திருக்குறள்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா. பாலசந்தர்...

பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் என மூத்த தலைமுறை இயக்குநர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். புதிய தலைமுறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் எனத் திரையுலகத் திருவிழாவாக கொண்டாடிக்கொண்டு இருந்தது திரையுலகம்!
'நவரச நாயகன்' கார்த்திக் மேடை ஏறியதும் ராதாவையும் மேடைக்கு அழைத்தார்கள். "முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு தமிழ் தெரியாது. மத்தவங்க பேசுறதைக் கவனிப்பேன். அப்பவே, கார்த்திக் பேசுற தமிழ் வித்தியாசமா இருக்கும். 'ஓ... ரெண்டு தமிழ் கத்துக்கணும்போல'ன்னு நினைச்சேன்!" என்று கார்த்திக்கைக் கலாய்த்தார் ராதா. " 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் எனக்கு பாரதிராஜா கொடுத்த முதல் வசனம்... 'ஏன் லேட்டு?' அதுக்கு ராதா 'கொஞ்சம் லேட் ஆகிருச்சு'ன்னு சொல்வாங்க. முதல் டயலாக்கை மறக்கக் கூடாதுல்ல... அப்புறம் நான் எல்லாப் பட ஷூட்டிங்குக்கும் லேட்டாப் போக ஆரம்பிச்சேன். 'ஏன் லேட்டு?'னு கேட்டா, 'கொஞ்சம் லேட் ஆகிருச்சு'ன்னு பதில் சொல்ல ஆரம்பிச்சேன். ஆக, நான் லேட்டா வர ஆரம் பிச்சதுக்குக் காரணம் இயக்குநர்கள்தான்!" என்று கார்த்திக் சொல்ல, ரசித்துச் சிரித்தார்கள் இயக்குநர்கள்!
சத்யராஜோடு மேடையேறினார் குஷ்பு. "என்கூட அதிக தடவை ஜோடியா நடிச்சவங்ககுஷ்பு. அதற்காக நான் இயக்குநர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்!" என்று சத்யராஜ் தன் டிரேட் மார்க் லொள்ளு காட்ட, அடக்க முடியாமல் சிரித்தார் குஷ்பு. "நான் இயக்குநர்கள் மேல் நிறைய மரியாதை வெச்சிருக்கேன். அதுக்குச் சின்ன உதாரணம், நான் ஒரு இயக்குநரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!" என்று குஷ்பு சொல்ல, சுந்தர்.சி முகத்தில் நவரசப் பரவசம்!
கணவர் செல்வமணியோடு மேடை ஏறினார் ரோஜா. செல்வமணியிடம் காதல்பற்றி தொகுப்பாளர் கேட்க, "நானும் ரோஜாவும் 12 வருடங்கள் காதலிச்சோம். ஆனா, திருமணம் முடிஞ்ச மூணாவது நாளே சண்டை. ஹனிமூனுக்குப் போன 40 நாட்களும் தினம் தினம் சண்டை தான். என் காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துருச்சோனு பயந்து, நண்பர் வி.சேகரிடம் பிரச்னையைச் சொன்னேன். 'மனைவியிடம் ஜெயிச்சா, வாழ்க்கையில் தோத்துடுவோம். மனைவியிடம் தோத்தா, வாழ்க்கையில் ஜெயிச்சுடுவோம். நீ உன் மனைவியிடம் தோத்துப்போயிடு!'னு சொன்னார். அன்னிக்கு இருந்து எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!' என்று செல்வமணி சொல்ல, தலைக்கு மேல் கைகளைத் தூக்கித் தட்டினார் ரஜினி. அப்போது அவருடைய கைகளைப் பிடித்து, தலை குனிந்து லதா ரஜினிகாந்த் சிரித்தது அழகு!
'ரத்தக் கண்ணீர்' நாடகத்தின் ரீ-மிக்ஸில் நடித்தார் ராதாரவி. 'மக்கள் வளர்ச்சியை நினைக்கிறவன் கட்சி ஆரம்பிக்கணும்னு அவசியம் இல்லை!' என்று ராதாரவி சொல்ல, ரஜினி, விஜய் இருவரின் முகத்திலும் கலவையான உணர்ச்சிகள். 'இவர் ஏன் கட்சி ஆரம்பிக் கலைன்னு யோசிச்சேன். கொடிக்குக் கலரே இல்லை. ஜெமினி லேப்பில்கூட கலர் இல்லையாம். இவர் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனா, மறந்துட்டாரு!' என்று ராதாரவி நேரடியாகவே கோடி காட்ட, நெற்றியில் கைவைத்து அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் ரஜினி. 'நான் கட்சி ஆரம்பிக்கப்போறேன். கைச் சின்னம்!' என்று ராதாரவி சொல்ல, 'ஏற்கெனவே ஒரு கட்சி அந்த சின்னத்தை வெச்சிருக்கே!' என்றார் ஒருவர். 'நம்ம கைதான் வேற மாதிரி இருக்குதே!' என்று 'ரத்தக் கண்ணீர்' எம்.ஆர்.ராதாபோல கை விரல்களை மடக்கிக் காட்ட, ரஜினி முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு!

தமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் பெருமை சேர்த்ததற்காக மணிரத்னம், அகத்தியன், பாலா மூவருக்கும் தங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பாலாவுக்கான அடையாள அட்டையை ரஜினியும் மணிரத்னமும் வழங்க முன்வர, "தப்பா எடுத்துக்காதீங்க... இதை என் குருநாதர் பாலுமகேந்திரா கையால் வாங்க ஆசைப்படுறேன்!" என்று மைக்கில் அறிவித்தார் பாலா. மகிழ்ச்சி பொங்க பாலுமகேந்திரா மேடை ஏறி பாலாவுக்கு அடையாள அட்டை வழங்கினார்!
பாலசந்தர் கேள்வி கேட்க, ரஜினி பதில் சொல்லும் நிகழ்ச்சி. "உனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னா, 'நோ கமென்ட்ஸ்'னு சொல்லலாம்!" என்றார் பாலசந்தர். உடனே ரஜினி கையெடுத்துக் கும்பிட, "எவ்வளவு சந்தோஷம் பாருங்க!" என்று வாய்விட்டுச் சிரித்தார் கே.பி.
"ரஜினியான நீ, திரும்ப சிவாஜி ராவ் ஆக முடியுமா?"
"நான் சிவாஜி ராவா இப்பவும் இருக்கிறதாலதான் ரஜினிகாந்தா இருக்க முடியுது. இந்தப் பேர், புகழ் எதுவுமே சிவாஜி ராவைப் பாதிக்கவே இல்லை!"
"நீ எல்லா சரவண பவனையும் விலைக்கு வாங்கலாம். ஆனா, அங்கே போய் உன்னால் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டார் ஆக நீ கொடுத்த விலை என்ன?"
"என் நிம்மதி, சந்தோஷத்தைப் பறி கொடுத்திருக்கேன். ஒரு சாதாரண குடிமகனா என்னால வெளியில நடமாட முடியலை. ஒரு சூழ்நிலைக் கைதி மாதிரி இருக்கேன்!"
"உன் சுயசரிதையைப் படிக்க தமிழ்நாடே ஆவலா இருக்கு. சுயசரிதை எழுதுவியா?"
"சுயசரிதைன்னா உண்மை மட்டும் தான் எழுதணும். அப்படி உண்மையா எழுதலைன்னா அது சுயசரிதையே இல்லை. மகாத்மா காந்தி தன் சுயசரிதை யில் தைரியமா நிறைய உண்மைகள் சொல்லி இருந்தார். அந்தத் தைரியம் எனக்கு வந்தா... எழுதுவேன்!"
"இந்தியாவின் நம்பர் ஒன் நடிகன் அந்தஸ்துக்கு வந்தாச்சு. அந்த இடத்தைக் காப்பாத்தணும்னு பயமா இருக்குதா?"
"(கையெடுத்துக் கும்பிடுகிறார்) இந்த இடத்தை நானே எதிர்பார்க்கலை. இது 'ரோபோ'ங்கிற ஒரு படத்தில் கிடைத்த இடம். என்ன பண்ணப்போறோம்னு பயம் ஜாஸ்தியா இருக்கு!"
"இந்த 30 வருஷத்தில் ஏதாவது படங்கள் பார்த்துட்டு, 'இந்தப் படத்தை நாம பண்ணி இருக்கலாமே'ன்னு நினைச்சது உண்டா?"
"ஒண்ணு, ரெண்டு படங்கள் பார்த்துட்டு நினைச்சிருக்கேன். அந்தப் படங்களோட பேர் சொல்ல விரும்பலை!"
" 'மொகல் இ ஆஸம்', 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' போன்ற படங்கள் இப்பவும் பேசப்படுது. 50 வருஷங்கள் கழிச்சு உன்னோட எந்தப் படங்கள் பேசப்படும்?"
" 'ஸ்ரீராகவேந்திரா', 'பாட்ஷா', 'எந்திரன்'!"
('என் படங்களைச் சொல்ல மாட்டேங்குற பார்த்தியா?' என்று பாலசந்தர் சொல்ல, அவருக்குக் கை கொடுத்துச் சிரிக்கிறார் ரஜினி)
"ரஜினிகாந்த் என்கிற நடிகன்கிட்டே ஆயிரம் திறமைகள் இருக்கு. நீ ஏன், அமிதாப் மாதிரி கேரக்டர் ரோல் பண்ணக் கூடாது? 'சீனி கம்' மாதிரி ஒரு படத்தில் நீ நடிச்சுப் பார்க்கணும்னு ஆசையா இருக்குப்பா!"
"ஆர்ட்டிஸ்ட் ஆசை ஜாஸ்தி கிடையாது. பெரிய கமர்ஷியல் படங்கள் பண்ணத்தான் எனக்கு விருப்பம்!"
