திருக்குறள்

கடத்தல் ஏலியன்ஸ் கமிங்!

வேற்றுக் கிரகத்து மனிதர்கள்தான் சென்ற நூற்றாண்டில் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் தூக்கம் கெடுத்தவர்கள். UFO (Unidentified Flying Objects) எனப்படும் பறக்கும் தட்டுக்கள்தான் பல வருடங்களாக உலக மக்களை ஆச்சர்யப்படுத்தி அச்சப்படுத்துகிறது. சங்குச் சக்கரம் மாதிரி தலைக்கு மேலே கிறுகிறுவெனச் சுற்றி, பின்னர் விஷ்க்கென வேகமெடுத்து மறையும் பல பறக்கும் தட் டுக்கள் இன்று வரை பீதி கொடுத்து பேதி கிளப்புகிறது. ஏலியன்கள் (வேற்றுக் கிரக வாசிகள்) பூமிக்கு வருவதே மனிதர்களின் ஐ.க்யூ லெவலைக் கண்டுபிடிக்கத்தான் என்பது அமெரிக்க மக்களின் நம்பிக்கை. 1961-ம் வருடம் பார்னே மற்றும் பெட்டி ஹில் தம்பதியர் விநோதமான உருவம்உடைய ஆட்களால் கடத்தப்பட்டார்கள். அந்த உருவங்கள் தங்கள் உடலில் ஏதோ ஆராய்ச்சி செய்தன என்பதைத் தாண்டி அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. அதற்கடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்தவர்கள் திடீரெனக் காணாமல் போக ஆரம்பித்தார்கள். இரண்டு நாள் கழித்து மந்திரித்த கோழி மாதிரி திரும்பி வந்தார்கள். கர்ப்பிணிப் பெண் ஒருவர் காணாமல் போய் குழந்தை இல்லாமல் திரும்பி வந்த கதையும் நடந்தது. ஊரடங்கு உத்தரவு போட்டது போல ஊரே வீட்டுக்குள் அடைந்துகிடந்தது. 'நாங்கள் பறக் கும் தட்டைப் பார்த்தோம். எங்களை ஏலியன்கள் கடத்திச் சென்றார்கள்' என்று பலர் மீடியாவை நோக்கிப் படையெடுத்தார் கள். அன்றில் இருந்து இன்று வரை டியூப் லைட் மாதிரி, கவிழ்க்கப்பட்ட பக்கெட் மாதிரி விநோத உருவங்கள் பறந்ததைப் பலர் படம் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கமும் முடிந்தவரை என்னென்னவோ ஆராய்ச்சிகள் செய்து பார்த்துச் சலிப்படைந்துவிட்டது. உலகின் வெவ்வேறு மொழிகளில் 'நாங்கள் உங்கள் நண்பர்கள்' என்பதை ரெக்கார்ட் செய்து சேட்டிலைட் மூலமாக விண்வெளியில் ஒலிபரப்பு செய்தார்கள் என்றுகூடச் செய்தி வதந்தி. எத்தனையோ பேர் பார்த்திருந்தாலும் இன்று வரை பறக்கும் தட்டின் ஒரு பகுதியோ, அதில் இருக்கும் ஓர் உயிரினமோ பூமியில் சிக்கியது இல்லை. பறக்கும் தட்டு என்பது 'அமெரிக்க ராணுவம் உருவாக்க முயற்சித்து, தோற்றுப்போன புதுவகைத் தாக்குதல் கருவி' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கிறதோ, இல்லையோ... ஹாலிவுட் டைரக்டர்களின் உதவியால் ஏலியன்கள் பூமியை நோக்கி வருடா வருடம் படை எடுத்துக்கொண்டே இருக்கின்றன!

- - கார்த்திகா குமாரி
மூலம் - ஆனந்தவிகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற