திருக்குறள்

தமிழின உணர்வாளர்களே......... கமல் கடிதம்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் இன்று கமல் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கமல் ஈழத்தமிழுணர்வாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.






























ஹர்ஷினியின் கடைசி வார்த்தைகள்..........




"At the airport and blah =_= Only thing to look forward to is the rain'"

விமானத்தில் ஏறுமுன் கடைசியாக,தன்னுடைய அலைபேசிவாயிலாக ட்விட்டரில் ஹர்ஷினி பதிவு செய்த வார்த்தைகள் இதுதான்.மழையை எதிர்பார்த்து மங்களூருக்குப்போன பதினெட்டு வயதுப் பூ, நெருப்பில் கருகிப்போனது கண்ணீர்க்கதை.

ஹர்ஷினி பூஞ்சா...என் மகளுடைய பள்ளியில் சென்ற வருடம் படித்துமுடித்த பெண். சிலுசிலுவென்று அந்தப்பெண்ணின் பேச்சும்கூட மழைமாதிரிதான் இருக்கும் என்றுசொல்லி மறுகுகிறாள் என் மகள். அப்பா அம்மாவுடன் உறவினரின் கல்யாணத்துக்கு ஊர்வந்த குடும்பம் மொத்தமாக அழிந்துபோயிருக்கிறது.

படத்தில் பெற்றோருடன் நடுவிலிருப்பது ஹர்ஷினி...

இதேமாதிரி என் மகனின் பள்ளியில் படித்து, தற்போது ப்ளஸ் 2 முடித்து, நம் ஊரில் கம்ப்யூட்டர் படிப்புக்காக வந்த அக்ஷய் போலார், தன் அம்மாவுடனும் பாட்டியுடனும் அதே விமானத்தில் பயணித்து இறந்துபோயிருக்கிறான். எங்கே திரும்பினாலும் குழந்தைகள் பெரியவர்களென்று எல்லோரிடமும் இதே பேச்சுதான்.

ஆண்டு விடுமுறைக்குப்போக ஆவலாயிருந்தவர்கள் மனதிலெல்லாம் மருட்சி நிறைந்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்யப்போகிறோமோ என்று.

கடைசியாக நண்பரொருவர் சொன்ன வார்த்தைகள் மனதைத் தைத்தது.
கொத்துக்கொத்தாக இறந்துபோனவர்கள் பலர்,இங்கே இருந்தபோதும் உறவுகளுக்காக உழைத்தார்கள், இப்போது செத்தும் பல லட்சங்களாக அவர்களின் பாக்கெட்டை நிறைக்கப்போகிறார்கள். பணமிருக்கும்வரைக்கும் உறவுகளின் மனதில் அவர்களின் நினைவிருக்குமென்று.

படம் : நன்றி Gulf News. 

என்ன சார் இதெல்லாம்?





1.  அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.  பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.  வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.  ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

5. நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

6. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

7. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

8. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு  உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

9. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?

தமிழ் இலக்கியமும் சமூக உறவு முறையும்


முருகேசு ரவீந்திரன்


இலக்கியங்கள் அவை எத்தகைய காலத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தாலும் ஒரு சமூகத்தின் பண்பாட்டை பழக்கவழக்கங்களை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துவிடுகின்றன.
இன்றைய இளந் தலைமுறையினர் இலக்கியங்களைக் தேடிப் படிப்பதன் மூலம் சமூகம் பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால் தான் இலக்கியம் காலத்தின் கண்ணாடி என
வர்ணிக்கப்படுகிறது.

எதற்கும் அவசரம் எதிலும் அவசரம் என்பதாக இன்றைய வாழ்க்கை மாறிவிட்டது. அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட நகரங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையும் இல்லை. அவரவர் தேவைகளை நிறைவேற்றுவதற்கே நேரம் போதாத நிலையில், அடுத்தவரைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா?

தொண்ணூறுகளுக்கு பின் வடபகுதியை சேர்ந்த பலரும் கொழும்புக்கு வந்தனர். இப்படி வந்தவர்கள் பலருக்கு யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் உறவினர்கள் அதிகம். ஆனால் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று கதைப்பதற்கு பலருக்கும் நேரம் இருப்பதில்லை.
நகரச் சூழல் அவசரமானது என்பது உண்மை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அந்த வகையில் நேரத்தை ஒதுக்க நினைத்தால் ஒதுக்கலாம். ஆனால் அப்படி ஒதுக்க நினைப்பவர்கள் மிகக் குறைவு. நாம் உண்டு நம் குடும்பமுண்டு என இருப்பவர்களே அதிகம்.
அதனால் இன்றைய இளந் தலைமுறையினர் பலருக்கும் உறவுமுறைகள் பற்றி அதிகம் தெரியாது. இலக்கியங்கள் என்பன ஒரு சமூகத்தின் பண்பாட்டை பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு சமூகத்தின் மிக இன்றியமையாத அமைப்பாக உறவுமுறை விளங்குகிறது. உறவுமுறை பற்றி அதிகம் தெரியாத எழுத்தாளனால் அந்த சமூகம் சார்ந்த தரமான இலக்கியங்களை படைக்க முடியாது. இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்களும் தமிழர்களும் மொழியால் வேறுபட்டவர்கள். ஆனால் பண்பாடு பழக்க வழக்கம் என்பவற்றில் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். இதில் முக்கியமானது உறவுமுறை.

ஒரு இனத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவது உறவுமுறை. இதனை இனங்களை வேறுபடுத்துவதில் முக்கிய காரணியாக கொள்கின்றனர். சிங்களவர்களும் இலங்கை தமிழர்களும் உறவுமுறையில் ஒரே விதமான பழக்கங்களையே கடைப்பிடிக்கின்றனர். இது இந்த இரு இனங்களுக்கும் இடையில் காணப்படும் மிக நெருக்கமான அம்சமாக பண்பாட்டு ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

முக்கியமாக திருமண பந்தத்தை எடுத்துக்கொண்டால் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களைப் போன்று மச்சான், மச்சாள் போன்ற உறவுமுறை திருமணங்களை புரிகின்றனர். ஆனால் தாயின் தம்பியை மாமாவை திருமணம் முடிப்பதில்லை. இது சிங்களவர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை சுட்டி நிற்பதாக கருதமுடியும்.
உறவுநிலை இரத்த வழி அமைகின்ற குடும்ப வடிவில் தொடங்கி பின்னர் குடும்பங்களிடையே உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் தொடராக வளர்ந்து பல குடும்ப உறவுகளால் பின்னப்பட்டு, ஓர் இனக் குழு அமைப்பு முழுவதையும் உறவுமுறையாக மாற்றிவிடும் சமூக வளர்ச்சியை நாம் காணலாம்.

ஒரு சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சாதி வேறுபாடுகளையும் மதப் பிரிவுகளையும் உறவுமுறை பிரதிபலிக்கின்றது.

கிராமப்புறங்களில் வயதான பெண்களின் பெயர்களுடன் அம்மா எனும் அடைமொழியை சேர்த்து மரியாதையாக அழைப்பர். ஆனால் நகரப்புறங்களில் இவ்வாறான வழக்கத்தை காணமுடியாது. சான்றாக கிராமப்புறங்களில் தேவகி அம்மா என்பது தேவகி என்னும் பெயருடைய வயதான பெண்ணைக் குறிக்கும். ஆனால் தேவகி அம்மா என்பது தேவகி என்னும் பெண்ணின் அம்மாவைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். நகர்ப்புறங்களில் பெரும்பாலும் இத்தகைய பொருளிலேயே தேவகி அம்மா எனும் உறவுமுறைப் பெயர் குறிக்கப்படுகிறது.

பொதுவாக ஆடவன் தனது தாயை மட்டும் அம்மா என அழைப்பதில்லை. மனைவியையும் அம்மா என அழைக்கிறான். பிள்ளைகள் அம்மா என அழைப்பதாலும் கணவன் அம்மா என அழைக்கிறான். இதனை வேறு விதமாகவும் கருதமுடியும் தாய்க்குப் பின் தாரம் என்பார்கள். ஒரு ஆண் பிறந்து திருமணத்தில் இணையும் வரை தாயை சார்ந்து இருக்கிறான். திருமணத்துக்கு பின்னர் அங்கே தாய்க்கு தாயாக மனைவி அமைகின்றாள். மனைவி தாயாக, தாரமாக, தோழியாக பல வகிபாகங்களை தாங்குகின்றாள். ஒரு ஆண் பிறப்பு முதல் இறப்புவரை பெண்ணை சார்ந்து நிற்கின்றான். அதனால்தான் தமிழர்கள் பெண்ணை சக்தியாக போற்றுகின்றனர்.

மனைவி கணவனை அப்பா என அழைப்பதையும் பல குடும்பங்களில் காண முடியும். அப்பா என்பது ஆண்பால் சொல்லாக இருந்த போதும் நண்பிகளுக்கிடையேயான கலந்துரையாடலின் போதும் ஒருவரை மற்றவர் அப்பா என விழித்து உரையாடுவதும் உண்டு. அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்யும் நண்பிகள் இருவர் இவ்வாறு உரையாடுகின்றனர். ‘ஏன் அப்பா நீர் இண்டைக்கு சுணங்கி வந்தீர்’

‘சுகுணா நானும் இவரும் நேற்றைக்கு படம் பார்க்க போயிருந்தோம். சரியான சனமப்பா’
‘படம் பாத்துப் போட்டு விடிய விடிய நித்திரை கொண்டனீரே அப்பா.’

‘ஓம் சுகுணா, நல்ல படம் நீரும் போய் பாருமப்பா’

இந்த உரையாடலில் இருந்து அப்பா என்ற சொல் தந்தையை மாத்திரம் குறிக்கவில்லை.

தோழியை, கணவனை குறிக்கவும் அப்பா என்ற சொல் பயன்படுகிறது.
இந்திய வம்சாவளி மக்களிடையே கணவன் மனைவியை ‘புள்ள’ என்றழைப்பதைக் காணமுடியும். வசதி படைத்தவர்கள் ‘டார்லிங்’, ‘ஹனி’ என அழைக்கின்றனர். கணவனை மச்சான், அத்தான் என்றும் கூறுவர்.

இன்னும் ஒரு படிமேல் சென்று அன்பின் நிமித்தம் வாடா, போடா, என்னடா, செல்லமே என்றெல்லாம் அழைப்பதையும் இதனை வாசிக்கும் பலரும் கேட்டிருக்கலாம்.
அன்பினை பல வழிகளில் வெளிப்படுத்துகிறோம். பல மனைவிமார்கள் மட்டுமல்ல கணவன்மார்களும் தங்கள் மனைவி வாடா, போடா என செல்லமாக அழைப்பதை விரும்புகின்றனர்.

இந்திய வம்சாவளி மக்களிடையே கணவனை மனைவி, மாமா என அழைப்பதும் உண்டு. சமூகத்திற்கு ஏற்ப மக்களிடையே பெயரிட்டு அழைப்பதும் மாறுபட்டு காணப்படுகிறது.
மன்னி என அண்ணியையும், அத்திம்பேர் எனச் சகோதரியின் கணவனையும் அழைக்கின்ற வழக்கம் பிராமணர்களிடையே காணப்படுகிறது. நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் வீட்டுத் தலைவியை ஆச்சி எனவும் கோயம்புத்தூர் கவுண்டர்கள் அம்மணி எனவும் அழைக்கின்றனர்.

தமிழகத்தில் வாழும் தெலுங்குத் தமிழர்களாகிய நாயுடுக்களும் நாயக்கர்களும் நயினா, பாவா என்றும் உறவுமுறைப் பெயர்களையும் தங்களது தாய்மொழியாகிய தெலுங்கு மொழியின் எச்சமாக பயன்படுத்துகின்றனர். மேற்கூறிய சான்றுகள் சாதி வழி உறவுமுறைப் பெயர்கள் வேறுபடுவதை நமக்கு உணர்த்துகின்றன. முஸ்லிம் மக்களின் பாவா, வாப்பா என்றும் உறவுமுறை சொற்களுக்கு இணையாக இந்துக்கள் கணவன், அப்பா என்றும் உறவுப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.

யாழ்ப்பாண சமூகத்திலே முன்பு தந்தையை அப்பு என அழைத்தனர். தாயை ஆச்சி என அழைத்தனர். இன்றும் சில யாழ்ப்பாணத்து குடும்பங்களில் தந்தையை ஐயா என்றும், தாயை அம்மா என்றும் அழைத்தனர். பின் வந்த நாட்களில் அப்பா, அம்மா என அழைத்தனர். இப்போது நாகரிகம் கருதி சிலர் டாடி, மம்மி என அழைக்கின்றனர்.

யாழ்ப்பாண சமூகத்தில் கிராமப்புறங்களில் சித்தப்பா, சின்னம்மா போன்ற பெயர்கள் குஞ்சியப்பு, குஞ்சியாச்சி என அழைக்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் நாகரிகம் கருதி சித்தா,சித்தி என அழைக்கின்றனர். அதேபோன்று பெரியப்பா, பெரியம்மா உறவுகள் கிராமப்புறங்களில் பெரி-ஐயா, பெரியம்மா எனவும் பெரியப்பு, பெரியாச்சி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

உறவுமுறைப் பெயர்கள் சமூக அமைப்பு முறையினையும் பிரதிபலிக்கின்றன. பெண்களுக்கு வயதுக்கு வந்தபின்னர் சமூக மதிப்பு வழங்கப்படுவதை உறவுமுறைப் பெயர்கள் காட்டுகின்றன. தங்கையாக இருந்தாலும் தொட்டுப் பேசுவதையோ வாடி, போடி என அழைப்பதையோ ஆண்கள் தவிர்த்துவிடுகின்றனர்.

தந்தை வயதுக்கு வந்த பெண்ணை தங்கச்சி என்றும் பிள்ளை என்றும் அழைப்பதை காணமுடியும்.

கிறிஸ்தவ சமூக அமைப்பில் ஒருவருக்கு பெற்ற தாய் தந்தையர் போன்று மதந் தொடர்பாக ஞானத்தாய் ஞானத் தந்தை என இருவர் அமைகின்றனர். கிறிஸ்தவர்களிடையே தந்தையை பப்பா என அழைக்கும் முறையும் காணப்படுகிறது.

யாழ்ப்பாணச் சமூகத்திலே தகப்பனின் தாயை பேரப்பிள்ளைகள் அப்பாச்சி என அழைக்கும் வழக்கமும் காணப்படுகிறது. அவ்வாறே அம்மாவின் தாயை அம்மாச்சி எனவும் அழைக்கின்றனர். இன்னும் சில இடங்களில் ஆத்தை எனவும் அழைக்கின்றனர்.
உறவுமுறைப் பெயர்கள் அனைத்தும் பெரும்பாலும் இணையாக காணப்படுகின்றன. கணவன் – மனைவி, மகன் – மகள், தாத்தா - பாட்டி, எனப் பால்வேறுபாட்டு முறையாலும் அக்கா - தங்கை, அண்ணன் - தம்பி, சித்தப்பா - பெரியப்பா என வயது நிலை வேறுபாட்டாலும் இணையாக அமைந்துள்ளன. உறவுமுறை சொற்கள் அனைத்தும் விளக்க சொற்களாகவும் வகைப்பாட்டு சொற்களாகவும் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்துக்கும் பண்பாட்டுக்கும் வளம் சேர்ப்பதாக உறவுமுறைப் பெயர்கள் காணப்படுகின்றன. இவை தமிழர்களின் பண்பாட்டையும் தனித்துவத்தையும் எடுத்துக் காட்டுபவையாகவுள்ளன.


எழுதியவர்: முருகேசு ரவீந்திரன்
நன்றி: தினகரன் வாரமஞ்சரி, மே 23, 2010

நெகிழ வைத்த வழக்கு...

சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ வரதராஜன் எங்களிடையே பேசியபோது, தனது துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்துத் தீர்த்து வைத்த பல வழக்குகள் பற்றிச் சொன்னார். அவற்றிலேயே தனக்கு ஆத்ம திருப்தி அளித்த வழக்காக அவர் சொன்னது, சவூதி அரேபியாவிலிருந்து ஒருவர் போன் செய்து, “என் மாமனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, சார்! நானும் எப்படியெப்படியெல்லாமோ, எந்தெந்த வழிகளில் எல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னால் முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வழக்கு.

‘காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், கணவனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், வீட்டை விட்டு ஓடிப் போன மகனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று வழக்குகள் வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இதென்ன, மாமனாரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்கிறாரே இவர்! புதுசாக இருக்கிறதே’ என்று நினைத்தார் வரதராஜன். வழக்கத்துக்கு மாறான கோரிக்கையாக இருந்ததால், அந்த வழக்கில் ஒரு கூடுதல் ஆர்வமும் ஏற்பட்டது அவருக்கு.

சவூதி அரேபியாவிலிருந்து பேசியவர் ஒரு முஸ்லிம். அவரது மனைவியிடம் பேசினால், அவரின் அப்பா பற்றி ஏதாவது க்ளூ கிட்டும் என்று வரதராஜன் சொல்ல, அதன்படியே அந்தப் பெண்மணியும் வரதராஜனோடு தொலைபேசியில் பேசினார். அவரின் தந்தையைப் பற்றி விசாரித்தார் வரதராஜன்.

அந்தப் பெண்ணின் பெயர் நஸீமா. எட்டு வயதிலேயே தன் தந்தையை விட்டுப் பிரிந்துவிட்டிருந்தார் அந்தப் பெண். அம்மா நினைவு சுத்தமாக இல்லை. மனசில் பதிந்திருப்பது தந்தையின் நினைவு மட்டும்தான். அப்பா பெயர் இப்ராஹீம். அவரது முகம் லேசாக ஞாபகம் இருக்கிறது. அவரால் வாய் பேச முடியாது. காது கேட்கும். மற்ற அப்பாக்கள் தங்கள் குழந்தையைக் கையைப் பிடித்து பள்ளிக்கூடத்துக்கு நடத்தி அழைத்துச் செல்ல, இந்தப் பெண்ணின் அப்பா மட்டும் இவரைத் தன் தோள் மீது ஏற்றி உட்கார வைத்துச் சென்றிக்கிறார். இந்த ஞாபகம் அழுத்தமாக இருக்க, அதை வரதராஜனிடம் சொல்லும்போதே மேலே பேச்சு வராமல் விம்மியிருக்கிறார் நஸீமா.

நஸீமாவுக்குத் திருமணம் ஆகிக் கணவரோடு சவூதி சென்றதும், முதலில் ஒரு மகள் பிறந்தாள். அதற்கடுத்து இரண்டு வருடங்களில் இரண்டாவது மகள் பிறந்தாள். அவள் தன் தாத்தாவைப் போலவே வாய் பேச முடியாதவளாக இருந்தாள். ஆனால், அவள் பிறந்த நேரம் அவள் அப்பாவுக்கு அவரின் தொழிலில் அமோக வருமானம். அவர்களின் செல்ல மகளாக ஆனாள் அவள். அதே சமயம் நஸீமாவுக்குத் தன் அப்பா பற்றிய ஏக்கம் அதிகரிக்க, தன் கணவரை நச்சரிக்கத் தொடங்கினாள். இத்தனைக்கும் அவளின் அப்பா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதே அவளுக்குத் தெரியாது. இந்தச் சமயத்தில்தான் வரதராஜனைத் தொடர்பு கொண்டார் அவளின் கணவர்.

சரி, அப்பாவை எப்படிப் பிரிந்தார் அந்தப் பெண்?

வறுமையான குடும்பம். அப்பா இப்ராஹீம் ஒரு பீடிக் கம்பெனியில் பீடி சுத்தி, கிடைக்கும் சொற்பச் சம்பளத்தில்தான் தன் பெண்களை வளர்த்தார். அவருக்கு மூன்று பெண்கள். வறுமை அளவுக்கு அதிகமாகப் போகவே, தன் கடைசி மகளான நஸீமாவை ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் வேலைக்குச் சேர்க்க முடிவெடுத்தார் அப்பா. அப்போது அந்தப் பெண்ணுக்கு 8 வயது.

அவரே தன் பெண்ணை அழைத்து வந்து வேலைக்கு விடவில்லை. அந்த கான்ஸ்டபிளின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தியும், வேறு ஒரு தெரிந்த உள்ளூர்க்காரப் பெண்மணியுமாக இரண்டு பேர் இந்தப் பெண்ணை அழைத்து வந்து அந்த கான்ஸ்டபிள் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தக் கான்ஸ்டபிளின் மனைவியும் ஒரு லேடி கான்ஸ்டபிள்!

கணவன், மனைவி இருவரும் தங்களிடம் வேலைக்குச் சேர்ந்த இந்தப் பெண் குழந்தையை அத்தனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால், இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சித் தொடையில் சூடு வைத்திருக்கிறார்கள். கொடுமை தாங்காத இந்தக் குழந்தை ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப் போய், தெருமுனையில் இருந்த நடமாடும் இஸ்திரி வண்டிக்காரரிடம் விஷயத்தைச் சொல்லிக் கதறியிருக்கிறது.

“உங்க வீடு எங்கம்மா இருக்கு தாயி?” என்று அனுதாபத்துடன் கேட்டிருக்கிறார் அவர். “அண்ணா நகர்” என்று சொல்லியிருக்கிறது குழந்தை. அவர் உடனே ஒரு பஸ் பிடித்து, குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து சென்னை, அண்ணா நகரில் இறங்கி, “என்ன தெரு?” என்று விசாரித்திருக்கிறார். குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

வீட்டுக்கு வீடு பால் கவர் போடும் ஒரு பெண்மணியைப் பிடித்து, இந்தக் குழந்தையை அதன் வீட்டில் சேர்த்துவிடும்படி சொல்லி ஒப்படைத்துவிட்டு, இஸ்திரி வண்டிக்காரர் போய்விட்டார். பால்காரம்மா குழந்தையை எப்படி எப்படியோ விசாரித்தும், குழந்தைக்குத் தன் வீடு இருக்கும் தெரு எது என்று தெரியவில்லை.

அவளே நஸீமாவை தன் வீட்டில் கொஞ்ச நாள் வளர்த்தாள். அவள் குடும்பமும் ரொம்ப வறுமையான குடும்பம் என்பதால், தொடர்ந்து இந்தப் பெண்ணை வளர்க்க முடியாமல் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். அங்கேயும் இந்தப் பெண்ணுக்குச் சரியான கவனிப்பில்லை. அதன் பின்னர் இரண்டு மூன்று வருடங்கள் வெவ்வேறு வீட்டில் வேலை செய்து, எங்கேயும் சரிப்படாமல், கடைசியாக அந்தப் பெண் நஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தாள்.

அவர்கள் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நடத்தவில்லை. தங்கள் சொந்த மகள் போலவே பாசத்துடன் வளர்த்தார்கள். அவளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தார்கள். அவளும் அவர்களின் மகளாகவே வளர்ந்தாள். ஆனால், பிராமணப் பெண்ணாக அல்ல. அவளை அவளின் மத வழக்கப்படியே முஸ்லிம் பெண்ணாகவே வளர்த்தார்கள் அந்த பிராமணத் தம்பதி. பருவம் எய்தினாள் அந்தப் பெண். பதினெட்டு வயது அழகிய மங்கையாக வளர்ந்து நின்றாள். முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிந்து வளர்ந்தாள்.

அவளுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்தது. அவரின் தம்பி சவூதி அரேபியாவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்தார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இந்தப் பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். “என்னடா தம்பி, அது அய்யரு வூட்டுப் பொண்ணாயில்ல வளருது?” என்று அண்ணன் குடும்பம் ஆட்சேபம் தெரிவித்தாலும், அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் தம்பி. திருமணம் பேசினார்கள். தங்கள் சொந்த மகளைக் கட்டிக்கொடுப்பது போலவே சீர் செனத்திகள் நிறையச் செய்து, பன்னிரண்டரை சவரன் நகை போட்டு, முஸ்லிம் மத வழக்கப்படி, அந்தப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். 1997-ல் நடந்தது இந்தத் திருமணம்.

நஸீமா தன் கணவரிடம் கேட்டது ஒன்றுதான். “எங்க அப்பாவைக் கண்டுபிடிக்க எத்தனையோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன். முடியலை. நீங்களாவது கண்டுபிடிச்சுத் தருவீங்களா?” ‘கண்டிப்பாக’ என்று வாக்களித்தார் கணவர். அதன் பின்னர் நஸீமாவின் தந்தையைக் கண்டுபிடிக்க அவர் பல வருடங்களாக முயற்சி செய்தும் முடியாமல், சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றிக் கேள்விப்பட்டு, வரதராஜனைத் தொடர்பு கொண்டார்.

வரதராஜனிடம் நஸீமா, தான் இருந்தது அண்ணா நகர் என்று சொன்னாரே தவிர, அது சென்னை அண்ணா நகராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது வரதராஜனுக்கு. காரணம், “அங்கே நூறு நூத்தம்பது வீடுங்கதான் இருக்கும். குறுக்கே ஒரு நதி ஓடிட்டிருந்தது. தவிர, நெசவு வேலை செய்யறவங்க அதிகம் இருந்தாங்க” என்றெல்லாம் வர்ணித்தார் நஸீமா. சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை எனப் பல இடங்களில் அண்ணா நகர் உண்டு. நஸீமா சொன்ன அடையாளங்களை வைத்துப் பார்த்தால், அது காஞ்சிபுரம் அண்ணா நகராக இருக்க வாய்ப்புண்டு என்று தெரிந்தது.

உடனே, அங்கே கிளம்பிப் போய்ப் பார்த்தார் வரதராஜன். நஸீமா சொன்ன அடையாளங்களுடன் அங்கே ஒரு இடம் இருந்தது. குறுக்கே ஒரு ஆறும் ஓடிக் கொண்டு இருந்தது.

அங்கே உள்ளவர்களிடம் இப்ராஹீம் பற்றி விசாரித்துப் பார்த்தார். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், யாருக்கும் தெரியவில்லை. பின்னர் வரதராஜன் நஸீமாவைத் தொடர்பு கொண்டு, அவள் வேலைக்குச் சேர்ந்திருந்த அந்த கான்ஸ்டபிள் பெயர் தெரியுமா என்று கேட்டார். ‘ஷரீஃப்’ என்றார் நஸீமா.

அன்றைக்குக் கான்ஸ்டபிளாக இருந்த ஷரீஃப் இத்தனை வருடங்களில் சப்-இன்ஸ்பெக்டராகவோ, ஹெட்-கான்ஸ்டபிளாகவோ ஆகியிருக்கலாம் என்று நினைத்த வரதராஜன், ஷரீஃப் என்ற பெயரில் யாராவது காவல்துறையில் பணியாற்றுகிறார்களா என்று தன் விசாரணையைத் தொடங்கினார். அந்தப் பெயர் கொண்ட ரிடையர்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சென்னை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பின்புறத்தில் உள்ள ஒரு தெருவில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அங்கே விரைந்தார் வரதராஜன். தெருப் பெயர் சரியாகத் தெரியவில்லை. எனவே, அங்கே உள்ள மளிகைக்கடைகளில் எல்லாம் தன் விசாரணையைத் தொடங்கினார். ஒரு கடைக்காரர், “ஆமாம் சார்! ஷரீஃப் வீட்டுல மளிகைச் சாமானெல்லாம் நம்ம கடையிலதான் தொடர்ந்து வாங்குவாங்க” என்று அவரது முகவரியைத் தந்தார். ஷரீஃபின் மனைவியும் ஒரு கான்ஸ்டபிள்தானே என்று வரதராஜன் கேட்க, “ஆமாம்” என்று பதில் கிடைத்தது.

நேரே அந்த முகவரிக்குப் போனார் வரதராஜன். நேரடியாக அந்தப் பெண் நஸீமா பற்றிக் கேட்டால், அவர் வீணாக மறைக்கக்கூடும் என்பதால், அந்தப் பெண்ணின் தந்தைக்கு இன்ஷ்யூரன்ஸ் பணம் ஒன்று வந்திருப்பதாகவும், அதைச் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லி, இப்ராஹிமின் முகவரி பற்றி விசாரித்திருக்கிறார்.

