திருக்குறள்

பொங்கி எழுந்தார் அறிஞர் அண்ணா...

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.

இந்தத் திருமதிக்கு வயது 26.

அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.

பெரியாருக்கு வயது 72.

மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

-தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..

…அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.

இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

…திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

…பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.

பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.

சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

-முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல்.

வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!

வேதனைப்படுகிறோம் தனிமையிலே!

ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் – நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

-எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

- எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!

கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

…பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.

அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.

புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!!

இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.

அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
—————————
அன்புள்ள
சி. என். அண்ணாதுரை

(திராவிட நாடு 3-7-49)

பவர் (இழந்த) ஸ்டாரும்; வேஷம் கலைந்த சினிமாவும்


தமிழ் சினிமாவை காப்பாற்ற அவ்வப்போது சில அவதாரங்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் வரிசையில் வந்தவர்தான் அக்குபன்ஞ்சர் டாக்டர் சீனிவாசன்.

அண்ணா நகரில் சிறிய அளவில் அக்குபன்ஞ்சர் மருத்துவமனை வைத்திருக்கும் அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீதானா அவன், உனக்காக ஒரு கவிதை, ரா ரா பழனிச்சாமி, மண்டபம், சுரங்க பாதை, இப்படி சில படங்களில் நடித்தார்.

புதிய இயக்குனர்கள் அவரை தேடிப்தேடிப்போய் வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம் அந்த இயக்குனர்களுக்கு அவர் கொடுக்கும் கட்டிங் பணம். சிறிய சம்பளத்தில் படம் இயக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு இது ஒரு உபரி வருமானமாக இருந்தால் அவரை ஆர்வத்தோடு தங்கள் படத்தில் தலைகாட்ட வைத்தனர்.

திடீரென ஒருநாள் அவருக்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அந்த ஆசையை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சண்டை இயக்குனர் பன்ஞ் பரத். சினிமா இயக்கம் பற்றி அரிச்சுவடிகூட தெரியாத அவர் எடுத்த படம்தான் இந்திரசேனா. இதில் சீனிவாசன் வில்லனாக நடித்தார். அடுத்து ஒருவர் இயக்கத்தில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார்.

இதில் இயக்குனருக்கும், இவருக்கும் பண விஷயத்தில் முட்டல் மோதல் வர முடிந்த படத்துக்கு இவரே கதை, திரைக்கதை வசனம், இயக்குனர் ஆனார். ஹீரோவும் அவர்தான். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கைலாஷ் என்ற பெண் துணிச்சலுடன் நடித்தார்.

பெரியார், அண்ணா எம்.ஜி.ஆருக்கு பிறகு இவர்தான் அடுத்த தலைவர் என்கிற ரேன்ஞ்சுக்கு ஓப்பன் சாங்குடன் மிரட்டியது அந்தப் படம். 50 வயதான அக்குபன்ஞ்சர் சீனிவாசனின் ஹீரோ கனவு நிறைவேறியது.

ஒரு அக்கு பன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க முடிகிறது என்று எந்த சினிமா கலைஞனும் யோசிக்கவில்லை. பலர் அவரின் அண்ணா நகர் கிளினிக்கிற்கு தேடிச் சென்று, காத்திருந்து அவரது நண்பர்கள் ஆனார்கள்.

அதில் சில முக்கிய நடிகைகளும் உண்டு. கையில் கதையை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிச் செல்லும் புதிய இயக்குனர்கள் தங்கள் கனவு கதையை ஒதுக்கி வைத்து விட்டு சீனிவாசனுக்கு கதை எழுதிக் கொண்டு சென்று அவரைப் பார்த்தார்கள்.

அப்படி தேடிச் சென்று கதை சொல்பவர்களுக்கு ஒரு நண்மை உண்டு. சீனிவாசனுக்கு கதை பிடிக்காவிட்டாலும் பெரும் தொகை சன்மானமாக கிடைக்கும். இதற்காக வாரம் ஒரு கதை சொன்ன இயக்குனர்களும் உண்டு.

அப்படிச் சென்றவர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டத்தை சீனிவாசனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். அதில் அவருக்க பிடித்த பவர் ஸ்டார் பட்டத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டார். (தெலுங்கில் பவன் கல்யாணின் பட்டம் அது) லத்திகாக படம் எல்லா தியேட்டர்களிலும் ஒரு காட்சி ஓடிவிட்டு பத்திரமாக திரும்பி வந்தது.

ஆனாலும் விடுவாரா பவர் ஸ்டார், சென்னை கமலா தியேட்டரில் அந்தப் படத்தை திரையிட்டு 150 நாட்கள் ஓட்டினார். அதாவது அந்தப் படம காலைக் காட்சியாக ஓடும். பல நாட்கள் வெறும் தியேட்டரில் படம் ஒடும். சில நாள் படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணி வழங்கப்படும், அனைத்து நாளும் இலவச அனுமதிதான்.

தியேட்டரின் வாசலில் தனது ஆளுயர கட்அவுட் வைப்பதற்கும், படம் திரையிடுவதற்கும் வாடகை கொடுத்து விடுவார். விஜய், அஜீத் படங்களே கமலா தியேட்டரில் சில நாட்களில் காணாமல் போகும் நிலையில் பவர் ஸ்டார் மட்டும் நிலைத்து நின்று சிரித்துக் கொண்டிருந்தார். இதில் இன்னொரு கொடுமை என்ன வென்றால் சில பத்திரிகைகள் லத்திகா படத்தை ஆண்டு கண்ணோட்டத்தில் அதிக நாள் ஓடிய படங்களின் பட்டியலில் சேர்த்து மகிழ்ந்துது.

தன் வழுக்கை தலைவில் விதவிதமான விக் வைத்துக் கொண்டு அவர் கொடுத்த போஸ்கள் கோடம்பாக்க ரோடுகளில் விதவிதமாக சிரித்துக் கொண்டிருந்தன. அடுத்து திருமா, தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு படத்தை தானே தயாரித்து இயக்கப்போவதாக அறிவித்தார்.

அதில் ஒரு படத்தில் மாஜி ஹீரோயின் வாணி விஸ்வநாத் அவருக்கு ஹீரோயின். பவர் ஸ்டாரின் "அன்பான" உபசரிப்பின் காரணமாக சில மீடியாக்களும் பவர் ஸ்டாரை தூக்கி வைத்துக் கொண்டாடியது. சில முன்னணி வார இதழ்கள்கூட அவரை கிண்டல் செய்வதாக காட்டிக் கொண்டு அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை அள்ளி வீசியது.

முன்னணி சேனல்கள் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியது. சிறப்பு பேட்டி கண்டது. நல்ல திறமையோடும், எதிர்கால கனவுகளோடும் சினிமாவை உயிராக நேசித்துக் கொண்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் உலாவிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மனதில் இந்த காட்சிகள் எத்தனை வலியை உண்டாக்கி இருக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

அடுத்த அதிர்ச்சியை அள்ளி வீசினார் பவர் ஸ்டார். ஷங்கரின் ஐ படத்திலும், பாலாவின் பரதேசி படத்திலும் அவர் நடிப்பதாக அறிவித்தார். இந்த இருவர் படத்திலும் ஒரு காட்சியில் தலைகாட்டினால் போதும் என்று லட்சம் திறமையாளர்கள் காத்திருக்க இந்த வாய்ப்பு பவர் ஸ்டாருக்கு போனது எப்படி என்பது இதுவரை புரியாத ஒன்று.

அடுத்த அதிர்ச்சியை அளித்தவர் காமெடி சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சந்தானத்துடன் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. சிலர் பவர் ஸ்டார்தான் தயாரிப்பாளர் என்றார்கள். சிலர் சந்தானத்துடன் பார்டனர் என்றார்கள். இப்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ பணம் மட்டும் இருந்தால் சினிமாவில் எந்த இடத்தையும் பிடிக்கலாம் என்பதற்கு பவர் ஸ்டார் ஒரு நல்ல உதாரணம். திறமை மட்டும் இருந்தால் கோடம்பாக்கத்துக் டீக்கடையும், அங்கு கிடைக்கும் மசால் வடையும்தான் கடைசிவரை கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணாமாகியிருக்கிறது.

அஜீத், விஜய்க்குகூட பெயருக்கு முன்னால்தான் தல, இளையதளபதி என்ற பட்டங்களை போடுவார்கள். ஆனால் சீனிவாசன் என்பதையே மறந்து பவர்ஸ்டார் என்று மட்டுமே குறிப்பிடும் அளவிற்கு அவர் வளர்ந்ததற்கு மூன்று காரணங்கள்தான் உண்டு. அது 1.பணம், 2.பணம், 3.பணம்.

அண்ணாச்சி தன் பலசரக்கு கடையில் ஒரு பையனை வேலைக்கு சேர்ப்பதற்குகூட அவனது பின்ணியை தெரிந்து கொண்டுதான் சேர்த்துக் கொள்வார். ஆனால் ஒரு அக்குபன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கான பணத்துடன் விளையாட முடிகிறது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சினிமா அவரை கிண்டல் என்கிற பெயரில் கொண்டாட ஆரம்பித்தது. அவரும் அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு சினிமா உலகத்தையே கேலி செய்துவிட்டார்.

சினிமா ஒரு கடல் அதில் யார் வேண்டுமானாலும் குதித்து, குளித்து விளையாடலாம், யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அப்படி குதித்தவரோடு சினிமாவில் மதிப்பு மிக்கவர்களும் உடன் விளையாடினார்களே அது ஏன் என்பதுதான் சராசரி ரசிகனின் கேள்வி.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் காலம் ஒரு நாள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத்தானே செய்யும். என்னதான் வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையத்தானே செய்யும். அது இப்போது ஆரம்பித்திருக்கிறது. அக்குபன்ஞ்சர் சீனிவாசனுக்கு பணம் எப்படி வந்தது, எந்த வழியில் வந்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை இனி காவல் துறை சொல்லும். குறைந்த வட்டிக்கு கடன் தருகிறேன்.

அட்வான்ஸ் கொடுங்கள் என்ற தொழிலில் 60 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சீனிவாசன். இன்னும் அவர் மீது பல வழக்குகள் பாயலாம். வழக்கில் அவர் தண்டனை பெறலாம். அல்லது நிரபராதி என்று விடுதலையாகலாம்.

ஆனால் ஹீரோக்கள் நிறைந்த சினிமாவில் இரண்டு ஆண்டுகள் வெளிச்சத்துடன் வலம் வந்த சீனிவாசன் நிஜ ஹீரோவாகி ஒட்டுமொத்த சினிமாவையும் காமெடியாக்கி விட்டார் என்பதுதான் உண்மை.
 source : cinemaulakam

தமிழச்சி தங்கபாண்டியன்





      கிராமிய வாசனை மணக்க மணக்க... வாழ்வியல் கவிதைகளையும் படைப்புகளையும் படைத்து, இலக்கிய உலகில் தனித்த ஆளுமையோடு திகழ்கிறவர் தமிழச்சி தங்கபாண்டியன். பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், நாடகக் கலைஞர், பரதநாட்டிய வித்தகர், ஆய்வாளர், அரசியல்வாதி என்றெல்லாம் பன்முகப் பரிமாணம் காட்டி பரவசப்படுத்துகிறார் தமிழச்சி.

மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளான தமிழச்சி, ராணிமேரி கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முழுநேர அரசியலுக்காக தனது பேராசிரியர் பணியைக் கைவிட்ட தமிழச்சி, விருதுநகர் மாவட்ட மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்து, தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவரை "இனிய உதயத்துக்காக நாம் சந்தித்தபோது...

மல்லாங்கிணற்று மண்ணிலும், நீலாங்கரை மண்ணிலும் உங்கள் பதிவுகள் எப்படி இருக்கின்றன?

என்னுடைய மண் வாசமும், எனக்கான மனிதர்களும் நிறைந்த இடம் மல்லாங்கிணறு. நீலாங்கரையோ ஒருவகையில் இன்னமும் முழுதாய் நகரமயமாகாத ஒரு அழகிய பகுதி. காற்று, வெளி, கடலோர மனிதர்கள் என கொஞ்சம் புறநகரப் பகுதிக்கான அடை யாளங்களை நீலாங்கரை மிச்சம் வைத்திருக்கிறது. அதனால் நீலாங்கரை என் நெஞ்சுக்கு கொஞ்சம் நெருக்கமாயிருக்கிறது. மல்லாங்கிணறு- நீலாங்கரை இரண்டிலுமே நீர் இருக்கிறது. இவ்விரு பகுதிகளிலும், நீர் மாதிரியே என் வாழ்க்கை தெளிவாக இருக்கிறது.

உங்கள் மல்லாங்கிணற்று மலரும் நினைவு களைப் பகிருங்களேன்?


என் அம்மாவுக்கு பூர்வீகம் சிவகாசி. அப்பாவுக்கு பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி. இரண்டு பேரும் மல்லாங்கிணறில் ஆசிரியர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஒரு வகையில் மல்லாங்கிணறு என் அப்பாவை தத்தெடுத் துக்கொண்டது என்று சொல்லலாம். அப்பா இறந்த சமயம், "மல்லாங்கிணறு தன் மகனை நினைக்கிறது என்று ஒரு கவிதை எழுதினேன். அந்த ஊரே அப்பாவை நேசித்து எழுதுவது மாதிரியான கவிதை அது. நான் பிறந்ததும் அந்த ஊர்தான். அப்பா- அம்மா எனக்கு வைத்த பெயர் சுமதி. செமதின்னுதான் என்னை ஊரே கொண்டாடும். ஒன்னாப்பு, மூனாப்பு அந்த ஊரில்தான் படிச்சேன். அஞ்சாப்புக்கு பிறகு விருதுநகரில் படித்தேன். மல்லாங்கிணற்றோடும் அங்கே என்கூட படித்த அம்பி, கொட்டாப்பு, லச்சுமி, சிலம்பாயி, ஈஸ்வரி, குருவாச்சி, வேளாங்கன்னி இவர்களோடும் எனக்கு இன்னமும் தொடர்பு இருக்கிறது. குருவாச்சி படிப்பை எல்லாம் நிறுத்தி விட்டு ஆடு, மாடு மேய்க்கிறாள். மல்லாங்கிணறை எல்லாருக்கும் தெரியறமாதிரி செஞ்சிருக்கு சுமதின்னு மகிழ்ச்சியில அவள் இருக்கிறாள். விருதுநகரில் என் பள்ளிப் படிப்பும், மதுரையில் கல்லூரிப் படிப்பும் அமைந்தது.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்?

என் கணவர் சந்திரசேகர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. நான் எழுதுவதற்கான அத்தனை இடத்தையும்
அவர்தான் கொடுக்கிறார். என் சிறகுகள் விரிய அவர் வானமாக இருக்கிறார். என் மூத்த மகள் சரயூ அமெரிக்காவில் எம்.எஸ். படித்திருக்கிறார். இரண்டா வது மகள் நித்திலா, பிளஸ்டூ படிக்கிறார். பெரிய மகளுக்கு கவிதையில் ஆர்வம் இருக்கிறது. அவள் எழுதியதை, கவிதை மாதிரி எழுதுகிறாய் என்று சொல்லியிருக்கிறேன். இது அப்பா எனக்கு சொன்னதை நினைவுபடுத்துகிறது. நான் முதன்முதலில் கவிதை என்று எழுதிக் காட்டியதை, "கவிதை மாதிரி தான் எழுதியிருக்கே என்றார். என் முதல் கவிதையில் தொடங்கிய இலக்கிய தாகம், கல்லூரியில் "அருவி என்ற இலக்கிய இதழைக் கொண்டுவரும் அளவிற்கு வேகமெடுத்தது. அதுதான் இன்றளவும் தொடர்கிறது.

நீங்கள் முதன்முதலில் "கவிதை மாதிரி&ஹல்ர்ள்; எழுதியதற்கும், தற்போது எழுதும் கவிதைகளுக்கும் இடையிலான தூரத்தை எப்படி உணர்கிறீர்கள்?

