திருக்குறள்

அதிகரிக்கும் லிவிங் டுகெதர் வாழ்க்கை...

சில வருடங்களுக்கு முன்பு திருவான்மியூரில் விமானப் பணிப்பெண் ஷில்பா அவருடைய காதலன் ஜெயந்த் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷில்பாவும் ஜெயந்த்தும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்திவந்தனர். அப்போது ஷில்பா கர்ப்பம் தரித்தார். இந்தக் கர்ப்பத்துக்கு வேறு யாராவது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஜெயந்த்துக்கு எழுந்தது. இதனால் இருவருக்குமிடையே பிரச்னை வெடித்தது.

இந்நிலையில், 'ஒரு வாரமாக உங்கள் மகள் வேலைக்கு வரவில்லை!' என்று ஷில்பா வேலை செய்துவந்த நிறுவனத்திடமிருந்து பெங்களூருவில் இருந்த அவர் பெற்றோருக்குத் தகவல் வந்தது. அவர்களும் அலறி அடித்துக்கொண்டு திருவான்மியூர் வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷில்பாவும் ஜெயந்த்தும் இறந்து கிடந்தனர். இவர்களின் மரணத்துக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.

அப்போதுதான் ஷில்பா கடைசியாகப் பேசிய அவருடைய நண்பரை போலீஸ் தொடர்புகொண்டது. அதிலிருந்துதான் சந்தேகத்தின் பேரில் ஷில்பாவை, காதலன் ஜெயந்த்தே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது-. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவான்மியூரைச் சுற்றிலும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டம், மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்குமிடம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதிக அளவில் வாடகை கொடுத்தாலும், மேன்ஷன்களில் போதுமான வசதி இல்லை. இதனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு எடுக்கின்றனர். அதிகம் சம்பாதிப்பதால் அந்தரங்கம் பாதிக்கப்படுகிறதென்று, மற்றவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. இதே போல பெண்களுக்கும் ஹாஸ்டல் என்பது பெரிதும் பிரச்னையாகவே உள்ளது. இவர்கள் காதலிக்கத் தொடங்கியதும், தனி வீடு எடுத்து வாழ்க்கையைத் தொடங்கி விடுகிறார்கள். பிடித்திருந்தால் வாழ்க்கை அப்படியே தொடர்கிறது; இல்லையென்றால் பிரச்னையில்லாமல் விலகிக் கொள்கிறார்கள்.

திருவான்மியூர் திருவள்ளுவர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது அவர், ''நிறைய பேர் அந்த மாதிரி இருக்கிறார்கள். அட்வான்ஸ், வாடகை பற்றி வீட்டு உரிமையாளர்கள் கவலைப்படவே தேவையில்லை. தேதி ஒன்று ஆகிவிட்டால், வாடகை பிரச்னையில்லாமல் வந்துவிடும். வீட்டுக்குள் அவர்கள் எப்படி இருந்தாலும், வெளியில் அவர்களால் எந்தத் தொந்தரவும் இல்லை. எங்கள் குடியிருப்பில்கூட ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார்கள். வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. நெருக்கமாகப் பழகிய ஓரிரு குடும்பங்களுக்குத்தான் இது தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் விமானப் பணிப்பெண் ஒருவரும் அவருடைய காதலரும் தற்கொலை செய்துகொண்டார்கள் இல்லையா... முதலில் அவர்கள் எங்கள் குடியிருப்பில்தான் வசித்தார்கள். அவர்கள் திருமணமானவர்கள் என்றுதான் நினைத்திருந்தோம். அந்த சம்பவம் நடப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்புதான் வால்மீகி நகருக்கு மாறிச் சென்றார்கள். தினசரியைப் பார்த்துத்தான் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று தெரிந்தது. இவர்களைப் போல நிறையப் பேர் இருந்தார்கள். சாஃப்ட்வேர் துறை கொஞ்சம் டவுன் ஆனதும் இது குறைந்துவிட்டது!'' என்றார்.

இது குறித்து அடையாறு உதவி கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''திருமணமாகாத ஆணும் பெண்ணும் இணைந்து இந்த பகுதியில் நிறைய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. நேரடியாக எனக்கு புகார்கள் வருவதில்லை. கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் புகார்கள், எனக்கு அனுப்பப்படும். ஒவ்வொருவரையும் நேரடியாகச் சென்று விசாரணை நடத்திக்கொண்டிருக்க முடியாது. இதுபற்றி எங்களுக்குப் புகார் எதுவும் வரவில்லை!'' என்றார்.

திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இப்பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வெளி மாநிலத்தவர் உட்பட ஆணும் பெண்ணுமாக ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். தங்கள் போக்குவரத்து வசதிக்காக கம்பெனிகளுக்கு அருகிலுள்ள வீடுகளில் தங்கவே பெரும்பாலும் இவர்கள் விரும்புகின்றனர். அதனால், இந்தப் பகுதியில் வாடகை வீட்டுக்கு ரொம்ப டிமாண்ட். 'தனியாக உள்ள ஆண்கள், பெண்களுக்கு வீடு கிடையாது. திருமணமானவர்கள் குடும்பத்துடன் வந்தால் மட்டுமே வாடகைக்கு வீடு விடுவோம்' என்று வீட்டு உரிமையாளர்கள் கெடுபிடி செய்கின்றனர். இதனால், ஒரே கம்பெனியில் பணிபுரிகிற ஆணும் பெண்ணும் கணவன், மனைவி என்று பொய் சொல்லி வாடகைக்கு வீட்டைப் பிடித்துவிடுகின்றனர். ஒரே வீட்டில் இருக்கும்போது அவர்கள் நண்பர்களாக இருப்பார்களா அல்லது லிவிங் டுகெதர் போல சேர்ந்து வாழ்வார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால், எஞ்சியுள்ளவர் வீட்டை காலி செய்துவிட்டு வேறொருவரை ஜோடியாகச் சேர்த்துக்கொண்டு வேறொரு பகுதியில் கணவன்-மனைவி என்று சொல்லி வீடு பிடித்துத் தங்குவதாகவும் தகவல் வருகிறது. ஆனால், இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை வந்ததாகத் தகவல் இல்லை!'' என்கிறார்.

சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நீங்கள் சொல்வது போன்ற ஒரு பிரச்னையை நான் விசாரித்துத் தீர்த்து வைத்தேன். அதாவது, பெண்ணும் பையனும் ஒரே சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தனர். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகப் பழக ஆரம்பித்தனர். இருவரும் காதலிப்பதாக அலுவலகத்தில் உள்ளவர்கள் நினைத்தார்கள். இவர்களோ, திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்கள். இருவரின் சம்பளத்தையும் கூட்டினால் லட்சத்தைத் தாண்டும் என்பதால், இவர் களுக்கு வீடு கிடைப்பதில் அவ்வளவு சிரமம் ஏற்பட வில்லை. இருவரையும் கணவன், மனைவி என்று நினைத்து ஒருவர் 9 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டை வாடகைக்கு விட்டார். 3 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு நாள் பையனின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவனுடைய இ-மெயில் முகவரியை இந்தப் பெண் சோதனையிட்டிருக்கிறாள். அதில், உடன் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் அவன் இருக்கும் படங்களைக் கண்டு திடுக்கிட்டிருக்கிறாள். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. 'நாம் இருவரும் திருமணமா செய்துகொண்டோம்? நீ வேண்டுமானால் வேறொரு ஆணுடன் சேர்ந்து இருந்துகொள். நான் கேட்க மாட்டேன்' என்கிறான் பையன். இதனால் பிரச்னை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் அப்பா, வங்கி அதிகாரியாக இருந்து பிறகு, ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். பையனின் அப்பா, சொந்தத் தொழில் செய்யும் கோடீஸ்வரர்.

போலீஸ் நிலையத்துக்கு வந்தால், பிரச்னை பெரிதாகுமே என்று நினைத்து பயந்தனர். பின்னர் இரு தரப்பையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்துவைத்தேன். தற்போது அந்தப் பெண், பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்திலேயே அமெரிக்காவில் புராஜெக்ட் மேனேஜராக டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். பையன் இன்னும் அங்கேதான் பணி புரிகிறான். தற்போது அந்தப் பெண் சென்னை வந்திருக்கிறாள். அவளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துவருகின்றனர்!'' என்றார்.

- பா.பிரவீன்குமார்
Vikatan Groups

எல்லோருக்கும் நல்லவனாக இரு....

எல்லோருக்கும் நல்லவனாக இரு
என்றுஎல்லோரும் சொல்கிறார்கள்.
இருந்துதான் பார்ப்போமே.
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித்
தூணாகத் துணை நின்றேன்.
அவனைத் தள்ளிவிட்டவனுக்கு நான்
தப்பானவனானேன்.
அடிபட்டவனை அரவணைத்து
ஆறுதல் கூறி ஆற்றினேன்.
அவனை,அடித்தவனுக்கு நான்
ஆகாதவனானேன்
அழுதவனை அருகிலிருத்தி
விழிநீரைத் துடைத்தெறிந்தேன்.
அவனை அழவைத்தவனுக்கு நான்
அதிகப்பிரசங்கியானேன்.
ஒரே காரியத்தினால், நான்,
ஒருவனுக்கு வேண்டியவனானேன்
மற்றொருவனுக்கு வேண்டாதவனானேன்.'
எல்லோருக்கும் நல்லவனாக இரு
'எல்லோரும் சொல்கிறார்கள்.
ஒரு நாள் -
அடித்தவன் அடிபட்டு நின்றான்,
படட்டும் என்று ஓடவா?
பக்கத்தில் சென்று தேற்றவா?
அழவைத்தவன் அழுது நின்றான்
அழட்டும் என்று விடவா?
அள்ளி அணைத்து ஆற்றவா?
தள்ளிவிட்டவன், விழுந்து கிடந்தான்
கிடக்கட்டும் என்று போகவா?
கிட்டே சென்று தூக்கவா?
இவர்களுக்கு நண்பராகவா?
அவர்களுக்குப் பகைவராகவா?
இயலாத ஒரு காரியத்தை,
எல்லோரும் மிக எளிதாகச்
சொல்லிவிடுகிறார்கள்
'எல்லோருக்கும் நல்லவனாக இரு'

-கோமதி நடராஜன்

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.

அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.

இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.

ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.

வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.

இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்

ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.

-என்.கணேசன்

தொலைந்து போன வாழ்க்கை...


மீன்கொத்தி பறவை ஒரே இடத்தில் பறந்து கொண்டே நின்று பொத்தென்று தண்ணீரில் விழுந்து மீன்பிடிக்கும் சாதூர்யத்தை பார்த்திருக்கிறீர்களா? பூவரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? காக்கா முட்டை என்ன நிறம் தெரியுமா? சலனமில்லாமல் ஓடுகிற நதியில் மேல்துண்டை வைத்து மீன் பிடித்த அனுபவம் உண்டா?


தந்தையின் கைகளில் படுத்துக்கொண்டு நீச்சல் பழகிய அனுபவம் இருக்கிறதா? அடைகாக்கும் கோழியின் சீற்றத்தை கண்டு ஓடியதுண்டா? காக்கை தூக்கிச்சென்ற கோழிக்குஞ்சு குற்றுயிராய் கீழே விழுந்து உயிருக்கு போராடும் போது பதை பதைத்து நின்றதுண்டா? இவையெல்லாம் கிராமத்து மக்கள் தினம் உணர்வுபூர்வமாக அனுபவிக்க கூடியது. ஆனால் நகர வாழ்க்கையில் ஏதோ... சினிமாவில் பார்த்ததாகத்தான் இருக்கும்.


வாழ்க்கையை தொலைச்சிட்டு, நம்மளும் வாழுகிறோம்னு ஏதோ நாள கடத்திட்டு வர்றோம். டாடி, வாத்து பறக்குமானு புள்ள கேள்வி கேட்கிறான். அத வுடுங்க. முந்தாநாளு ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு வாண்டு அது ஆத்தாகிட்ட கேக்குது "மம்மி ரைஸ் எங்க செய்றாங்க"? நிலம் எங்க போய்க்கிட்டுருக்கு பார்த்திங்களா?


நம்ம கூட்டத்தில் பாதி ரெண்டுங்கெட்டானா அலையுது. சொந்த ஊர காலி பண்ணிட்டு டவுனுக்கு வந்த நம்ம ஜனம் ஊர மறந்து போயி ரொம்ப நாளாச்சி.


கபடமில்லாத வெள்ள மனசுக்காரன் எங்க பாக்க முடியுது? பக்கத்து வீட்ல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கிடந்த பெரிசு ஏதாவது செத்தா கூட எதிர்வீட்டுக்காரனுக்கு தெரிய மாட்டுக்கு!


ஆத்தா, அப்பன், அத்த, மதினி, மச்சான், சொக்காரன், சொந்தம்னு கூடி வாழ்ந்த ஜனம், இப்ப மூலைக்கு ஒன்னா சிதறிக்கிடக்கு. அப்பங்கிட்ட அடி வாங்கினா, குழந்த ஆத்தாக்கிட்ட ஓடும், ஆத்தாவும் திட்டினா, வாசல்ல வெத்தில இடிச்சுக்கிட்டு இருக்கிற பாட்டிக்கிட்டா போவும்.


கிழவி குழந்தய தூக்கி "நாசமா போறவன் புள்ளய என்னமா அடிச்சிருக்கான்" என்று தேற்றுவாள். அப்புறம் அவகாலத்து கதைய ஒன்ன எடுத்து விடுவாள். அதுல சீதையும் வருவா, கண்ணகியும் வருவா. கத கேட்டு வளர்ந்த சமூகம் அது. திண்ணையில் கத கேட்டு, காட்டாத்துல குளிச்சி, சோளக்கஞ்சி குடிச்சு, எல்லச்சாமிய கும்பிட்டு தெம்பா அலஞ்சவங்க அவங்க. இப்ப காத்தடச்ச பேப்பர் பைல கொஞ்சுண்டு சிப்ஸ் இருக்கு. அத 20 ரூவா கொடுத்து வாங்கி கொறிச்சிட்டு டிபன் சாப்பிட்டேன் என்கிறான். உடம்புல என்னத்த ஒட்டும். முதலிரவுல பொண்டாட்டி கிட்ட "சுகர் கம்ப்ளைண்டு" என்கிறான். பளபளனு விடியறதுக்கு முந்தியே தொழுவத்தில் இருந்து மாடுகள அவுத்துவிட்டு மேய்ச்சலுக்கு பத்திட்டு போறவன், நீச்சத்தண்ணிய ஒரு செம்பு குடிச்சிட்டு போவான். தூக்குச்சட்டியில அமுக்கி, அமுக்கி சோளாச்சோறு இருக்கும், வெயிலு சாயிர நேரத்தில் அத திண்ணுட்டு, எருமையோட சேர்ந்து, அவனும் ஏரியில குளிப்பான்.


பாலு கறந்தால் அறைப்போனி அப்படியே குடிப்பான். வயக்காட்டுக்கு போறவன் காலைல மம்மட்டிய புடிச்சானா உச்சி வெயிலுக்கு கொஞ்சம் இளப்பாறுவான். அவனுக்கு வாக்கப்பட்டவ கலயத்தில் பழைய சோற புளிஞ்சுவச்சு கொண்டு வருவா.


வாய்க்கால்ல ஓடுற தண்ணில கால நனைச்சுக்கிட்டே பழயது சாப்பிட்டு திரும்பவும் வயல்ல இறங்குவான். சும்மா வைரம் பாஞ்ச கட்டையாட்டம் உடம்ப வச்சிருப்பான். நோய் நொடி அண்டிரும்? அப்பெல்லாம் வீட்டு வாலைக்கு வர்ற ஆள திண்ணயில உக்கார வச்சு இலை போட்டு, சோறு போடுவாங்க அவன் அத எல்லாத்தையும் மிச்சம் வைக்காம திண்ணாத்தான் அவன் வலைக்கு லாய்க்கு. கொறிச்சிட்டு வச்சான்னா, விரட்டி விட்டிருவாங்க!


அப்ப உடல் வருத்தி வேர்வ சிந்துனான். இப்ப நாம "வாக்கிங்" போறோம். யார்கிட்ட போய் இதைச் சொல்ல. காலைல நீராகாரம் குடிச்சிட்டு அப்ப போனான். இப்ப நீராகாரம் வேண்டாம்! அட அந்த செம்பக்கூட காணமுங்க.


பொருளாதாரமே பிரதானமாகிப் போன உலகில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊருக்கு புலம் பெயரும் மக்கள் பல சுகங்களை தியாகம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.


பூர்விக வீட்டையும், நடைபழகிய கிராமத்து தெருக்களையும், அந்த நிம்மதியான் வாழ்வையும் நகரத்து சத்தத்திற்கு இடையே அசைபோட்டு பார்க்க கூட நேரமில்லை நம்மில் பலருக்கு.


பிழைப்பு தேடி புலம் பெயர்த்தவர்களுக்கும், சொந்த ஊரை மறந்து தீப்பெட்டி சைஸ் குடியிருப்புகளில் பக்கெட் தண்ணியில் குளித்து வருபவர்களுக்கும், புகை மண்டல நகரத்தில் "ஏசி" வைத்து வாழ்பவருக்கும், இன்னும் பலருக்கும் இந்த கட்டுறை ஒரு "ஆட்டோகிராப்பாக" தெரியும்.


இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் வேளையில், நகரில் வசித்து ஓய்வு பெற்ற பலரும், நிம்மதி தேடும் செல்வந்தர்களும், தங்களது சொந்த கிராமங்களுக்கு ரயில் ஏறுவார்கள் என்பது உண்மை.


- பாவி

பீதியூட்டும் பன்றிக் காய்ச்சல்!

உயிர்களை வதைக்கக் கூடாதென உலகிற்கே எடுத்துசொன்ன மதம் நமது நாட்டில் தோன்றிய சமண மதம். அந்த மதம் தோன்றிய நமது நாட்டில் பன்றிகளைக் கொல்வதை பார்த்தால் நிச்சயம் மனிதநேயம் கொண்டவர்களை ஒருகணம் உலுக்கிவிடும். கிராமபுற சந்தைகளில் பன்றி கறிக்காக பன்றிகளைக் கொல்வார்கள். கத்தியால் குத்தியோ, கழுத்தை அறுத்தோ அல்ல. பன்றியைத் துடிக்க துடிக்க கட்டையால் அடித்தே கொல்வார்கள். அதன் அலறல் சத்த மும் துடிப்பும் அந்த இடமே கொலைகளமாகத் தெரியும். உலகத்திலேயே கொடுமையான உயிர்வதை இது. இந்தவிதமான இன்னும் சில சித்ரவதையின் பிரதிபலிப்பாகத்தான் இன்று உருவாகி இருக்கிறது பன்றிக் காய்ச்சல்.

கடந்த மூன்று மாதங்களாக உலகையே மிரட்டி வருகிறது. மிரண்டுபோன உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சல் உலக கொள்ளை நோய் என அறிவித்து, அனைத்து நாடுகளையும் உஷார்படுத்தியுள்ளது. மெக் சிகோ, அமெரிக்கா, கனடா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் வெகு வேகமாக பரவி வரு கிறது பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 30,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக பறவைகளுக்கும் பாலூட்டி களுக்கும் தொற்றும் நோய்தான் ஃப்ளூ எனப் படும் இன்ஃபுளூவென்சா நோய். இது இன் ஃபுளூவென்சா என்ற வைரஸால் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கினால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச் சல். கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக்கூடிய தொற்று நோயாகும். ஆண்டுதோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தும் போகிறார்கள்.

ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் "ஸ்வைன் புளூ' பன்றிகளிடையே தோன்றி (மருத்துவ உலகில் ஆஐ1ச1 என பெயரிட்டுள்ள னர்), அவற்றிக்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர் களுக்குப் இந்நோய் வேகமாகப் பரவுகிறது. இந்த நோய் மனிதனை தாக்கும்போது, சுவா சத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது. அப்படிதான் மெக்சிகோ நாட்டின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில் உள்ள ஸ்மித் பீல்டு நிறுவன பண்ணையில் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. முதலில் பண்ணைத் தொழிலாளர்களுக்கு தொற்றி, அவர்கள் மூலம் நகருக்குள் பரவியது. மெக்சிகோ முழுவதும் வேகமாக பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா உட்பட உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளில் இந்நோய் பரவத் தொடங்கின..

இந்நோய் உள்ளவர்கள் தங்களை இந்நோய் தாக்கியதை அறியாமல் அண்டை நாடுகளுக்குப் பயணிக்கும்போது இந்நோயானது மிக வேகமாகப் பரவுகின்றன. சுற்றுலா பயணி களும் இந்நோய் பரவ ஒரு காரணமாகி விடுகின்றனர்.ஆஐ1ச1 வைரஸ் கிருமி மனித உடலுக்குள் நுழையும்போது உடலின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பையே தின்று விடுகிறது. இதன் விளைவாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல்வலி, தலைவலி ஆகியவை உருவாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கும் ஏற்படலாம் என்கிறது மருத்துவ உலகம். கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்துதான்.

இதில் பாதகமான அம்சம் என்னவென்றால், பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று பரவும் வேகம் குறைவு. ஆனால் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக வேகமாக இந்த வைரஸ் பரவும் தன்மைகொண்டது. குறிப்பாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், இருமும் போது அல்லது தும்மும்போது தெறிக்கும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவருக்கும் பரவி பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இத னால்தான் இந்த காய்ச்சலால் பாதிக்கப் படுவோருக்கு தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.

இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால், பன்றிகளுக்கு இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி உள்ளது. ஆனால் மனிதர்களுக்குத் தடுப்பூசி இல்லை. இவற்றைத் தடுக்க சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதுள்ள "டாமிஃபுளூ' மாத்திரைகள், நியூரோமினிடேஸ் இன்சிபிடார்ஸ் வகையைச் சேர்ந்த மருந்துகளால் மட்டுமே நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.

உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாகப் பிரித்துள்ளது. இதில் மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறு வனம் அறிவித்துள்ளது. இது உலக நாடுகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆறாவது கட்டத்தை தொடுபோது நிச்சயம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பன்றிக் காய்ச்ச லுக்குப் பலியாகிவிட நேரிடும். அதற்குள் சுகாதார அமைப்புகளை முடுக்கி இந்நோய் மேலும் பரவாமல் தடுப்பது முக்கிய கடமையாகும்.

இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், ஜலந் தர், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் மட்டும் இருவருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப் பது உறுதியானதால், அவர்களுக்குத் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை பன்றிகளுக்கு இந்நோய் வந்ததில்லை. மேலும் மேலை நாடுகளைப்போல இங்கு பன்றி வளர்ப்பு ஒரு மிகப்பெரிய தொழிலாக இல்லை. இதற்கு முன்னர் பொது இடங்களில் திரியும் பன்றிகள் மூலம் மூளை காய்ச்சல் பரவுவதால் மாநகராட்சி நிர்வாகமே பன்றிகளை சுட்டு கொல்வது வழக் கம். நோய்வாய்ப்பட்ட பன்றிகளுக்கு வைத்திய மெல்லாம் செய்வது கிடையாது. இதனால் விலங்குகளுக்கான நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம் அரசு நிறுவனம் பன்றிகளுக்கான தடுப்பூசியை தேவையின்மை கருதி உற்பத்தி செய்ய வில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு பன்றிக் காய்ச்சலை பற்றி கவலைப்பட வேண்டிய தில்லையென தினசரி நாளிதழ்களில் அரை பக்கத்தில் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இப்போதைக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு தைரியத்தைக் கொடுத்தாலும் இன்னொரு சந்தேகம் தோன்றதான் செய்கிறது. இன்று அரசாங்க மருத்துவமனைகள் இருக்கும் சுகாதார வசதி, மருத்துவ வசதிகளை கணக்கில் கொண்டால் நிச்சயம் பன்றிக் காய்ச்சலை நினைத்து பயப்படாமல் இருக்க முடியாது.

கடந்த நூற்றாண்டில் உலகை ஆட்டிப் படைத்த பெரியம்மை, பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் பின்தங்கிய சுற்றுச் சூழலால்தான் உருவானது. ஆனால் இப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள் மனிதனின் இரக்கமற்ற சுரண்டலுக்கு கிடைக் கும் தண்டனை. மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதும், உலக வெப்பமயமாகி தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து வருவதும் நாம் அறிந்ததே. அந்த வகையில் இன்று மனிதனின் உணவு வெறிக்காக கோழி, பன்றி போன்றவற்றைப் பண்ணைகளில் அடைத்துவைத்து குறுக்கு வழியில் உற்பத்தியை பெருக்குவதற்கான தண்டனைதான் பறவை காய்ச்சலும், பன்றிக் காய்ச்சலும்.

பன்றிகளை வளர்க்கும் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப்படுகின்றன. பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்காக கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப் படுத்தபடாமல் கிடக்கும் கணக்கிலடங்காத கழிவுகளும் இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்தி சாலைகளாக மாற்றி யுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய ஸ்மித் பீல்டு நிறுவன பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் பத்து லட்சம் பன்றி கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படி மிகை உற்பத்தி செய்யப்படுவதால் புதிய நோய்கிருமிகள் உருவாகிறது. தற்போது வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்குப் பன்றிகளை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. அதனுடன் பன்றிக் காய்ச்சலையும்தான் ஏற்றுமதி செய்து வருகின்றன. அதேபோல சர்வதேச அளவில் நமது வர்த்தகம் மட்டும் உலகமாக்கப்பட வில்லை; பன்றி காய்ச்சலும் கொள்ளை நோய் களும் உலகமயமாக்கப்பட்டு வருகின்றன.

- எஸ். செல்வராஜ்

பை பை துபாய்!

மாயவரத்தைச் சேர்ந்தவர் முத்து. கடந்த ஆண்டில் துபாயில் கட்டடம் கட்டும் வேலை கிடைத்தவுடன் சந்தோஷத்தில் குதித்தார். 'இனி கஷ்டமில்லாமல் கொஞ்சம் காசு சேர்க்கலாமே..!' என்பதுதான் அவருடைய சந்தோஷத்துக்கான காரணம். மனைவியின் நகைகள் அத்தனையும் அடமானம் வைத்து துபாய்க்கு ஓடினார். இன்று... அவருக்குக் கிடைத்த வேலை சில மாதங்களில் பறிபோக, மீண்டும் மாயவரத்துக்கே திரும்பியாக வேண்டிய கட்டாயம். ''இந்த வேலையை நம்பி 85 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிச் செலவழிச்சு வந்திருக்கேன். இப்போ கையில் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கு. எந்த முகத்தை வச்சு ஊருக்குத் திரும்புறதுனு தெரியல. ஏன்தான் இங்கு வந்தோம்னு இருக்கு!'' என்று புலம்பித் தீர்க்கிறார் முத்து.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. கட்டடம் கட்டப் பயன்படுத்தப்படும் லிஃப்ட்டுகளை இயக்குவதில் கில்லாடி. இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு நிறுவனம் 300 பேரைக் கும்பலாக வேலைக்குக் கூட்டிக்கொண்டு துபாய் போனது. சரியாக அறுபது நாள்கூட முடியவில்லை. அதற்குள் 150 பேரை மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டது அந்த நிறுவனம். அந்த நூற்றைம்பது பேரில் ரவியும் ஒருவர். ''புதுசா கிடைச்ச வேலையை நம்பி பத்து வருஷமா வேலை பார்த்த கம்பெனியை விட்டுட்டு வந்துட்டேன். இப்பத் திரும்பவும் வேலை தேடணுமேனு நெனைச்சாலே வேதனையா இருக்கு!'' - வெறுப்பின் உச்சத்தில் வேதனையைக் கொட்டுகிறார் ரவி.
முத்துவும் ரவியும் உதாரணங்கள்தான். இவர்களைப் போல துபாய் முழுக்க பல லட்சம் இந்தியர்கள், 'இன்று வேலை போகுமோ, நாளை போகுமோ' என்று தெரியாமல் திகிலடித்துப் போய் இருக்கிறார்கள்.

என்னவானது துபாய்க்கு? சில மாதங்களுக்கு முன்பு வரை, வந்தாரை எல்லாம் வாழவைத்து, பூமியின் சொர்க்கபுரியாக விளங்கிய அந்த ஊருக்கு இன்று புதிதாக அப்படி என்னதான் சிக்கல் வந்துவிட்டது?

அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி என்கிற சுனாமி உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் துபாய்தான் முன்னணியில் நின்றது. மற்ற நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் அங்கே ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம்.


துபாய் என்றதும் நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அதன் படாடோபமான சிங்காரம், வானத்தைத் தொடும் கட்டடங்கள், மெகா மால்கள், திகட்டாத சுற்றுலாத் தலங்கள்தான். இதனால்தான் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஏழு எமிரேட்டுகளில் துபாய் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

அங்கே முழுக்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவனம்தான். என்றாலும் அதைக்கூட பசுஞ்சோலையாக மாற்ற முடிந்தது எனில் சுற்றுலா மூலம் அந்த நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருமானம்தான். சுற்றியுள்ள நாடுகள் கச்சா எண்ணெய் வளமிக்கவை. ஒரு நாளைக்கு பல லட்சம் பேரல் கச்சா எண்ணெயை பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்கும் திறமை கொண்டவை. இருந்தாலும் துபாயைப் பொறுத்தவரை அங்கு சொல்லிக்கொள்ளும்படி கச்சா எண்ணெய் கிடைப்பதில்லை. பின் எப்படித்தான் முன்னேறுவது என்று யோசித்த அந்நாட்டு அரசாங்கம், மிகப்பெரிய அளவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. தங்களை நோக்கி பெரிய அளவில் முதலீடு தேடிவரும்படி செய்தது. இதன்மூலமாக அந்த அரசாங்கத்துக்கு நிறைய வருமானம் கிடைத்தது.


உதாரணமாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டடங்கள் கட்டுவது மூலமாகக் கிடைக்கும் வருமானம் சுமார் 22 சதவிகிதத்துக்கும் அதிகம். வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் 16 சதவிகிதத்துக்கும் மேல். பல்வேறு நிதிச்சேவைகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 11 சதவிகிதம். உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக துபாயின் மேற்சொன்ன முக்கியத் துறைகள் அனைத்தின் மீதும் பலமான அடி விழ, முழி பிதுங்கி நிற்கிறது.

பொருளாதார நெருக்கடியால் இந்நாடு எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் அதன் ஜி.டிபி. வீழ்ச்சி. 2008-ல் ஜி.டி.பி. சுமார் 10 சதவிகிதமாக இருந்தது. 2009-ல் அது கணிசமாகக் குறையும் என்ற கணிப்பு வெளியாகி இருக்கிறது. (ஒன்பது சதவிகித ஜி.டி.பி-யைத் தொட்ட நாம், இன்று 5 சதவிகிதத்தை ஒட்டி இருப்பதே பெரிய சாதனைதான்!)

இந்த வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம், துபாயில் அசுர வேகத்தில் நடந்துவந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் அதிரடியாக முடிவுக்கு வந்ததுதான். நம் நாட்டில் கடலில் ஒரு பாலத்தைப் போட்டாலே பெரிய விஷயமாகப் பேசுகிறோம். ஆனால், அங்கே கடலில் மண்ணைக் கொட்டி ஐந்து பெரிய தீவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி உருவாக்கப்படும் 'பாம் ஜுமைரா' என்ற இந்தத் தீவு உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அதைவிட பெரிய தீவுகளை உருவாக்கி வருகிறார்கள். இதுவரை பாம் ஜுமைரா புராஜெக்ட் மட்டுமே முடிந்திருக்கிறது. மற்ற நான்கு தீவுகளை அமைக்கும் பணி அப்படியே அரைகுறையாக நிற்கிறது.
'நக்கீல் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம்தான் இந்த ஐந்து தீவுகளையும் 38 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,82,400 கோடி ரூபாய்) செலவில் அமைத்து வந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தத் தீவுகளை அமைக்கும் பணி தற்போது அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. இதைப்போல மொத்தமாக 76 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 3,64,800 கோடி ரூபாய்) மதிப்புக்கான கட்டடப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. (பார்க்க: மேலே உள்ள அட்டவணை)
கட்டடம் கட்டும் வேலை மிகப்பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் வேலை இழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகம். 2008 அக்டோபர் முதல் மார்ச் 2009 வரை துபாய் அரசாங்கம் 6.62 லட்சம் வெளிநாட்டவருக்கு அனுமதி கொடுத்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் சுமார் 4 லட்சம் பேரின் பர்மிட்டை கேன்சல் செய்திருப்பதாக அந்த நாட்டின் அமைச்சரே சொல்லி இருக்கிறார். துபாயில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் முழுஆண்டுத் தேர்வு நடக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் குழந்தைகளுக்கு டி.சி. கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களாம். அந்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை என்கிறார்கள்

வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வந்த தொழி லாளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே நம்மவர்கள்தான் மிக அதிக அளவில் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த வேலையிழப்பின் காரணமாக நகரத்தின் மக்கள் தொகையே பெருமளவில் குறைந்திருக்கிறதாம். 2008-ல் மக்கள் தொகை சுமார் 1.79 மில்லியனாக இருந்தது. இதுவே இந்த ஆண்டு 1.49 மில்லியனாகக் குறைந்துவிட்டதாம்.
கட்டடம் கட்டும் வேலைகள் சுணங்கியதற்குக் காரணம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவுதான். பல இடங்களில் கோடி கோடியாகக் கொடுத்து வாங்கிய கட்டடங்களை இன்று பாதி விலைக்குக்கூட விற்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. துபாயின் முக்கியமான பகுதியில் 4 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ஒரு திர்ஹாம் சுமார் 13 ரூபாய்) கொடுத்து வாங்கிய கட்டடங்கள் இன்று பாதி விலைக்குக்கூடப் போவதில்லையாம். கட்டடங்களின் விலை மட்டுமல்ல, வீடு மற்றும் அலுவலகங்களுக்கான வாடகையும் ஏகத்துக்குக் குறைந்திருக்கிறது. ஓர் உதாரணத்துக்கு இந்திய மதிப்பில் கணக்குச் சொல்வதாக இருந்தால் ஓராண்டுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்குப் போன வீடுகள் இன்று வெறும் 13 ஆயிரத்துக்குக் கூட கேட்க ஆளில்லாமல் கிடக்கின்றன.

ரியல் எஸ்டேட் மட்டுமல்ல, புதிதாக அங்கு கம்பெனிகளைத் தொடங்குகிறவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்திருக்கிறது. ''துபாயில் வரி என்கிற பேச்சே இல்லை. அங்கு ஒரு கம்பெனியை ஆரம்பிக்க வேண்டுமென்றால் அரசிடமிருந்து ஒரு லைசென்ஸ் பெறவேண்டும். இந்த லைசென்ஸை நம்மூரில் ஆயிரம் ரூபாய் செலவழித்தால் வாங்கிவிடலாம். ஆனால், அங்கே லைசென்ஸ் வாங்கவேண்டுமென்றால் சுமார் லட்ச ரூபாய் செலவாகும். தவிர, ஒவ்வொரு ஆண்டும் இந்த லைசென்ஸைப் புதுப்பிக்க ஒரு லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டும். இப்படி பல வழிகளில் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால், இப்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கே கம்பெனி ஆரம்பிக்க யாரும் முன்வராததால் அரசாங்க வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது'' என்கிறார் அங்கு கம்பெனி நடத்தி, இந்தியா திரும்பியிருக்கும் ஒருவர்.
சரி, துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எப்போது சரியாகும்?
இந்தக் கேள்விக்கான சரியான பதில் யாரிடமும் இல்லை. அமெரிக்கா சரியானால் துபாயும் சரியாகும் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்னும் இரண்டு வருடம் ஆகலாம் என்கிறார்கள். ஆனால், அதுவரை துபாய் அரசாங்கம் தாக்குப் பிடிக்கவேண்டும். துபாயைச் சுற்றி எண்ணெய் வளமிக்க நேசநாடுகள் இருப்பதால் அதை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். எனவே ஃபீனிக்ஸ் பறவை போல அது மீண்டும் எழுந்துவரும் என்று நம்புவோமாக.

- ஏ.ஆர்.குமார்
பிஸினஸ் பக்கங்கள்!