“இல்லை சார்! அந்தப் பெண்ணின் அப்பா யாருன்னே எனக்குத் தெரியாது. என் மனைவியோட அக்காவும், கூட இன்னொரு பெண்ணுமாதான் நஸீமாவைக் கொண்டு வந்து என் வீட்டுல விட்டுட்டுப் போனாங்க” என்றார் ஷரீஃப். “உங்க மனைவியோட அக்கா விலாசம் கொடுங்க” என்று வரதராஜன் கேட்க, “அவங்க இறந்துட்டாங்க சார்” என்று சொன்னார் ஷரீஃப்.

மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியவில்லை வரதராஜனுக்கு. “சரி, அவங்களோட புருஷன், மகன்னு யாராவது இருந்தா அவங்க அட்ரஸ் கொடுங்க. நான் விசாரிச்சுக்கறேன்” என்று கேட்க, ஷரீஃப் தனது மனைவியின் அக்கா மகனது விலாசம் தந்திருக்கிறார். அந்த மகனுக்குச் சுமார் 45 வயதிருக்கும்.

அவரிடம் வரதராஜன் போய் விஷயங்களைச் சொல்லி விசாரித்ததும், அவர் மிகவும் நெகிழ்ந்துபோய்விட்டார். “சார், ஒரு இந்துவான நீங்க, எங்க மதத்துப் பெண்ணுக்கு அவங்க அப்பாவைத் தேடிக் கொடுக்குறதுல இவ்வளவு தீவிரமா இருக்கும்போது, நாங்க உதவ மாட்டோமா?” என்று சொல்லி, தான் சார்ந்திருந்த முஸ்லிம் அமைப்பின் உதவியோடு தீவிரமாக முனைந்து, இருபது வருடங்களுக்கு முன் தன் அம்மாவோடு சேர்ந்து போய் நஸீமாவை கான்ஸ்டபிள் ஷரீஃப் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்ட அந்தப் பெண்மணியைக் கண்டுபிடித்துவிட்டார். அந்தப் பெண்மணிக்கு இப்போது வயது 85.

விஷயத்தைச் சொன்னதும், “தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்” என்று விம்மி அழ ஆரம்பித்துவிட்டார் அந்தப் பெண்மணி. அவரிடம் நஸீமாவின் தந்தை இப்ராஹிம் பற்றிக் கேட்க, “தெரியலை. அவர் உயிரோட இருக்காரா, இல்லையான்னே தெரியாது எனக்கு. அவருக்கு மூணு பொண்ணுங்க. மூணாவது பொண்ணுதான் நஸீமா. இது பொறந்ததுமே அவங்க அம்மா இறந்துட்டாங்க. நஸீமாவை கான்ஸ்டபிள் வீட்டுல வேலைக்குச் சேர்த்ததுக்குப் பிறகு, கொஞ்ச நாள்தான் அவர் காஞ்சிபுரத்துல இருந்தாரு. அப்புறம் எங்கே போனாருன்னே தெரியலை. அவரோட தம்பி ஒருத்தர் ஆற்காட்டில் இருக்காரு. அவரைக் கேட்டா விஷயம் தெரியும்” என்று அவரது பெயரையும், இடத்தையும் குத்துமதிப்பாக அந்த அம்மா சொல்ல, நேரே ஆற்காட்டுக்குப் போனார் வரதராஜன். ஆற்காட்டையே அலசி, அவரைக் கண்டுபிடித்துவிட்டார். அது ஒரு குடிசை வீடு.

“ஆமாம் சார்! என்னோடதான் அண்ணன் இப்ராஹிம் இருக்காரு” என்று சொன்னார் அந்தத் தம்பி.

இப்ராஹீம் மிகவும் வறுமைக் கோலத்தோடு, கிழிசல் லுங்கி மட்டும் அணிந்து, (மேலே சட்டையோ, துண்டோகூட இல்லாமல்) ஒரு ஓட்டலில் டேபிள் கிளீனராக வேலை செய்து கொண்டிருந்தார். மாதம் 20 ரூபாய் சம்பளம். சாப்பாடெல்லாம் அந்த ஓட்டலிலேயே முடித்துக் கொள்வார். இருபது ரூபாயைத் தம்பியிடம் கொடுத்தால்தான், அந்தக் குடிசை வீட்டின் வாசலில் இருந்த திண்ணையில் அவரைப் படுக்க அனுமதிப்பார் தம்பி.

இப்ராஹீமைக் கண்டுபிடித்ததும், உடனடியாக ‘கண்டேன் சீதையை’ பாணியில், அவரது மகள் நஸீமாவுக்கு போன் போட்டு, “கண்டுபிடித்துவிட்டேன் உங்கள் தந்தையை” என்று சொல்லியிருக்கிறார் வரதராஜன். அந்தப் பக்கத்திலிருந்து மறுமொழி ஏதும் இல்லை. “ஹலோ... ஹலோ...” என்று இவர் குரல் கொடுக்க, விம்மி அழுகின்ற சத்தம் மட்டும் சிறிது நேரத்துக்குக் கேட்டது. பிறகு சமாதானமாகி, “நான் எங்கப்பா கிட்ட பேசணுமே?” என்று கேட்டிருக்கிறார் நஸீமா. “அவர் வாய் பேச முடியாதவராச்சேம்மா... எப்படி...” என்று வரதராஜன் தயங்க, “இல்லை. நீங்க ஏற்பாடு பண்ணுங்க. நான் எங்கப்பாவோட பேசணும். நான் பேசுறதை அவர் கேப்பாரில்லே?” என்றிருக்கிறார் நஸீமா.

இப்ராஹீமுக்கு ஒருவழியாக, அவரின் கடைசி மகள் சவூதியில் நல்ல நிலைமையில் இருப்பதைச் சொல்லிப் புரிய வைத்து, இருவரையும் தொலைபேசியில் உரையாட வைத்தார் வரதராஜன். “அப்பா... அப்பா...” என்று நஸீமா கதறியழ, இங்கே இவர் புரியாத குழறலில் ஏதோ சொல்லிக் கதற, இந்தக் காட்சியைச் சுற்றி நின்று கவனித்துக்கொண்டு இருந்த முப்பது நாற்பது முஸ்லிம் அன்பர்களும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்.

இப்ராஹீமுக்கு உடனடியாக நல்ல லுங்கி, பனியன்கள் வாங்கித் தந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தந்தையையும் மகளையும் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்த்திருக்கிறார் வரதராஜன். இப்ராஹீமின் முதல் மகளுக்குத் திருமணமாகி வேறு ஒரு ஊரில் இருந்தார். இரண்டாவது மகள் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தார்.

நஸீமாவின் கணவர் அந்தப் பெண்ணுக்குத் தன் செலவில் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். தன் மாமனாரின் குடும்பத்தினருக்கு வேண்டிய பொருளுதவிகளைச் செய்தார். இப்ராஹீமைத் தங்களோடு சவூதி அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தார் அவர்.
ஆனால், இங்கே ஒரு வருத்தமான திருப்பம் நிகழ்ந்தது. அப்பா-மகள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த நிகழ்ச்சியைப் பக்கம் பக்கமாக விவரித்து எழுதிய பத்திரிகைகள், இப்ராஹிமின் வறுமையான தோற்றத்தைப் படம் பிடித்துப் போட்டு, அவர் இந்த ஓட்டலில்தான் வேலை செய்தார், இந்தத் திண்ணையில்தான் படுத்துக் கொள்வார் என்று அவரின் பரிதாபமான நிலையைப் படங்களாகப் பிரசுரித்திருந்தன. இதில் முகம் சுளித்த நஸீமாவின் மாமனார் குடும்பம், இவரை அழைத்து வந்து தங்களோடு வைத்துக் கொண்டால் தங்களின் அந்தஸ்துக்கு இழுக்கு என்று எதிர்ப்பு தெரிவிக்க, நஸீமாவின் கணவரும் அவர்களின் எதிர்ப்பை மீறி எதுவும் செய்ய இயலாதவரானார்.

நஸீமா சவூதியிலிருந்து கிளம்பி, தன் இரு பெண் குழந்தைகளோடு சென்னை வந்துவிட்டார். இங்கே சைதாப்பேட்டையில் நல்லதொரு வீட்டில் நஸீமா தன் அப்பா மற்றும் தன் இரு பெண் குழந்தைகளோடு இன்றைக்கும் வசித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் கணவர் மட்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே வந்து இவர்களோடு சில நாட்கள் இருந்துவிட்டுப் போகிறார். இந்தக் குடும்பத்துக்காக நஸீமா பெயரில் அவர் நிறைய ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்திருப்பதால், பணப் பிரச்னை ஏதுமில்லை.

இப்போது இப்ராஹீம், அந்தக் காலத்தில் தன் கடைசி மகள் நஸீமாவை எப்படித் தோளில் தூக்கிக்கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டாரோ, அதுபோல, இன்றைக்கு அவர் தன் பேத்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு சந்தோஷமாகப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வருகிறார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில், தான் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும், மிகப் பெரிய மன நிறைவையும் சந்தோஷத்தையும் இதன் மூலம் சம்பாதித்திருப்பதாகச் சொல்லி நெகிழ்கிறார் திரு.வரதராஜன்.

Posted by ரவிபிரகாஷ் on Saturday, May 01, 2010
நன்றி - உங்கள் ரசிகன்.