"நீ இன்னும் தேசிய விருது வாங்கலையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு. உனக்கு இல்லையா?"
"அது டைரக்டர்ஸ் கையில்தான் இருக்கு!"
"உன்னைவெச்சு என்னால் படம் பண்ண முடியாது. ஆனா, நாடகம் போடலாம். என்னோட 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் நீ மேஜரா நடிப்பியா?"
"கண்டிப்பா நடிக்கிறேன்."
"ஏப்ரல் 15 டிராமா போடப் போறேன். நீ ரெடின்னா, நான் ரெடி!"
(கீழே அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், அவசர அவசரமாகத் தலையை இட வலமாக ஆட்டுகிறார். மேடையில் ரஜினி ஒரு மாணவனைப்போல கைகளைக் கட்டுகிறார். உடம்பைக் குறுக்குகிறார்) "நீங்க செய்னு சொன்னா... நான் செஞ்சுடுறேன்!"
"நான் உனக்கு ரஜினின்னு எப்போ பேர் வெச்சேன்னு ஞாபகம் இருக்குதா?"
"ஃபுல் மூன் டே. அன்னிக்கு ஹோலி பண்டிகை!"
"பேர் வெச்சதில் இருந்து ஏழெட்டு வருஷம் ஹோலி பண்டிகை அன்னிக்கு என்னை வந்து பார்ப்பே. வர முடியலைன்னா... போன்லயாவது பேசுவே. அப்புறம் மறந்துட்டியேப்பா!"
(முகம் மாறுகிறது) "ஸாரி சார்... கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். இனிமே அப்படி நடக்காது!"
"கண்டக்டரா இருந்தப்போ, யாரையாவது லவ் பண்ணியிருக்கியா?"
"பண்ணியிருக்கேன்!"
"யார்னு என்கிட்ட மட்டும் சொல்லுவியா?"
"அப்புறம் சொல்றேன்!" (வாய்விட்டுச் சிரிக்கிறார்)
"உன் மனைவி லதாவை நீ எனக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகம் இருக்கா?"
"நல்லா ஞாபகம் இருக்கு. கலாகேந்திராவில் உங்களைச் சந்திச்சேன். 'இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு'ன்னு சொன்னேன். 'அது நல்லாப் படிச்ச பொண்ணு. நீ கோபக்காரன். எப்படிச் சமாளிப்பே?'னு கேட்டீங்க. அப்புறம் லதாகிட்ட, 'இவன் ரொம்ப நல்ல பையன்மா. நிறையக் கோபப்படுவான். நீதான் சமாளிக்கணும்'னு அட்வைஸ் பண்ணீங்க!"
"ஒரு குட்டிக் கதை சொல்ல முடியுமா?"
(கண்கள் அலைபாய யோசிக்கிறார்) "ஸாரி சார். நான் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன். இப்போ சொல்ல முடியலை!"
"உனக்குப் பிடிச்ச சூப்பர் ஸ்டார் யார்?"
"அரசியல்ல சொல்லலாமா... லீ க்வான் யூ. முன்னாள் சிங்கப்பூர் பிரதம மந்திரி!"
"நாம இவர்போல இல்லையேன்னு யாரையாவது பார்த்து ஆதங்கப்பட்டு இருக்கியா?"
"இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ஆதங்கப்பட்டு இருக்கேன்!"
"இப்போ ரேபிட் ஃபயர் ரவுண்ட். கேள்விகளுக்கு ஒரு வரியில், ஒரே வார்த்தையில பதில் சொல்லணும். உனக்கு தமிழ்ல ரொம்பப் பிடிச்ச இயக்குநர் யார்?"
"மகேந்திரன்."
"பிடித்த புத்தகம்?"
"பொன்னியின் செல்வன்."
"உன் பெஸ்ட் ஃப்ரெண்ட்?"
"ராஜ் பகதூர்!"
"ரொம்ப வருத்தப்பட்ட விஷயம்?"
"என் தந்தையின் மரணம்!"
"மறக்க முடியாத அவமதிப்பு?"
"நோ கமென்ட்ஸ்!"
"நிறைவேறாத ஆசை?"
"நோ கமென்ட்ஸ்!" (கண் கலங்குகிறது. மெதுவாக, விழியோரம் துடைத்துக்கொள்கிறார்.
"உன்னைப்பத்தி உனக்குப் பிடிச்ச விஷயம்?"
"உண்மையாப் பேசுறது!"
"நீ அரசியலுக்கு வருவியா... வர மாட்டியா?"
"அது ஆண்டவன் கையில் இருக்கு!"
"உன்கிட்ட நான் இவ்வளவு நேரம் கேள்வி கேட்டேனே... என்கிட்ட நீ ஒரே ஒரு கேள்வி கேளு!"
"எப்போ இதை முடிப்பீங்க?"
டாட்!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற