கார் சத்தம் மட்டும் தான் எனது காதில் விழுந்தது. தனி அறையில் தத்தளித்தேன். அதனால் எனது மனதை மாற்று வழியில் கொண்டு செல்வதற்காக எம்.ஏ. படிக்கத் தொடங்கினேன்.இப்பொழுது எம்.ஏ. முடித்துவிட்டு எம்.பில். படித்துக் கொண்டு இருக்கிறேன். எங்களைப்போன்ற மனம் திருந்திய கைதிகளை கருணை அடிப்படையில் வெளியே விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

துணை வேந்தர் பேட்டிநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி மூலம் கைதிகளுக்கு பட்டப்படிப்புக்கான பாடம் நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பு அனைவருக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.வருகிற கல்வியாண்டு முதல் காந்திய சிந்தனை என்ற டிப்ளமோ படிப்பு தொடங்கப்படுகிறது. கைதிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அறிவு என்ற ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயிலில் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.இந்திய வரலாற்றிலேயே பாளையங்கோட்டை சிறையிலேதான் முதன்முதலாக பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை சிறைவாசிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
( நன்றி - தட்ஸ் தமிழ்)

மழைக் கால ஒரு மாலையில்..

ஒரு பெருமழையொன்றைப் பொழித்து
மிதமிஞ்சிப் போன ஈரங்களை
தூறல்களாய் சொட்டிட்டுக் கொண்டிருந்த
மேகங்கள் ஒளியத் தொடங்கும்
மஞ்சமிக்கும் மாலைப் பொழுதுகளில்
கதவு தட்டுகிறாய்

வீசிப் போன புயலும்
வெளி நனைத்துச் சென்ற மழையும்
முயன்றுத் தோற்றுக் களைத்த
உடலுதறச் செய்யும் ஜில்லிடுதல்களை
உன்னில் சொட்டிடும் துளிகளில்
பெற்றுத் தந்தாய்

சிறு கதையொன்றைச் சிலாகித்து
விரல் பற்றிச் சொடக்கிட்டு
சட்டையில் மறந்த பொத்தானிட்டு
சகலமும் நான் உனக்கென்று
சளைக்கச் சொல்லுகிறாய்

தொண தொணவெனாமலும்
நீண்டதொரு முற்றுமிடாமலும்
ஒவ்வொரு தலைப்புகளில்
ஒவ்வொரு மௌனமிட்டு
சேகரித்து உதிர்க்கிறாய்
நுனி நாக்கு வார்த்தைகளை

வெது வெதுப்பான குளிரின்
மெல்லிய புணர் பொழுதுகளில்
இளஞ் சூட்டுத் தேநீர் சுவையை
மெல்ல உடலில் பாய்ச்சுகிறாய்
என் உள்ளங்கை மீதான
உன் உள்ளங்கை ஸ்பரிசத்தில்

விசாலப்பட்ட மெத்தையிருந்தும்
அகலப்பட்ட போர்வை கிடந்தும்
மெத்தென்ற என் உடலில்
உன்னுடல் வளைத்த என் கரங்களில்
தூங்கிப் போதல் சுகமென்றும்
செத்துப் போதல் மா சுகமென்றும்
சிந்தையுறச் சொல்லுகிறாய்

என் தலை மயிர்க் கோரி
என் காய்ந்த உதட்டிதழ்களில்
உன் எச்சிலீரமிட்டு
சொல்லண்ணா போதையில் கிடத்தி
ஓடி ஒளியும் மாலை மேகங்களோடு
மறைந்து போகிறாய்

அதிகாலைத் தெருக்களில்
இரவு மழையின் மிச்சங்களாய்
இன்னும் காயாமல் கசிகின்றன
உன் இரவு நியாபகங்கள்.

- எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