இப்போது எனது கவிதைகளில் மொழி கொஞ்சம் இறுக்கம் அடைந்திருக்கிறது. கவிதையைப் பொறுத்த வரைக்கும் அந்த வடிவம் இறுக்கமாகவும், சுருக்கமாக வும் ஒரு செட்டாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னு டைய விருப்பம். கவிதை அப்படி யாகப்பட்ட ஒரு வடிவம்தான். மொழியிலேயே மிகப்பெரிய சவால்களை உருவாக்குவது கவிதைகள்தான். கட்டுரையோ, சிறுகதையோ என்றால் விவரித்து எழுதிக்கொண்டே போகலாம். ஒரு சொல்லுக்குள், ஒரு வாக்கியத் துக்குள் ஒரு பெரிய கடலைத் திணிப்பதுபோலதான் கவிதை என்பதால், அது படைப்பாளிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிற விசயம்.

என்னுடைய முதல் கவிதை யான "மாரியை நான் கவிதை என்று சொல்லமாட்டேன். ஒரு நீண்ட மனப்போக்கின் வடிவம் என்றுதான் சொல்வேன். இன்று வரைக்கும் நான் எழுதினவை எல்லாம் கவிதை மாதிரிதான்; கவிதை கிடையாது. இதுதான் கவிதை; இதுதான் சிறந்த கவிதைக் கான இலக்கணம் என்று இது வரைக்கும் எதுவுமில்லை. அப்படி வரையறுக்கவும் முடியாது. அதே சமயம் இப்போது எனக்கு இறுக்கமாக ஒரு தேர்ந்த மொழி யில் சொல்லக்கூடிய லாவகம் கிடைத்திருக்கிறது என நான் நினைக்கிறேன்.

எந்த கோட்பாடுகளை முன்வைத்து உங்கள் கவிதைத் தளம் இயங்குகிறது?

ஒன்றுமே கிடையாது. நான் எழுதுகிற போது, எந்தக் கோட்பாடு சார்ந்தும் என் கவிதை இருக்காது. அப்படி அது இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல் இது பெண்ணியக் கவிதை, இது மண் சார்ந்த கவிதை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் நான் எண்ணிக்கொண்டு எதையும் எழுதுவதில்லை. இன்றைக்கு உட்கார்ந்து ஒரு மண்சார்ந்த கவிதை எழுதுவோம், இன்றைக்கு ஒரு பெண்ணியக் கவிதை எழுதுவோம் என்று செய்தால் அது கவிதை அல்ல. அது செயற்கையாக செய்யப்படுவது. கவிதை அந்த கணத்தில் மலர்வது. அதுவே தன் பாடுபொருளையும் வடிவத்தையும் சொற்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.

தமிழ் இலக்கியத்தில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கில இலக்கியத்தில் இருந்து தமிழுக்கும் ஒன்றை மொழிபெயர்க்கச் சொன்னால் அது எதுவாக இருக்கும்?

ஆங்கிலத்தில் நான் தலை சிறந்த ஆன்மா என்று நினைப்பது ஷேக்ஸ்பியரின் நாடகங்கள். எனக்கு அவற்றை மொழி பெயர்க்க விருப்பம். "கீட்ஸ் மற்றும் "சில்வியா கவிதைகளை மொழிபெயர்க்கவும் ஆசையுண்டு. தமிழில் இருந்து நான் ஆங்கிலத்திற்கு கொண்டு போகவேண்டும் என்று இந்த கணம் நினைப்பது, ஈழத்தில் போர்புரிந்த பெண் போராளி களின் கவிதைகள். "பெயரிடாத நட்சத்திரங்கள் என்று அது "விடியல் வெளியீடாக வந்திருக்கிறது. அந்தத் தொகுப்பில் முழுக்க எந்த போராளிகளுக்கும், எந்த கவிஞர்களுக்கும் பிறந்த தேதி கிடையாது. எல்லா கவிஞர்களுக்கும் இறந்த தேதி மட்டும் இருக்கிறது.

எங்கெங்கோ பிறந்து போராளி களாய் போர்க்களத்திற்கு வந்தாலும் அந்த உக்கிரமான சூழ்நிலையிலும் அவர்களுக்குள் ரசனை இருந்திருக்கிறது. அவற்றை கவிதையாக வடித்திருக்கிறார்கள்.

இது மிக சமீபத்தில் வெளிவந்த மிக முக்கியமான புத்தகம். இதை ஆங்கிலத்திற்கு கொண்டுபோகும் போது உலகத்தின் ஒட்டுமொத்த கவனமும், அதன்பால் ஈர்க்கப்படும். அவர்களுடைய உணர்வு பகிர்ந்து கொள்ளப்படும் என்று நான் நினைக்கிறேன்.

முனைவர் பட்ட ஆய்வுக்கு தாங்கள், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகளில் "அவர்தம் அலைந்துழல்வு உணர்வு என்ற தலைப்பை எடுத்துக்கொண்டது ஏன்?

ஐம்பது ஆண்டுகால போராட்டம் ஈழப்போராட்டம். எண்பதுகளில்தான் தமிழகத்தில் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியது. ஈழத்தின் கறுப்பு ஜூலை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நான் கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் வருடம் அது. அப்போதிருந்தே ஈழத் தமிழர்களின் போராட்டங்களை கவனித்து வருகிறேன். அந்த போராட்டம் உச்சகட்டமாக மாறியபோது நான் முடிவெடுத்தேன். என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சி என்பது இது சம்பந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்று. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர் களின் ஆங்கிலப் படைப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால் ஈழத்து தமிழ் படைப்புகள் குறித்து பரவலாக எல்லாருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஆங்கிலப் படைப்பாளிகள் குறித்து ஆய்வு செய்யும்போது ஒரு சர்வதேச கவனம் கிடைக்கும். அதனால்தான் என்னு டைய ஆய்வு படிப்புக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகளில் "அவர்தம் அலைந்துழல்வு உணர்வு என்று தலைப்பிட்டேன். ஈழத்துப் படைப்பாளிகள் ஆங்கிலத்தில் மிகத் திறம் பட இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் நோக்கில் தான் அந்தத் தலைப்பைத் தேர்ந் தெடுத்தேன். அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த பிறகு எந்த இடத்தில் இருந்து ஆய்வை தொடங்குவது என்று நினைத்தேன். 2003, 2004- ஆம் ஆண்டில் ஈழத்தில் பிரச்சினைகள் அதிகமாக இருந்த காலகட்டம். அதனால் ஈழத்தில் சென்று ஆய்வு செய்வது என்பது அடிப்படை சாத்தியம் இல்லாத காரியம். என் னுடைய களமும் புலம்பெயர்ந்து வாழுகின்றவர்களின் கவிதைகள் பற்றியதுதான். அதனால் பரவலாக பார்க்கிறபோது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழும் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன். புத்தகம் மூலமாக அறி வதைவிட ரத்தமும் சதையுமாக அவர்களைப் பார்க்கிறபோது, அவர்களின் பாடல்களைக் கேட்கிற போது, அவர்கள் ஏன் ஆங்கிலத் தில் இந்தப் பாடல்களை கொண்டு வரவேண்டும் என்று நினைத் தார்கள் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தேன். எர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியர் நாடகத்தின் மூலம் தனது ஈழத்துப் போராட் டத்தை வெளிப்படுத்தியவர்.

அவர் இலங்கையில் இருந்து எழுதிய நாடகங்களையும், புலம்பெயர்ந்த பின்னர் எழுதின நாடகங்களையும் பார்க்கும்போது, முழுக்க ஈழப் பிரச்சினையை முன்வைத்துதான் நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்த குரல் திசையெட்டும் எதிரொலிக்குமா? இது உலகின் கவனத்தை ஈர்க்குமா? என்ற ஏக்கத்தின் அடிப்படைதான் இந்த ஆய்வு.

உங்கள் எழுத்துகள் சலிப்பை ஏற்படுத்தியது உண்டா?

"மே-18 என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் சம்பவம் குறித்து ஒரு கவிதை எழுதினேன். அந்தப் பிரச்சினைகளை அறிந்தபோது என்ன எழுதுவது என்ற விரக்தியில் இருந்த சமயத்தில்தான் அந்தக் கவிதை எழுதினேன். முள்ளிவாய்க்கால் துயரத்தைச் சொல்லும் அந்தக் கவிதை, "அடுத்த வேளை சாப்பிடத் தான் வேண்டியிருக்கிறது என்று முடியும். இதுதான் நிதர்சனம். இதனால் சமயங்களில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. என்ன எழுதுகிறோம்- நம்ம எழுத்தால் ஒரு சின்ன முன்னகர்வைக்கூட கொண்டுபோக முடியவில்லையே என்ற சலிப்பு ஏற்படுகிறது. இந்த எழுத்தினால் என்ன இருக்கிறது என்ற வெறுமை உணர்வு வந்து, மூன்று மாதங்கள் எதுவும் எழுதா மல் இருந்தேன். நான் களப் பணியாளி கிடையாது. எவ்வளவோ விஷயத்தைப் பேசலாம். ஆனால், நான், களத்தில் இறங்கும் செயல்பாட்டாளராக இல்லை.

அதற்கான சூழல் எனக்கு இல்லை. இதனால் சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் மவுனமாக நிற்கவேண்டியதிருக்கிறது. ஒருவித தார்மீக அறம் என்னை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஈழத் துயரத்திற்கு நீ களத்தில் என்ன செய்தாய்? என்று என் மனசாட்சியே கேட்பதால் குற்ற உணர்ச்சியில்தான் இன்னும் இருக்கிறேன்.
நீங்கள் சாதிக்கவேண்டும் என்று நினைப்பது?

வெளிச்சம் படாமல் இருக்கும் பெண் கவிஞர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக் கிறேன். செ. பிருந்தா, மு. சத்யா, சக்தி ஜோதி, கு. உமாதேவி, கல்பனா என்று எத்தனையோ பெண் கவிஞர்கள் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிச்சம் அதிகம்படாமல் இருக் கிறார்கள். அவர்களின் படைப்பு கள் குறித்த புத்தகம் கொண்டு வரலாம் என்றிருக்கிறேன். லதா ராமகிருஷ்ணன் எழுதுகிறார், மொழிபெயர்க்கிறார், களப்பணி யாளராக இருக்கிறார். ஆனால் அவர் அவ்வளவாக பரவலாக அறியப்படவில்லை. அப்படியிருந் தும் தனக்கான விஷயங்களை
அவர் எப்போதும்போல் செய்து கொண்டே இருக்கிறார்.

உங்களின் கவிதைகள் வட்டார வாழ்வியல் சார்ந்தே இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை எழுதத் தூண்டியது எது?

என் ஊரின் கொத்தனாரம்மா, நூறு நாள் வேலை செய்யுற அம்மா, எலந்தை அடை செய்யும் அம்மா.. என்று எனக்கு தெரிந்த எங்கள் ஊர்ப் பெண்களிடமிருந்து தான் நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறேன். நான் வாக்கிங் செல்வதை கேலி செய்வார்கள். "நடக்கிறதுக்குன்னு வர்றியாப்பா என்று கேலி செய்வார்கள். உரிமையோடு வர்க்கத்தை அவ்வளவு அழகாக கேலி செய்வார்கள். "அதெல்லாம் பாத்தா நாங்க இங்க உட்கார்ந்து வேல பாத்துக்கிட்டு இருக்க முடியுமா. செமதி வருதுங்குறதுக் காக நான் மாத்திக்க முடியுமான்னு சொல்லும்போது முகத்தில் அறையும் உண்மையாக இருக்கும். அங்கிருந்துதான் என் படைப்பு ஆரம்பமாகும். இளம்பிராயத்தில் எங்க ஊர் பாலத்தைக் கடக்கும் போது அங்கே கொஞ்சம் நேரம் அமர்ந்துவிட்டுதான் செல்வேன். என்னுடைய தந்தையை இழந்த சமயத்தில், நான் அப்படி பாலத் தில் அமர்ந்திருக்கும்போது, என்னைக் கடந்து போகிறவர்கள் எல்லாரும், "மனச விட்றாதப்பா, மனச விட்றாத, மனச விட்றாரதாத்தா என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். அதற்கு ஈடான கவிதையை நான் பார்க்கவில்லை. பத்து வரியில் சொல்ல வேண்டியதை அந்த இரு வார்த்தைகளில் உணர்ந்தேன். அப்போதுதான் இந்த மக்களுடைய மொழியில் எழுதவேண்டும் என்று முடிவெடுத்தேன். சிலர் அதை கரிசல் இலக்கியம், பிற்போக்கு இலக்கியம், அது வெறும் தகவல்களின் தொகுப்பு என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் நான் அதிலிருந்துதானே வந்திருக்கிறேன். நான் அதைத்தானே பேசுகிறேன். மேலைநாட்டில் இருந்து ஆங்கிலத்தில் வேர்ட்ஸ் வொர்த் நாட்டுப்புறத்தைப் பற்றி எழுதினால் அவர் தலைசிறந்த கவிஞர் என்று கொண்டாடுவார்கள். நான் செவலக்காளையைப் பற்றியோ, வைக்கோல் போரையோ, மாட்டுச் சாணத்தைப் பற்றியோ எழுதினால், "இவர் இப்படித்தான் கிராமம் சார்ந்து மட்டும்தான் எழுதுவார். பெண்ணியம் சார்ந்த கவிதை எழுதுவது கிடையாது என்று விமர்சனம் வைப்பார்கள்.

வேரில் இருந்துதான் உண்மை யான படைப்பாக கவிதைகள் வருமென்று நம்புகிறேன்.

அப்படித்தான் என் கவிதைகள் வருகின்றன.

சமகால பெண்ணியக் கவிதைகள் குறித்த உங்கள் பார்வை என்ன? குறிப்பாக பெண்கள் எழுதிவரும் உடலரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இதுவரை ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு தளம்; ஆண்கள் மட்டுமே பேசிவந்த ஒரு விஷயம்; ஆண்கள் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயம் என்று இருந்த ஒன்றை முற்றிலுமாக உடைத்தெறிந்திரு கிறார்கள். ஆனால் இது ஒன்றும் புதிது கிடையாது. ஔவையார் சொன்னதையும், ஆண்டாள் சொன்னதையும், வெள்ளிவீதியார் சொன்னதையும்விட இது ஒன்றும் புதிதல்ல. அப்போது முதலே இருந்த ஆதிக்குரல்தான் இது. ஆதியில் பெண், தன்னுடைய காமத்தையும், காதலையும் வெளிப் படையாகச் சொல்லி யிருக்கிறாள். ஒரு படைப்பாளியை இப்படி எழுதுங்கள்- அப்படி எழுதுங்கள் என்று சொல்ல முடியாது. உடலரசியல் குறித்து ஒரு ஆண் எழுதினால் விமர்சனம் எழுவது கிடையாது. அதே பெண் எழுதினால் அவளது நடவடிக்கையோடு அது ஒப்பிடப் படுகிறது. அவர் குடும்பப் பெண்தானா என்று சந்தேகம் எழுப்புகிறார்கள். அப்படித்தான் நிலைமை இருக்கிறது. இது மாறவேண்டும். ஒன்றை மறந்து விடக் கூடாது. ஆண்டாளைவிட காமத்தை அவ்வளவு வெளிப்படையாக, அதேசமயத்தில் கவித்துவமாக இதுவரை யாரும் சொல்லவில்லை.

கிராமத்து சிறு தெய்வங்கள் உங்களின் படைப்புகளில் அதிகம் வருவது ஏன்?

என் சிறு பிராயம் தொட்டு தொடர்ந்து என்னுடன் பயணம் செய்யும் தோழி வனப்பேச்சி. அவளை நான் மற்றவர்களைப்போல் குலதெய்வமாகப் பார்க்க வில்லை. என்னுடைய உருவத்தின் மறு உருவமாகவே அவளை நினைக்கிறேன். நான் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேனோ, அப்படியெல்லாம் என்னால் இருக்க முடியவில்லை. ஆனால் பேச்சி இருக்கிறாள். அவளை நான் சுதந்திரத்தின் ஒரு பிரதிபலிப்பாகவே பார்க்கிறேன். மழை, காற்று எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் அவளது வல்லமை கண்டு அவள்மீது அலாதியான அன்பு வைத்திருக்கிறேன். பெண்மையின் முழு சுதந்திரத்திற்கான குறியீடு வனப்பேச்சி. என் வேர்கள் நிரவியிருக்கின்ற கிராமம் விட்டு, லௌகீக இருத்தலுக் கான இடமான இந்த நகரத்தில் என் அலைந்துணர் வையும், ஒன்றாமையையும், நிர்கதியையும், பகிர்ந்து கொள்ளும் சக பயணி. அவளுடான என் உறவு பகுத்தறிவின் ஆய்தலுக்கு உட்படாத ஒரு நறுமணமாய் என் கவிதைகளில் ஊடாடி இருப்பதாய் நான் உணர்கிறேன்.

சமீபகாலமாக அரங்கச் செயல்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டிவருகிறீர்களே?

அடிப்படையில் நான் பரதக்கலைஞர். பள்ளிப் பருவத்திலேயே எனக்கு நாடகப் பயிற்சி இருக்கிறது. மல்லாங்கிணறிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னர்தான் எனக்கு நவீன நாடகம் அறிமுகம். ஆங்கில நாடகங்களைவிட தமிழ் நாடகங்கள்தான் எனக்குப் பிடித்தன. அப்போது தமிழ்நாடக அரங்கில் இருக்கும் பிரசன்னா ராமசாமி, அ. மங்கை, வெளி.ரங்கராஜன் போன்றோரின் பரிச்சயம் கிடைத்தது. இதுவரை ஆறு நாடகங்கள் நடித்திருக்கிறேன்.

அ. மங்கை இயக்கத்தில் கவிஞர் இன்குலாப் எழுதிய குறிஞ்சிப்பாட்டு, பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் பாரதியார் கவிதைகள்.... இதில் நானும் நடிகை ரோகிணியும் நடித்தோம். வெளி. ரங்கராஜன் இயக்கத்தில் கு.ப.ரா. எழுதிய அகலிகை, கு. அழகிரிசாமி எழுதிய "வஞ்சமகள்&ஹல்ர்ள்; முதலான நாடகங்களில் நடித்தேன். "வஞ்சமகள் நாடகத்தில் நான் சூர்ப்பனகையாக நடித்தேன். அதேபோல் "கூத்துப்பட்டறை ஜெயராமன் இயக்கத்தில், "மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து நிமிடங்கள் நாடகத்தில் நடித்தேன். ஜெயராமன் தற்போது ஷேக்ஸ்பியரின் "மேக்பத் பற்றி தமிழில் முதல்முறையாக நாடகம் செய்யவிருக்கிறார். தமிழ் நாடகங்களில் இது மிகப்பெரிய முயற்சி. எனக்குத் தெரிந்து ஷேக்ஸ்பியரை தமிழில் மிகபெரிய அளவில் கொண்டு வரும் முயற்சி இதுதான். ஷேக்ஸ்பியரின் "மேக்பத் நாடகத்தில் நான் லேடி மேக்பத்தாக நடிக்கிறேன். அதுதான் அந்த நாடகத்தின் பிரதான கதாபாத்திரம். வழக்கம்போல தமிழ் நாடகங்களுக்கு புரலவலர்கள் கிடைப்பதில்லை.

ஆங்கில நாடகங்களுக்கு மட்டும் புரவலர்கள் நிறைய இருக்கிறார்கள். புரவலர்கள் கிடைக்காததால் நாடக ஒத்திகை முடிந்தும், அரங்கேறாமல் இருக்கிறது.

என்னைப் பொருத்தவரைக்கும் அரங்கம் என்பது ஒரு பெண்ணுக்கான வெளி. அங்கு உடல் குறித்த ஒரு சிந்தனை கிடையாது. ஆண் உடல், பெண் உடல் என்ற பாகுபாடு அரங்கத்தில் கிடையாது. அது ஒரு மனித உடல்தான். வேறு எல்லா இடத்திலும் பெண்ணாகப்பட்டவள் இப்படி உட்காரவேண்டும், அப்படி உட்காரவேண்டும் என்பது இருக்கும். ஆனால் அரங்கத்தில் அப்படியல்ல. எல்லாமே மனித உடல்கள்தான். அது ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது.

கதாபாத்திரத்தின் வசனத்தை உச்சரிப்பது, உள்ளே நுழைவது, ஒத்திகை என்று ஒவ்வொன்றுமே நாடக நிகழ்வுகளுக்கு சமமானதுதான். அரங்கம் என்பதுதான் என்னுடைய இன்னொரு முகம். என்னுடைய இன்னொரு முகம் அப்படியாகத்தான் இருக்கவும் விரும்புகிறேன். ஷேக்ஸ்பியரின் அந்தக் காலத்து படைப்பில் சமகாலத்தன்மை இருக்கிறது. பொதுவாக நாடகத்திற்கு சமகாலத்தன்மை முக்கியம். லேடி மேக்பத் கதாபாத்திரத்தில் ஒத்திகை செய்தபோது எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. மாளாத குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி நிற்பாள் லேடி மேக்பத். எல்லாக் கொலைகளையும் செய்யச்சொல்லி கணவனைத் தூண்டிவிட்டு, கொலை செய்த கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பாள். "அரேபியாவின் அத்தனை வாசனாதி திரவியங்களாலும் என்னுடைய கைகளில் உள்ள ரத்தக் கறைகளைக் கழுவ முடியாது; என்பதுதான் அந்த நாடகத்தின் புகழ்மிகு வசனம். இந்த வசனத்தை நான் பேசி ஒத்திகை பார்த்தபோது, இலங்கையின் முள்ளிவாய்க்கால் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. லேடி மேக்பத்தின் வசனம் ராஜபக்சே வுக்கும் பொருந்தும். எந்த வாசனைத் திரவியங்களாலும் அவரது கைகளைக் கழுவமுடியாது.

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன், கதிரவன்

ரஜினி .... கமல்



ஈரம் இருக்கும் வரை...


அண்ணா வெறும் படமல்ல அறிவுப் பாடம்

அண்ணா படமல்ல

இன்று அறிஞர் அண்ணாவின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - தமிழ் நாடெங்கும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

அண்ணா - ஓர் அரசியல் கட்சியை தொடங்கினார், ஆட்சியைப் பிடித்தார்  - அவர் வெறும் அரசியல்வாதிதான் என்று எவரேனும் கணக்குப் போடுவார்களேயானால், அதைவிடத் தவறான கணிப்பு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அவர் வெறும் அரசியல்வாதி என்றால் அவர் ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையிலும் பிரகடனப்படுத்தியிருக்க மாட்டார்.

நாடாளுமன்றத்திற்கு சென்றபோதே தனது கன்னிப் பேச்சில், நான் திராவிடர் இனத்தைச் சேர்ந்தவன் (னுசயஎனையை ளுவடிஉம) என்று மிகப் பெருமை யோடு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் (ஏப்ரல் 1962).

தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதுகூட குறுகிய காலத்தில் அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே என்று செய்தி யாளர்கள் கேட்டபோதுகூட அதனை மறுத்துத் தனது திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தை - நீதிக் கட்சி வழிவந்த வரலாற்றை மறக்காமல் சுட்டிக் காட்டினார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோதுகூட தம் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று ரிப்பன் கட்டடத்திற்குள் நுழையும் முன், அந்த வளாகத்தில் சிலையாக நின்று கொண்டிருக்கும் வெள்ளுடைவேந்தர் பி. தியாகராசருக்கு உச்சி முதல் பாதம் வரை மாலை அணிவித்து நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் என்ற வரலாற்று உணர்வோடு ஆணை பிறப்பித்தவர்.


குறுகிய காலத்தில் ஆட்சியில் இருந்தாலும் யாரும் கை வைக்க முடியாத வரலாற்றுச் சாதனைகளை அசைக்க முடியாத கல்வெட்டாகப் பதித்தவர்.

(1) சுயமரியாதைத் திருமண சட்டம் (2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல் (3) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும் தான் இங்கு என்று சட்டம் செய்தவர்.

இந்த மூன்றில் கை வைக்க முடியாத காலம் தொட்டு, இந்த நாட்டை அண்ணாதுரைதான்  ஆண்டு கொண்டு இருக்கிறார் என்ற அர்த்தம் நிறைந்த சொற்களைப் பதித்தவர்.

தானும் சரி, தன்னைச் சேர்ந்த உறுப்பினர்களும் சரி, சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ கடவுள் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்காத நிலையை உறுதி செய்தவர்.

இன்னும் சொல்லப் போனால் அரசு அலுவலகங் களில் எந்தவித மத, கடவுள் சின்னங்கள், சிலைகள் இடம் பெறக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.

எவ்வளவு காலம் ஆண்டோம் என்பது முக்கிய மல்ல; ஆண்ட காலத்தில்  கொள்கை ரீதியாக என்ன சாதிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம் என்பதை முற்றும் உணர்ந்த கொள்கை மாமணியாக ஒலித்தவர் அண்ணா.

திராவிட என்ற பெயரைக் கட்சிகளில் இணைத் துக் கொண்ட எவரும் அண்ணா காட்டிய இந்த வழியில் எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதே அவர்களுக்கு அவர்களாகவே மதிப்பிட்டுக் கொள்வதும், சறுக்கிய இடங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.


குறிப்பாக அண்ணா பெயரைக் கட்சியின் முன்னொட்டாக வைத்துக் கொண்டுள்ள அ.இ. அ.தி.மு.க. முதலில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.

அண்ணாவின் கொள்கைவழி நடப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அண்ணா பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் கொள்கை என்றால் அடிப் படையானது பகுத்தறிவுக் கொள்கைதான்! அதில் எந்த அளவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் நம்பிக்கை கொண்டுள்ளார் என்பது அழுத்தமான - முன்னணியில் நிற்கக் கூடிய முதற் கேள்வியாகும்.

கட்சியின் அதிகாரப் பூர்வமான நமது எம்.ஜி.ஆர். இதழில் ஆன்மிகம் பரப்புவதுதான் அறிஞர் அண்ணா வின் கொள்கையா? இராசி பலன் இடம் பெறுவது தான் அண்ணாவின் கொள்கையை மதிக்கும் பாங்கா? இவற்றைவிட அண்ணா அவர்களை எப்படி அவமதிக்க முடியும்?

குற்றப் பத்திரிகை படிப்பதற்காக இதனைச் சுட்டிக் காட்டவில்லை - அண்ணாவை மதிப்பது என்பது அவர் கொள்கையை மதிப்பதுதானே தவிர அவமதிப்பதல்ல என்று இடித்துக் கூறுவதற்காகத் தான்; அண்ணா வெறும் படமல்ல அறிவுப் பாடமாகும்.

                         -----------------------"விடுதலை” தலையங்கம் 15-9-2012