திருக்குறள்

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமானது?

இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று.


எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது.

அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர்.

1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்காட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன.

ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர்.

இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாக வரலாறு கூறுகிறது.

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள்.

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை எல்லோரும் கேலி செய்தனராம். ‘நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார்’ என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

நவீன காலத்தில் பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகளும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி ‘உட்டாலக்கடி’ செய்திகளை வெளியிடுவதுண்டு.

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்றும், மீனாவுக்கும் சடகோபன் ரமேஷுக்கும் காதல் திருமணம் என்றும் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். குஷ்பு கோடி ரூபாய் நஷ்டம் கேட்டு வழக்குப் போட்டதெல்லாம் நினைவிருக்கலாம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.

‘மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்’ என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை ‘சும்மா தமாசு’ என்றது நாசா.

ஆனால் சில நேரங்களில் ஏப்ரல் 1 அன்று காமெடி என்ற பெயரில் சிலர் செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத் தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இதே ஏப்ரல் 1 தான் என்பதை மறக்கக்கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கமாக ஏப்ரல் 1 அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் ஏப்ரல் 1 முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

1935 ஏப்ரல் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்டது, 2004 -ல் கூகுளின் மெயில் சேவை துவங்கப்பட்டது என ஏகப்பட்ட நல்ல விஷயங்களின் துவக்கம் ஏப்ரல் 1 தான் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொன்று வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் நாள் இந்த ஏப்ரல் 1-தான். யோசித்துப் பார்த்தால், முட்டாள்கள் தினத்தன்றுதான் பல புத்திசாலித்தனமான நிகழ்வுகளை சரித்திரம் கண்டுள்ளது.

ஆக, இதை ஏன் முட்டாள்கள் தினமாகப் பார்க்க வேண்டும்… புத்திசாலிகள் விழிப்போடு இருக்க வேண்டிய நாளாகவும் பார்க்கலாம்!

- நன்றி
என் வழி.காம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற