திருக்குறள்

நீதிக்குத் தலைகுனிவு!!!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, இங்கே நடப்பது மக்களாட்சிதானா, இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

எந்தவொரு மனிதனுக்கும் தனது கருத்துகளை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம்.

உயர் நீதிமன்றத்தில் நடந்தேறிய சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் மூன்று. நீதிபதிகளின் முன்னால், நீதிமன்ற அறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மனநிலையுடையவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி. கறுப்புச் சீருடை அணியாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கையில் முட்டையுடன் நீதிமன்ற அறையில் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் வழக்கறிஞர்கள் என்பதைவிட கிரிமினல்கள் என்பது அல்லவா உண்மை! இது இரண்டாவது அதிர்ச்சி. மூன்றாவது, நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி சந்துரு இருவரும் இருக்கும்போது, அவர்கள் கண் முன்னால் இப்படியொரு அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால், நீதிபதிகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பது.

சமீபகாலமாகவே, சட்டப்படிப்பு படித்து விட்டதாலேயே சட்டத்தைத் தாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பல வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், முருகானந்தம் என்கிற நீதிபதியை, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின்போது, பிராட்வே பகுதியில் ஒரு சைக்கிள் கடையை 24 வழக்கறிஞர்கள் சூறையாடியதும், அவர்களைக் கைது செய்யப்போன காவல்துறையினரையே அவர்கள் தாக்க முற்பட்டதும் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர்களின் அத்து மீறிய செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருப்பது, எந்த அளவுக்கு ஒரு கௌரவமான, மரியாதைக்குரிய தொழில் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. முன்பொருமுறை, அலாகாபாத் நீதிமன்றத்தில் காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, "யூனிஃபாரத்தில் உலவும் ரௌடிகள்' என்று ஒரு நீதிபதி விமர்சித்தார். பிறகு அந்தக் கருத்து திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு விஷயம். இப்போது, அதே கருத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்திவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறதே!

விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார் என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அல்லவா இவர்கள் தாக்கி இருக்க வேண்டும்? ஒருவேளை, அதற்கு தைரியமில்லாத காரணத்தால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கித் தங்களது வீரத்தைப் பறைசாற்ற நினைத்தார்களோ, என்னவோ!

எந்த அளவுக்குத் தரந்தாழ்ந்தவர்களாக இருந்திருந்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய அந்த மூன்றாம்தர வழக்கறிஞர்கள் (அவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?) தாங்கள் வழக்காடும் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்னால் முட்டைவீசித் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்களோ நானோ இதுபோல நடந்திருந்தால் அடுத்த வினாடியே, நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் நாம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருப்போம்.

எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. "சமரசம்' ஏற்பட்டு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதேபோல, வழக்கறிஞர்களின் சட்டவிரோதமான செயல்கள் பலதும் கண்டும் காணாமலும் நடவடிக்கை எடுக்கப்படாமலும் விடப்படுகின்றன. நடவடிக்கை எடுத்தால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். அதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், நீதிபதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக, தண்டிப்பார்களா? இந்த வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமை ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் வழக்குகளை விசாரிப்பதில்லை என்று நீதிபதிகள் அறிவிப்பார்களா? சரி, பார் கவுன்சிலாவது, இதுபோன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, தொழிலில் இருந்து வெளியேற்றுமா? அரசாவது, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடருமா? எதுவுமே நடக்காது என்பதுதான் நிஜம்.

நீதி கேட்டு நாம் நீதிமன்றத்துக்கு ஏன் போகிறோம்? நீதிபதி நியாயம் வழங்குவார் என்பதால். அந்த நீதிபதிக்கே மரியாதை இல்லை என்றால், மக்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையும் தகர்ந்து விடுகிறதே!

சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அரங்கேற்றி இருக்கும் வன்முறை, அராஜகம், ஈழத்தமிழர்கள் மீதுள்ள அனுதாபத்தையும் குலைக்கும். மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் குறைக்கும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் உரிமையை ரத்து செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்வதுதான், இனியும் இதுபோன்ற அநாகரிகம் தொடராமல் தடுக்கவும், நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படவும் ஒரே வழி.

Nandri:Dinamani

பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்...

ஒருமுறை தந்தை பெரியார், பார்ப்பனர்களின் சுயநலத்தை விளக்கி சொல்லும்போது:“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று சொன்னார்.‘என்னடா இது பைத்தியத்துலக் கூடவா பார்ப்பனப் பைத்தியம், பார்ப்பனரல்லாத பைத்தியம் இது கொஞ்ச ஓவரா தெரியுதே’ என்கிற எண்ணம் அதை படித்தபோது எனக்கு தோன்றியது.

ஆனால், இந்த சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து ராம் போன்றவர்களின் செயல்களைப் பார்க்கும்போது, பெரியார் எவ்வளவு தெளிவா, தீர்க்கமா சிந்திச்சிருக்காருன்னு புரியுது.‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போது, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம், பார்ப்பனர்கள் தமிழ்தேசியவாதிகளின் கூற்றைப் பொய்யாக்கி, பெரியாரின் வார்த்தையை மெய்யாக்குகிறார்கள்.

‘ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.அவர்களின் ‘ச்சூ’, ஒலி ரசனையின் அடிப்படையில்தான் எழுகிறதே தவிர, தமிழர்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஒருநாளும் எழுவதில்லை. (வீதியில் இறங்கி போராடுவதை கேவலமாக, பொது மக்களுக்கு இடைஞ்சலாக கருதுகிற இவர்கள்தான், கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கி போராடினார்கள்.)

ஈழத்தமிழர்களின் துயரங்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், என்பதுகூட பிரச்சினை இல்லை. அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் வருந்ததக்கது. அதையும்மீறி, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையோடு பேசுகிறார்கள். ‘பரவாயில்லையே’ என்று நாம் புருவம் உயர்த்தினால், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், மாவரைக்கிற கருணாநிதியை திட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகத்தான் ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்,

ஞாநியைப் போல.‘தங்கபாலு, ப. சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பச்சைத் தமிழர்கள்தான். அவர்கள் என்ன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவா இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தைவிடவும் தாங்கள் சார்ந்திருக்கிற கட்சியின் நிலைபாட்டை பிரதிபலிக்கிறார்கள். அல்லது இவர்களுக்கு சொந்தக் கருத்து என்பதே கிடையாது. எது அவர்களுக்கு லாபமாக இருக்கிறதோ அதை செய்கிறார்கள். ஆக, இவர்களை தமிழர்கள் என்றோ, இல்லை அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதிகளின் பிரதிநிதிகள் என்றோகூட முடிவு செய்யமுடியாது.ஆனால், கட்சி சாராத பார்ப்பனர்கள்கூட பெரும்பாலும், ஈழத்தமிழர்கள் விவகாரங்களில் எதிராக இருக்கிறார்கள். அல்லது அக்கறையற்று இருக்கிறார்கள்.

பத்திரிகைகளில்கூட, பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் வருகிற இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு பின்புலமாக, இலங்கை அரசின் ‘விருந்தாளி’யாக இன்ப சுற்றுலா சென்று வந்த பத்திரிகையாளர்கள், தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள்.ஆனால், துக்ளக், தினமலர், இந்து நாளிதழ்கள் இன்ப சுற்றுலாவிற்கு முன்பிருந்தே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்.

“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறத எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று பெரியார் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம்.

தேசப்பற்றாளரைப்போல், ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்று தீவிரமாக எழுதிய சுப்பிரமணிய பாரதி, ‘பார்ப்பன எதிர்ப்பு’ அல்லது ‘பார்ப்பனரல்லாதார் உரிமை’ என்று சிலர் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கல்லை விட்டெறிந்தைப் போல்,சுற்றுசூழல் பாதுகாப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம் என்று எழுதினால் ஓடி வந்து அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,பெரியார் - அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பன பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு வெறிப்பிடித்த தெருநாய் பாய்ந்து வந்து கடிப்பதுபோல், நம்மை கடித்து குதுறுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகளில் பலர்.

ஆக, பெரியார் சொன்னபடி பெரியார் கட்சிக்காரர்கள் நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, பார்ப்பனர்கள்தான் பெரியார் சொன்னபடி நடந்து கொள்கிறார்கள்.

-- வே.மதிமாறன்

அவர் ஒரு சமுத்திரம்

- கிருபானந்த வாரியார்

ஒரு நாள் பல பக்தர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அதில் ஒருவராக அமர்ந்திருந்த செல்வந்தர், தன் பத்து விரல் மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கப் பல் ஆகியனவற்றை அடிக்கடி காட்டி தன் செல்வக் கொழிப்பைக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் யாரென வாரியார் கேட்டதற்கு ஊர் மக்கள், அவர்தான் இந்த ஊரிலேயே மிகுந்த செல்வந்தர் என்றனர்.
அன்றிரவு வாரியாரிடம் வந்த செல்வந்தர்,"சுவாமி, நாளைக்கு என்னைப் புகழ்ந்து எல்லோரிடமும் சொல்லுங்கள்" என்று சொல்லிச் சென்றார். அடுத்த நாள் வழக்கம்போல் சபை கூடியதும், வாரியார்,"இவர் யார் தெரியுமா? இவர் ஒரு பெரிய சமுத்திரம். அள்ள அள்ளக் குறையாத கடல். இவ்வூரிலேயே மிகப் பெரிய செல்வந்தர். சமுத்திரம்ன்னா.. சமுத்திரம்தான். ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை" என்றார். செல்வந்தருக்கு உச்சி குளிர்ந்து விட்டது. பாராட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாரியாரிடம் விடைபெற்றுச் சென்று விட்டார்.
பக்தர்களில் ஒருவர் தயக்கத்துடன் எழுந்து, "சாமி! நீங்க இப்படிப் பொய்யாகப் பாராட்டலாமா? அந்த ஆள் ஒரு வடிகட்டிய கஞ்சன். ஒரு நல்ல காரியத்துக்கும் உதவியது இல்லையே?" என்று கேட்டார்.
அதற்கு வாரியார், "அதைத்தானே நானும் சொன்னேன். புரியவில்லையா? சமுத்திரம் ரொம்பப் பெரிசு. ஏகப்பட்ட தண்ணீ இருக்கு. ஒரு வாய் தண்ணி ஒருத்தருக்காவது பயன்படுமா? யார் தாகத்தையாவது தீர்க்குமா? இந்த ஆளிடமும் சமுத்திரம் மாதிரி செல்வம் கொட்டிக் கிடக்கு. ஒருத்தருக்கும் பயன்பட்டதில்லை. புரிந்ததா?" என்றார்.
சமுத்திரம்போல் இருக்காதே! ஒரு குளத்தைப்போல் இரு!

- நன்றி : திரு.ஞானவெட்டியான்

கடவுள் தன்மை - ஓஷோ

"ஒரு மரத்துக்கு அருகில் சென்று, அதனுடன் பேசுங்கள்(யாரும் பார்க்காதபோது). அதைத் தொட்டுத் தழுவிக்கொள்ளுங்கள். அதை உணர்வுடன் சந்தியுங்கள். அதன் அருகில் உட்கார்ந்து அந்த மரமும் உங்களை உணரச் செய்யுங்கள். அது உங்களை,"நீங்கள் மிகவும் நல்லவர். எந்தக் கெடுதலும் எண்ணாதவர்!" என்று உணரட்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த நட்பு அதிகரிக்க, நீங்கள் எப்பொழுதெல்லாம் அதன் அருகில் வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் அதன் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
நீங்கள் தொடும்பொழுதெல்லாம் ஒரு குழந்தையைப்போல குதூகலம் அடையும். நீங்கள் அருகில் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் அதன் சிநேகத் தன்மையை உணர்வீர்கள். நீங்கள் துக்கமான மன நிலையில் அதன் அருகில் வரும்போதெல்லாம் துக்கம் மறைந்து போவதை உணர்வீர்கள்.
அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் அந்த மரத்தை மகிழ்ச்சி அடையச் செய்யலாம். அதுபோல, அந்த மரமும் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்! வாழ்க்கை முழுக்கவும் ஒருவரை ஒருவர் நேசித்து, சார்ந்து இருப்பதை உணர்வீர்கள்.
இந்த சார்புடைய தன்மையைத்தான், நான் கடவுள் தன்மை என்று அழைக்கிறேன்."

நன்றி - ஞானவெட்டியான்

இது முதல் தடவை அல்ல....

விவேகானந்தர் ஒரு சமயம் தமிழகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் பிரபலம் அடையாத காலம். அவர் பயணித்த இரயில் பெட்டியில் ஆங்கிலேயச் சிப்பாய்கள் சிலர் இருந்தனர். இவரின் ஆடையைக் கண்டு, சந்நியாசிகளைப் பற்றித் தரக் குறைவாகப் பேசிக்கொண்டே வந்தனர். விவேகானந்தர் பதிலுக்கு ஒன்றுமே பேசாமல் வந்தார். ரயில் சேலம் வந்தபோது, அந்த ரயில் நிலைய அதிகாரியுடன் விவேகானந்தர் உரையாடுவது கண்டு சிப்பாய்கள்,"உமக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்கிறதே! எங்கள் பேச்சை மறுத்து ஏன் எதுவும் சொல்லவில்லை?" என்று கேட்டனர்.
"முட்டாள்களை நான் சந்திப்பது இது முதல் தடவை அல்ல" என்றார் விவேகானந்தர்"

ஏ.ஆர். ரஹ்மான் - மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது பற்றி கருத்து தெ‌ரிவித்த இயக்குனர் ஒருவர், அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்ச‌ரியமும் இல்லை, கிடைக்காவிட்டால்தான் ஆச்ச‌ரியப்பட்டிருப்பேன் என்றார்.

1992ல் வெளியான ரஹ்மானின் முதல் படம் ரோஜாவிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு செவிமடுத்துவரும் ரசிகர்களுக்கும் இந்த விருது எவ்வித ஆச்ச‌ரியத்தையும் அளிக்கவில்லை. அவரது திறமைக்கு, இசை பங்களிப்புக்கு கோல்டன் குளோப் விருது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற மனப்பதிவே அனைவ‌ரிடமும் மேலோங்கியிருந்தது.
ரஹ்மானின் இசையார்வம் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. அவரது தந்தை ஆர்.கே. சேகர் பிரபல இசையமைப்பாளர். மலையாளப் படங்கள் பலவற்றில் பணிபு‌ரிந்திருக்கிறார். ரஹ்மானுக்கு அவரது தந்தையே முதல் குருவாகவும் இருந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது தன்ரா‌‌ஜ் மாஸ்ட‌ரிடம் முறைப்படி இசை பயின்றார் ரஹ்மான்.
ரஹ்மானின் முதல் திரைப்பிரவேசம், மணிரத்னத்தின் ரோஜா. விளம்பரப் படங்களுக்கு அவர் இசையமைத்திருந்ததை கேட்டே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரோஜாவுக்கு இசையமைக்கும் முன் (1991ல்) தனது வீட்டின் பின்புறம் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார் ரஹ்மான். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டிருந்த அந்த ஸ்டுடியோ இன்று இந்திய அளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்டுடியோவாக திகழ்கிறது.
இசையமைப்பாளர் ஒருவருக்கு இசையறிவுடன் நவீன தொழில் நுட்பம் குறித்த பு‌ரிதலும் இருக்க வேண்டும் என்பது ரஹ்மானின் நிலைப்பாடு. தொழில்நுட்ப விஷயத்தில் காலத்தோடு ஒழுகினால் மட்டுமே சர்வதேச இசையுலகில் நிலைத்து நிற்க இயலும். இதனை ச‌ரியாக பு‌ரிந்து கொண்டவர் ரஹ்மான். அவர் தொடங்க இருக்கும் இசைப்பள்ளியில் இசையையுடன், நவீன தொழில்நுட்பம் குறித்தும் கற்பிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
திரையிசையில் மரபான நடைமுறையை ரஹ்மான் நிராக‌ரித்த போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இசையில் அளவுக்கதிகமாக தொழில்நுட்பத்தை கலக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அவர் இசையமைப்பாளர் அல்ல, வெறும் கம்போஸர் மட்டுமே என இசைத்துறையில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். இன்று அந்த குற்றச்சாட்டுகள் நிறமிழந்து விட்டன. மேலும், அவரது உலகளாவிய புகழுக்கு அவரது தொழில்நுட்ப அறிவும் ஒரு காரணமாக இருப்பதை அவரை விமர்சித்தவர்களே ஒப்புக் கொள்வர்.

ரஹ்மானால் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இசையமைக்க முடியும், தமிழ் கிராமிய இசை அவருக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இது ஒரு குறையாக முன்வைக்கப்பட்டபோது அவர் இசையமைத்த படங்கள் கிழக்கு சீமையிலே மற்றும் கருத்தம்மா. இந்தப் படங்களின் இசையும், பாடல்களும் ரஹ்மானுக்கு கிராமிய இசையில் அறிமுகமில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்தன. என்றாலும், தமிழ் கிராமிய இசை முழுமையாக அவருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே உண்மை.
இந்திப் பாடல்களுக்கு செவிமடுத்து வந்த தமிழர்களை தமிழ் திரையிசையின் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு வந்த வட இந்தியர்களை தமிழ் திரையிசையின்பால் ஈர்த்தவர் ரஹ்மான். நேரடி இந்திப் படங்களுக்கு அவர் இசையமைக்கும் முன்பே ரோஜா, ஜென்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் வாயிலாக அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் இசையமைப்பாளராகியிருந்தார்.
ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளில் தயாரான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது முதல் இந்திப்படம் ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை பாலிவுட்காரர்கள் அனுபவப்பட்டது இந்தப் படத்தில்தான்.
இன்று பாலிவுட்டில் நல்ல திரைப்படம் ஒன்று தயாரானால் இசை ஏ.ஆர். ரஹ்மான் என்பது எழுதப்படாத விதி. ஃபயர், லகான், ரங் தே பசந்தி, ஸ்லம் டாக் மில்லியனர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ரஹ்மானின் இசைப் பயணத்தில் 2002ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டில்தான் அவரது பாம்பே ட்‌ரிம்ஸ் பி‌ரிட்டனில் அரங்கேறியது. ஆண்ட்ரூ லாயிட் வெப்ப‌ரின் பாம்பே ட்‌ரிம்ஸ் நாடகம் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது.
1997ல் வெளியான ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பம் குறிப்பிடத்தகுந்த முயற்சி. இதையடுத்து அவர் வெளியிட்ட ஜன கன மண ஆல்பமும் ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றது. திரையிசையில் பாடல்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுப்பவர் ரஹ்மான். 2005 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்தி‌ரிகை வெளியிட்ட ‘டாப் டென் மூவிஸ் சவுண்ட் ட்ராக்ஸ் ஆஃப் ஆல் டைம்’ பட்டியலில் ரஹ்மானின் ரோஜாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றியவர் என்ற பெருமை ரஹ்மானுக்கு உண்டு. ரோஜா (1992), மின்சாரக் கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003) என நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள், இருபத்தியிரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இப்போது கோல்டன் குளோப் விருது என ரஹ்மானின் விருது பட்டியல் மிக நீண்டது.
இந்த கௌரவம் அத்தனை எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. 1966 ஆம் ஆண்டு ஜனவ‌ரி ஆறாம் நாள் சென்னையில் பிறந்த திலீப் குமார், ஏ.ஆர்.ரஹ்மானாக புகழின் உச்சியை வந்தடைந்ததற்குப் பின்னால் கடின உழைப்பு, விமர்சனத்துக்கு துவளாத மனம், பெருமைகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மனப்பக்குவம் என இளைய தலைமுறை கற்றுக் கொள்ளும் பல விஷயங்கள் இருக்கின்றன.
ரஹ்மானின் ஒன்பதாவது வயதில் அவரது தந்தை மரணமடைகிறார். இளையராஜாவிடம் கீ போர்ட் ப்ளேயராக அவர் சேரும்போது வயது பதினொன்று. இருபத்தியிரண்டாவது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவி திலீப் குமார் என்ற தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் (Aடடயா சுயமமாய சுயாஅயn) என மாற்றிக் கொள்கிறார். இருபத்தி ஆறாவது வயதில் முதல் திரைப்பிரவேசம்.
இன்று ரஹ்மான் என்பது அகிலம் முழுவதும் தெ‌ரிந்த பெயர். ஹாலிவுட் சினிமா அவரை விரும்பி அழைக்கிறது. இன்சைட் மேன், லார்ட் ஆஃப் த ‌ரி‌ங்‌ஸ், தி ஆக்சிடெண்டல் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் ரஹ்மானின் இசை கோவைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற டைம் பத்தி‌ரிகை அவருக்கு தந்திருக்கும் பட்டம், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்.
ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்கு‌ரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடிய பயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள் மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.
நன்றி : வெப்துனியா

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப் பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு
எட்டு ரூபாய்சில்லறைஎண்ணிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்
அந்த மீதி சில்லறையாவது
வாங்காமல் விட்டிருக்கலாம்!
- நன்றி: தமிழ் செய்தி

முத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்

ஈழத்தில் வாழும் தமிழர்கள் உரிமைக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பிடங்களை இழந்து காடுகளில் தஞ்சம் புகுந்து, மரத்தடிகளிலும்,தற்காலிகக் குடியிருப்புகளிலும் தங்கியிருக்கும் இவர்களுக்கு உணவு,உடை சிக்கல் உள்ளது.உணவுக்கும் மருத்துவத்துக்கும் ஒன்றுகூடும் இவர்களைச் - சொந்தநாட்டுக் குடிமக்களையே இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளையும்,பிறவகைக் குண்டுகளையும் வீசிக் கொன்றுவருவது மிகப்பெரிய மாந்தப் பேரவலமாக உள்ளது.உசாவல் என்ற பெயரில் இளைஞர்களை அடித்துக் கொல்வதும்,இளம்பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதுமாக ஒவ்வொரு நாளும் செய்தி ஏடுகளைப் படிக்கும்பொழுது தெரியவருகிறது. பண்பாடு உள்ளவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியாத செயலாக இது உள்ளது.பன்னாட்டு உதவிகளுடன் இலங்கை இராணுவம் தமிழினத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து வேட்டைகள் நிகழ்த்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள ஏடுகள் பலவும் இலங்கை அரசுக்குச் சார்பாகச் செய்திகளை வெளியிட்டு வருவது இன்னும் வேதனைக்கு உரிய செய்தியாகும். இலங்கை அரசின் உயரிய விருதுகளைச் சில தமிழக இதழாளர்கள் வாங்கி(!) வருவதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகும்.தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர் உண்மையாக ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருவதை நன்றியுடன் குறித்தாக வேண்டும்.அதே நேரத்தில் வேறு சில தலைவர்கள் பொதுக்குழு,செயற்குழு கூட்டுவது,தீர்மானம் நிறைவேற்றுவது, கலந்து பேசுவது,பதவிவிலகல் நாடகம் நடத்துவது,மாந்தச் சங்கிலிக்கு அழைப்பு விடுப்பது,கவிதை எழுதுவது,கட்டுரை வரைவது,கண்ணீர் மடல் வரைவது என அடுத்த தேர்தல்நாள் நெருங்கும்வரை அலைக்கழிப்பு வேலைகளைச் செய்துவருவதையும் தமிழக மக்கள் கண்டு வருகின்றனர். காசுமீரில் ஒரு "பண்டிட்" இறந்தால் இந்தியன் என்கின்றதும், இராமேசுவரத்தில் ஒரு தமிழன் இறந்தால் மீனவன் என்பதும் எத்தனை நாளைக்கு என்பது தெரியவில்லை.வடநாட்டு வல்லாதிக்கம் எனத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா குறிப்பிட்டது இதனைத்தான் போலும். இவ்வாறு அரசியல் கூத்தர்கள் ஒவ்வொரு வகையில் ஈழப்போராட்டத்தை நாடகமாக்கித் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பேரெழுச்சி கொண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவுக்குரல் கொடுத்துவருகின்றனர்.செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்,சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறக்க முனவந்தனர். அதுபோல் தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.தமிழகத்தின் பல கல்லூரி,பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்து ஈழத்தமிழர்களுக்குக் குரல்கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மாணவர்கள் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பெருகிவரும் வேளையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நடுவண் அரசு அலுவலகத்தின் முன்பாக தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.இதனைத் தொலைக்காட்சிகளில் கண்ட மக்கள் ஆறாத்துயர் உற்றனர். தமிழகத் தலைவர்கள் இத்தகு முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று வற்புறுத்தி வருகின்றனர். தமிழகத்து மக்களின் உணர்வுகளை எடுத்துரைக்கும் முகமாகவே முத்துக்குமாரின் முடிவு உள்ளது.முத்துக்குமாரின் இறுதி வாக்குமூலமும்,அவரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளும் அவரின் தேர்ந்த அரசியல் அறிவு உலகியல் அறிவு காட்டுகின்றன.தமிழர்கள் எந்த அளவு ஏமாற்றப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. இந்தி எதிர்ப்பில் மாணவர்கள் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்த வரலாற்றை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது. மொழிக்காக, இனத்துக்காக உயிர்மாய்த்துக்கொள்ளும் இனமாகத் தமிழினம் எத்தனை ஆண்டுகளுக்கு வாழவேண்டுமோ?.

தந்தையே நீ இல்லாது போனாய்!-
இந்தத்தமிழினம் சாகையில் நீ ஊமை ஆனாய்!
வெந்து கிடந்தன உடல்கள்!-
இந்தவேதனைக்கு அழுதன நாற்புறக் கடல்கள்!

என்ற புலவர் புலமைப்பித்தனார் வரிகளும்

வடக்கிலோ மேன்மேலும் அதிகார வீக்கம்வருமான
வீழ்ச்சியோ தெற்கினைத் தாக்கும்!

என்ற பெருஞ்சித்திரனார் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

- முனைவர் மு.இளங்கோவன்
தட்ஸ்தமிழ் நன்றி

தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?


ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?


கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...


பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.


ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.


உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்


இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?


தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.


தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...


உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.


களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...


அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,


உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.


புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)


இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.


இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.


காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.


1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.


2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.


3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.


4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.


6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.


7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.


8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்


9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.


10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.


11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.


12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.


14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99


அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.