திருக்குறள்

மத்திய பட்ஜெட் 2010-11... முக்கிய அம்சங்கள்!

2010-11-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.


அதன் முக்கிய அம்சங்களாவன:

* ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மேம்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்

* பட்ஜெட்டில் ரூ.11,08,749 கோடி செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.6 சதவீதம் கூடுதலாகும்.

* திட்டச் செலவுகள் ரூ.3,73,092 கோடியாக, திட்டமில்லாச் செலவுகள் ரூ.7,35,657 கோடியாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டச் செலவுகள் 15 சதவீதமும், திட்டமில்லாச் செலவுகளுக்கான ஒதுக்கீடு 6 சதவீதமும் உயர்ந்துள்ளது.

* நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக இருக்கும். இது ரூபாய் மதிப்பில் ரூ.3,81,408 கோடியாக இருக்கும்.

* 2011-12-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும், 2012-13-ல் 4.1 சதவீதமாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* நிகர சந்தைக்கடன் ரூ.3,45,010 கோடியாக இருக்கும்.

* நிகர வரி வருவாய் ரூ.7,46,651 கோடியாகவும், வரியில்லா வருவாய் ரூ.1,48,118 கோடியாகவும் இருக்கும்.

* பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்டப்படும்.

* பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.16,500 கோடி அளிக்கப்படும்.

* டிசம்பர் 2009 வரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

* வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நான்கு அம்ச யுக்தி கையாளப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, சேதத்தை குறைப்பது, கடன் ஆதரவு மற்றும் உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு முக்கியத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.

* வேளாண் கடனுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியிலிருந்து ரூ.3,75,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,73,552 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 46 சதவீதமாகும். சாலை கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்திய அடிப்படை கட்டுமான நிதி நிறுவனம் மார்ச் 2011-ல் ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும்.

* மின்துறைக்கான ஒதுக்கீடு இரண்டு மடங்கிற்கு அதிகமாக உயர்த்தப்பட்டு ரூ.5130 கோடியாக உள்ளது.

* அடிப்படை கட்டுமானத் துறைக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன

* தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை கண்டறியும் ஆய்வுக்கு உதவ தேசிய தூய்மை எரிசக்தி நிதியம் அமைக்கப்படும்.

* சமூக மேம்பாட்டிற்கான செலவினம் ரூ.1,37,674 கோடியாகும். இது ஒட்டுமொத்த திட்டச் செலவில் 37 சதவீதமாக உள்ளது.

* கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.66,100 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.40,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.48 ஆயிரம் கோடி

* பின் தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி ரூ.7300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* குடிசைகளில் வாழ்வோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான ராஜீவ் வீட்டு வசதி திட்டத்திற்கான ஒதுக்கீடு 700 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1270 கோடியாக உள்ளது.

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய சமூக பாதுகாப்பு நிதி ரூ.1000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது.

* ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்

* சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 80 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.4500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

* சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.2600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஒட்டுமொத்த பொது கடன் நிலை மற்றும் அதனை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிக்கை ஆறு மாதத்தில் வெளியிடப்படும்

* அன்னிய நேரடி முதலீடுகளை எளிமைப்படுத்தும் வகையில் முதல் முறையாக உரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மையப்படுத்தப்படும்.

* 2008-09-ல் எண்ணெய் மற்றும் உர பத்திரங்களுடன் 7.8 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2009-10-ம் ஆண்டில் 6.9 சதவீதமாக உள்ளது.

* நிதித்துறை சட்டங்கள் மாற்றியமைக்கப்படும். நிதித்துறை சட்ட சீர்திருத்தங்கள் ஆணையம் அமைக்கப்படும்.

* பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு ரூ. 1,900 கோடி நிதி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

* பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு ரு.1,47,344 கோடியாக அதிகரிப்பு.

* உரிய காலத்திற்குள் நீதி வழங்குவதற்காக தேசிய நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இயக்கம் அமைப்பு.

* வருமான வரி முறை:

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை. இதனால், ரூ.1.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

> ரூ.1.6 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - 10 சதவீத வருமான வரி (இதுவரை 1.6 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மட்டுமே 10 சதவீத வருமான வரி இருந்தது. இப்போது, ரூ.5 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.)

> ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 20 சதவீத வருமான வரி (இதுவரை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 20 சதவீதமாக இருந்தது. ரூ.8 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

> ரூ.8 லட்சம் மற்றும் அதற்கு மேல் - 30 சதவீத வருமான வரி (இதுவரை ரூ.5 லட்சத்துக்கு மேலாக வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வருமான வரி இருந்தது.)

> மேலும், உள் கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ.20 ஆயிரம் கூடுதலாகக் குறைப்பு.

இந்தப் புதிய தனிநபர் வருமான வரி விதிப்பின் மூலமாக, வருமான வரி செலுத்துவோரில் 60 சதவீதத்தினர் பயனடைவர் என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

* உள்நாட்டு நிறுவனங்களுக்கு உபரி வரி 10 சதத்திலிருந்து 7.5 சதமாகக் குறைப்பு.

* குறைந்தபட்ச மாற்றுவரி 15லிருந்து 18 விழுக்காடாக அதிகரிப்பு.

* சிறிய தொழில்களுக்கு உத்தேச வரிக்கான டர்ன்ஓவர் வரையறை ரூ.60 லட்சமாக அதிகரிப்பு.

* தொழில்களுக்கு ரூ.60 லட்சம், பிரொஃபஷன் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமாக தணிக்கைக்கான டர்ன்ஓவர் வரையறை நிர்ணயிப்பு.

* நேரடி வரி விதிப்பு திட்டம் வருவாயில் ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். ஆனால் மறைமுக வரி விதிப்பு மூலம் ரூ.46,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

* சேவை வரி விதிப்பு திட்டம் மூலம் நிகர வருவாயில் ரூ.3,000 கோடி லாபம்.

* செய்திகளை ஆன்லைனில் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.

* தனி நபர் வரி செலுத்துபவர்களுக்கான சரல் 2 தயார்.

* சேவை வரி 10 விழுக்காடாகத் தொடரும்.

* சில குறிப்பிட்ட புதிய சேவைகளுக்கு சேவை வரி விதிப்பு.

* மைக்ரோ வேவ்வன், இறக்குமதி சரக்குகள், மொபைல் தொலைபேசிகள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், விளையாட்டு பலூன்கள், மிளகு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் வடிகட்டி ஆகியவற்றின் விலை குறைப்பு.

* பொழுதுபோக்கு துறைக்கு சுங்கத் தீர்வில் சலுகை.

* இந்திய ரூபாய்க்கு முத்திரை.

* சுத்தமான சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறப்பு சலுகை தீர்வை. ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.50 என்ற விகிதத்தில் எரிபொருள் தீர்வை.

* மருத்துவ கருவிகள் இறக்குமதிக்கு ஒரே மாதிரியான அடிப்படை தீர்வை - 5 விழுக்காடு

* எலும்பு சிகிச்சையில் பயன்படும் செயற்கை மூட்டு, தட்டுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.

* பெட்ரோல், டீசலுக்கான கலால் தீர்வை லிட்டருக்கு ஒரு ரூபாய்.

* வேளாண்மை அது சார்ந்த துறைகளில் பெருமளவு வரிச் சலுகை.

* ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்களுக்கு கலால் தீர்வையிலிருந்து முழு விலக்கு.

* செல்போன்கள், மருத்துவ உபகரணங்கள், செட்டாப் பாக்ஸ்கள், சி.டி., பொம்மைகள், மற்றும் புத்தகங்கள் மீதான வரி குறைப்பு.

* குளிர்ப்பதன நிறுவனங்களை அமைக்க இறக்குமதி திட்டங்களுக்கு சலுகை.

* சிகரெட், கார்கள், சிமெண்ட், எரிபொருட்கள், ஏர் கண்டீஷன், டி.வி.க்கள், இரும்பு, தங்கம், வெள்ளி, விலை மதிப்புள்ள கற்கள், மதுபான வகைகள் மீதான சுங்க வரி உயர்வு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற